Tuesday 5 February 2013

தீண்டத்தகா விலைபொருள்...!

நம் கண்கள் மோதிக்கொண்டதால்
காதல் பற்றியதென்று கவிபாட துணியவில்லை நான்...!

பார்த்துக்கொண்டோம்,
முறைத்துக்கொண்டோம்,
பின் ஏனோ சிரித்தும் கொண்டோம்...!

மூளையின் தூசுபடிந்த மூலையில்
பளிச்சென்று ஏதோ ஒன்று படபடத்துக்கொண்டது...!

படபடத்து சென்றது பச்சைக்கிளியின்
ரெக்கையென நான் நினைத்திருக்க,
பறந்து சென்ற வவ்வாலோ
தலைகீழாய் விதிமாற்றி சிரித்தது...!

நீ ரோஜா மலர் என்றாய்...
பாதுகாப்பாய் முட்களை வெட்டித்தள்ளியபடி...!

மான் குட்டியின் மறுபிறவி நீ என்றாய்...
வேங்கையொன்றாய் எனக்காக காவல் இருந்தபடி...!

உன்னை எடுத்துரைத்த தந்தை
எனக்கு இற்றுப்போன கோடாலியானார்...
அதட்டி உருட்டிய தாயோ
எனக்கு சொக்கட்டானாய் மாறிப் போனாள்...
தாய் மறந்தேன், தந்தை மறந்தேன்,
கூடி குலவிய உறவுகள் மறந்தேன்...!

தேவதூதனாய் நீ என் கைப்பிடித்து
அணைத்துக்கொள்கிறாய்...
உன் முதுகின் பின்னால் எட்டிப்பார்த்த
சாத்தானின் உதடோ கள்ளத்தனமாய் சிரித்துக் கொண்டது...!

உன் நிழல் தீண்டுமிடம்
சுவர்க்கம் என்றே அடியெடுத்து வைத்தேன்...
புதைமணலாய் நீ என் பாதம் தாங்குவாய் என்று அறியாமல்...!

அவசர அவசரமாய் நீ நடத்திய
காதல் நாடகம் முற்றுபெற்றதாய் அறிவிக்கப்பட்டு,
அடுத்த அத்யாயம் உடனே துவங்கப்பட்டது...
மான் வேட்டை நடத்தும் வேடர்கள் மத்தியில்...!

இச்சைகள் கொண்டு பெண்மை ருசிக்கும்
பேய்களின் மத்தியில்
என் இதயம் பிடுங்கி
முள் படுக்கையில் தள்ளிவிட்டுப் போகிறாய்...!

தடுமாறி விழுகிறேன்,
காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துச் செல்லப்படும்
நூலறுந்த பட்டமாய் திசைமாறி போகிறேன்...
எச்சில் ஊற பின்தொடர்கிறது,
சதைத்தின்னும் பிணங்களின் கூட்டம்...!

செத்தும் நடக்கிறேன், வலித்தும் படுக்கிறேன்...

வாழ்க்கை கொடுக்கிறேன் என
என் மேனி வருடிக் கொள்கிறான் ஒருவன்...
காசு எறிந்து விட்டு
அலட்சியமாய் பிடித்திழுக்கிறான் மற்றொருவன்...!

இங்கு நான் இரையாகி கொண்டிருக்கிறேன்,
நாளும் பொழுதுமாய் விலையாகிப் போகிறேன்...!

நீ விதைத்துச் சென்ற விதையொன்று
இன்னுமோர் சிதையேற துடிக்கிறது...!
ஆண் என்றால் அவனொரு தரகன்...
பெண் என்றால் அவள் மற்றுமோர் பந்தயப் பொருள்...!

வேறு கண்ணோட்டம் தோன்றுவதில்லை உங்களுக்கு...
உங்கள் பார்வையில் நான் ஒரு விலைமகள்...!
என் சமூகம் ஒரு தீண்டத்தகா விளைநிலம்...
நீங்கள் தீண்டி விளையாடி விட்டுச் செல்லும் பொழுதுகள் நீங்கலாக...!

1 comment:

  1. செத்தும் நடக்கிறேன், வலித்தும் படுக்கிறேன்...
    ஏன்? எப்படி? எப்போது?

    ReplyDelete