Sunday 3 March 2013

உறவாடும் உயிர்ப்பூ...!

என் நினைவு பொக்கிசத்திலே
இவள் என்றும் கவலை ஏதுமறியா
ஒரு மான் குட்டியாய் சுற்றித் திரிகிறாள்...!

ஒவ்வொரு நாளையும்
எண்ணிக்கையால் நிரப்பி
மரணம் எதிர்நோக்கி
பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்பவர் மத்தியில்
மரணத்தின் நிழலை கூட
அவள் அறிந்தவளில்லை...!

அவளின் அறிமுகம்
இதோ என் மனதில்
மயிலிறகால் பளிச்சென
வருடி விட்டு செல்கிறது...!

விரித்த கூந்தலிலே
ஒற்றை சாமந்தி சூடி
என் அறை வாசல் கடக்கையிலே…
ஏதோ நினைத்துக்கொண்டவளாய்
பூனை பாதம் வைத்து
அருகில் வந்து நின்றவள் அவள்...!

வலி மறக்கும் காரணிகளை
தேடி தேடி அலுத்துப்போன
மூளை செல்களுக்குள்
சில நொடிகளில் ஆக்சிஜனை
ஏராளமாய் நுழைக்கச் செய்தவள்...!

இப்படியே முடிந்து தான் போகுமோ
என் ஆயுள் என்று விரக்தியாய் நானிருக்க
என் வேதனைகளை மறக்கடிக்கும்
வாசமாய் இந்த செண்பகப்பூ
சிரித்துக்கொண்டிருக்கிறாள்...!

எங்கும் அமைதியாய், சோகமாய்
ஒரு ராணுவ கட்டுப்பாட்டுக்குள்
கட்டுண்ட கைதி போலே
களையிழந்த சிறைச்சாலைக்குள்
இவளின் சிரிப்பொலி
குயிலின் கீதத்தை நினைவிருத்தி
பசுங்சோலையை உயிர்ப்பித்துக் கொடுத்தது...!

எத்தனை வாய்ப்பிருந்தும்
பிடிவாதமாய் கற்க மறுத்த
கொஞ்சும் மொழியை
அவள் பிஞ்சு வாயால் கேட்க
அத்தனை ஆனந்தம் எனக்கு...!

தட்டுத்தடுமாறி அவள் பேசும்
லயத்தில் தமிழ் இன்னும் இன்னும்
அழகாய் மிளிர்கிறது...!

தலையசைத்து தாளத்தோடு சிரிக்கையிலே
நடனமாடும் அவள்
ஜிமிக்கிகளோடு இணைந்து
கண்களும் அபிநயம் பிடிக்கும்...!

நாளை வருகிறேன், தமிழ் படித்துக்கொடு என
கையசைத்து அவள் விடைபெற்ற போது
நாளைக்கான விடியலையும்
நம்பிக்கையோடு விதைத்துச் சென்றாள்
எனக்கும் சேர்த்து...!

இதோ இன்று அவள்...
தண்ணீர் உறிஞ்சிய
இலவம்பஞ்சாய் வீழ்ந்து கிடக்கிறாள்...!

அசைவற்று கிடக்கும் வலக்கையினிலே
உயிர்திரவம் உள்நுழைந்து கொண்டிருக்கிறது...!
இடபக்கத்து முக்காலியிலோ அவளை
காப்பாற்ற துடிக்கும் தந்தையின் மனம்
மருந்துகளாய் இறைந்து கிடக்கின்றன...!

இன்னமும் உயிர் மிச்சம் இருப்பதை
ஏறி இறங்கும் அவள் நெஞ்சுக்கூடு
உணர்த்திக்கொண்டிருக்கிறது...!
என்றும் மாறா புன்னகை மட்டும்
அவள் உதட்டில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது...!

அவள் உயிர் பிடிக்கும் கிரகமாய்
புற்றுநோய் உருவெடுத்து
வந்த எமன் கொஞ்சம் தயங்கியே
எட்ட நின்று வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறான்...!

தன்னம்பிக்கை விதைத்துச் சென்றவள்
இன்னமும் அதை விட்டு விடாமல்
ஒரு சுவாச போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள்...!

இறைவா இவளுக்கு
வலி இல்லா மரணம் கொடு என
முடிவு புலப்பட்டு விட்ட
ஏழாம் அறிவு வேண்டிக்கொண்டாலும்
எழுந்து வா எழுந்து வா என
ஆழ்மனம் அழைத்துக்கொண்டிருக்கிறது...!

No comments:

Post a Comment