Wednesday 26 December 2012

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல் ) ...!

நினைவிருக்கிறதா உனக்கு?
பாய்மர கப்பல்கள் அணிவகுத்த நாள் ஒன்றிலே
உனக்கும் எனக்குமிடையில் நடந்த பார்வை பரிமாற்றங்கள்?

வேடிக்கை மும்முரத்தில் தோழிகள் பின்தங்க
எற்பாடு பொழுதிலே தனித்து விடப்பட்டு
தவிப்போடு தயங்கியே நானும் நடந்து வந்தேன்…!

துவைத்தறியா மேலாடை ஒன்றும்,
தலையிலே முண்டாசுமாய் நீ…

உன்னோடும் உன் வலையோடும் மோதிப்பார்த்து
வென்று விட்ட சுறா ஒன்று விட்டுச்சென்ற மிச்சங்களை
பொறுக்கி வலையென பின்னிக்கொண்டிருந்தாய்...!

என் சலங்கை ஒலியிலே கவனம் கலைந்து
இழையொன்று தவறிவிட
சுருக்கென கோபக்கனலை என்மீது வீசி நின்றாய்...!
ஒன்றுமறியாத நானோ என்னவோ ஏதோவென பதறித்தவிக்க
என் கண்களில் உவர்நீர் எட்டிப்பார்த்தது...!

என் கண்ணீர் கண்டதாலோ என்னவோ நானறியேன்,
வருணன் மழை அள்ளிச் சொரிந்தான்... நானோ
உன் முன் முழுதாய் நனைந்து நின்றேன்...!

ஒற்றை புருவம் தூக்கி அபிநயம் பிடித்து
நீ சிரித்த அந்த சிரிப்பில்
என் உதட்டோர புன்னகையை
உடனடியாய் களவாடிக் கொண்டாய்...!

உன் கூர்விழி அம்புகளால் என் இதயம் கிழித்து
உன் இதயம் உள்வைத்து என்னில் புதைந்து
என்னை உனக்காய் மாற்றியமைக்கிறாய்...!

தொலைத்து வந்த தோழியர்
மதி தொலைத்த என்னை கண்டெடுத்து
கைப்பிடித்து நகர்த்தி விட்டனர்...

நான் கடைக்கண் பார்வையொன்றை
உன்னிடத்தில் காவல் விட்டு
இதயமிழந்து புன்னை மர நிழலொன்றில்
என்றும் உனக்காய் தவமிருக்கத் துவங்கினேன்...!

உன்னில் நான் தொலைந்தேனென நான் நினைத்திருக்க
நீயோ என் விழி சொல்லும் சேதிக்காய்
கடல் காகம் தூது விட்டு கல்லுப்பின் மேல்
ஒற்றைக்கால் தவமிருந்திருக்கிறாய்...!

கார், கூதிர், முன்பனி, பின்பனியென
பெரும்பொழுதுகளும் கரைந்துவிட
இளவேனிற்லொன்றில் மீண்டும் நமக்குள் பார்வை சங்கமம்...!

தோழியொருத்தி விளரி இசைக்க என்னை மறந்து
உன்நினைவில் கானமிசைத்து கொண்டிருக்கிறேன் நான்...!
குறுகுறுக்கும் பார்வையொன்றில் எண்ணம் தடுமாற
என் கூந்தல் தாழையும் சரிந்தது...!

உன்முன் நான் இன்று என் முதுகுகாட்டி நிற்கிறேன்,
இருந்தும் முதுகோரம் உன் பார்வை வீச்சொன்றினால்
நாணம் கொள்ளச் செய்கிறாய்...!

இப்பொழுதல்லவா தெரிகிறது
மீன் பிடிக்க நீ வலை வீசும் போதெல்லாம்
என்னையல்லவோ தூண்டில் புழுவாய் துடிக்க விட்டிருக்கிறாய்...!

கடலலையில் வலை வீசி பழகிய நீ,
என் எண்ண அலைகளில் நீச்சல் கற்றுக் கொள்கிறாய்...!

இத்தனை பரவசங்கள் என்னுள் உன்னால்...
இன்று மூச்சுத்திணற வைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன?
பாரேன், கடைக்கண் பார்வை வீசியறியா
கேணியொன்றின் தவளையாய் இருந்த என்னை
உன் காதல் சாம்ராஜ்யத்துள் பதுக்கி விட்டு
ஒன்றுமறியா குழந்தை போல்
அப்பாவியாய் ஒரு பார்வை பார்ப்பதை?

ஆனாலும் உனக்கு நினைவிருக்கிறதா?
நினைவு கிடக்கையில் கழிந்திடா பொழுதொன்றாய்
இன்னனும் நம் பார்வைகளின் சங்கமம் மோதிக்கிடப்பதை...!


2 comments:

  1. சிறப்பான காதல் மொழிபேசும் கவிதை .அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் துணிவாக

    ReplyDelete
  2. கடற்காதலை அதன் முழு வீச்சமுடன் உணர வைத்து விட்டது உங்கள் கவிதை. நானும் கடல் சார்ந்த பிரதேசத்தில் உலா சென்று வந்த உணர்வு அருமை.

    ReplyDelete