Saturday 13 April 2013

நினைவுகள் பலவிதம்...

நேத்து ஒரு நாய் குட்டி
மழைல நனைஞ்சுகிட்டு இருந்துச்சே,
அதுக்கு யாரு குடை பிடிச்சிருப்பா?

டிவில ஆன்னு வாய
தொறந்து வச்சிருந்த மைனா குஞ்சுக்கு
இன்னிக்கும் அதோட அம்மா
சாப்பாடு குடுத்துருப்பாங்களா?

இந்த ரபீக் வாப்பாவுக்கு சளி பிடிச்சிடுச்சாம்,
ஹச் ஹச்னு தும்மிட்டே இருக்காரு,
மூக்கு பொடிய எடுத்து போட்டு விட்டுருவமா?

எப்படியும் குடிசை இடிஞ்சி விழுந்துரும்னு
குப்பம்மா பாட்டி அழுதாங்களே,
நாம போய் அத விழாம பிடிக்க முடியுமா?

ஒரு நாளாவது சிங்கம் மேல ஏறி
படுத்து தூங்கணும்னு ரொம்ப நாளா ஆசை,
சிங்கம் நம்மள கடிச்சி தின்னுருமோ?

அனித்தாவோட தங்கச்சி பாப்பா சூப்பரா இருக்கா,
நம்ம வீட்ல கேட்டா அவள மாதிரியே
ஒரு தங்கச்சி பாப்பா வாங்கி தருவாங்களா?

என்னோட ரப்பர எடுத்து வச்சுட்டு
தரமாட்டேன்னு சொன்ன ரித்திஸ்க்கு
இந்த டோரா பொம்மைய குடுக்கலாமா? வேணாமா?

ஹோம் வொர்க் எல்லாம் நானே செய்யணுமாம்,
எழுதி எழுதி கை எல்லாம் ஒரே வலி,
இந்த அம்மாவே இதெல்லாம் செய்யலாம்ல,
கொஞ்சம் கூட பொறுப்பில்லாத அம்மா...,

ஐயையோ ஸ்கூலுக்கு லேட்டாச்சு,
ஆட்டோக்கார மாமா வந்துருவார் ...
ஆமா, அவருக்கு கால்ல அடி பட்டுருந்துச்சே
ஆட்டோ ஓட்டும் போது வலிக்குமா?

No comments:

Post a Comment