Monday 3 December 2012

திருடா...!


என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!


1 comment:

  1. திருடனுக்கு தொழில் திருட்டு தானே//
    சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
    கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

    ReplyDelete