Thursday 15 May 2014

உறவுகள்...


உறவுகள்... 

இப்போ எல்லாம் சொந்தக்காரங்கனாலே கல்யாணம், காதுகுத்துல மீட் பண்றது தான்ங்குற அளவு ஆகி போச்சு. வீட்டை விட்டு வெளில கிளம்பினாலே பீச், சினிமா, ஹோட்டல், பார்க்ன்னு தான் கிளம்பிடுறோம். மிஞ்சி மிஞ்சி போனா பிரெண்ட் வீட்டுக்கு கெட் டுகதர்.. 

இதே கெட்-டுகதர நம்ம குடும்பத்தோட கொண்டாடுறோமா? 

முன்னாடி எல்லாம் லீவ் விட்டா பசங்கலாம் தாத்தா பாட்டி வீட்டுக்கு போய்டுவோம். ஒரு மாசம் அங்க உள்ளவங்களோட அடிச்சி புடிச்சி விளையாடிட்டு, அந்த ஊரோட ஒரு பாசத்த பந்தத உருவாக்கி விட்டுட்டு தான் திரும்பி வீட்டுக்கே வருவோம். 

ஆனா, இப்போ உள்ள குட்டி பசங்கள நினச்சா, பாவமா இருக்கு. 

ஒரு வாரம் முன்னாடி ஒருத்தங்க அப்பாவ பாக்க வந்திருந்தாங்க. அப்பா வெளில போய்ட்டாங்க, வெயிட் பண்ணுங்கன்னு தம்பி அவங்கள சோபால உக்கார வச்சான். அவங்க, எதோ கால்ல ரெக்கை கட்டி விட்ட மாதிரி வாட்ச் பாக்குறதும், வாசல்ல போய் எட்டிப் பாக்குறதுமா பரபரத்துட்டு இருந்தாங்க. அப்பா வந்ததும், பையனையும் பொண்ணையும் டான்ஸ் கிளாஸ் விட்டுருக்கேன், அங்க இருந்து கூட்டிட்டு போய் நீச்சல் கிளாஸ் விடணும், லேட் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க.. 

லீவ் நாள்ல கூட பசங்களுக்கு சுதந்திரம் இல்ல பாருங்க. அந்த டான்ஸ் அவங்கள ப்ரீயா விட்டா ஆடிக்கிட மாட்டாங்களா? இல்ல நீச்சல் தான் கத்துக்க மாட்டாங்களா? அவங்களா விரும்பி கேட்டா விடணும், திணிக்க கூடாது இல்லையா? 

இங்க நந்து (பக்கத்து வீட்டு ஏழு வயசு பொண்ணு) நல்லா பாட்டு பாடுவா, டான்ஸ் ஆடுவா, ரொம்ப திறமையா பதிலுக்கு பதில் காமடி பண்ணுவா... உடைஞ்சு போன பொருள் எடுத்து அவளா ஏதாவது செய்துட்டு இருப்பா. அவ எந்த ஸ்பெசல் கிளாஸ்சும் போனதில்ல. அவ செய்றத பாத்துட்டு சின்னதா ஒரு பாராட்டு, அவ முயற்சிக்கு தடை போடாம இருக்குறது, அப்புறம் சில திருத்தங்கள் மட்டும் கத்துக் குடுக்குறது, அவ்வளவு தான்... அவள் சுதந்திரம், அவள் வாழ்க்கை, அவள் திறமை... வேணா பாருங்க, நந்து சுய அறிவு உள்ள, பிரச்சனைகள திறம்பட சமாளிச்சு, எதிர்நீச்சல் போட தெரிஞ்ச பொண்ணா வருவா... 

சரி, சரி, பாருங்களேன், நான் சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்... 

நேத்து @14/05/14 சாயங்காலமா ஒரு நிச்சயதார்த்த வீட்டுக்கு போறதா தான் ப்ளான். ஆனா அப்பா திடீர்னு என்னை கொண்டு போய் ஒரு சொந்தகாரங்க வீட்டுல இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க... 

எங்க உறவுக்காரங்க எல்லாருமே சுத்தி சுத்தி இருக்குற பல கிராமங்கள்ல இருக்காங்க. திசையன்விளை, நாங்குநேரி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், செட்டிகுளம், அஞ்சுகிராமம்ல ஆரம்பிச்சு, வழுக்கம்பாறை வரை நீளும் உறவுகள். 

என்ன தான் பெரியவங்க ஒண்ணா இருந்திருந்தாலும், பசங்க வளர வளர மேல்படிப்பு, கல்யாணம்ன்னு ஒண்ணொண்ணா சிதற ஆரம்பிச்சிடுவாங்க. நான் கூட குடும்ப உறவுகள்ன்னு ரொம்ப ஒட்டிகிட்டதில்ல. நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தவரை எல்லா விசேசங்களுக்கும் போவோம், குடும்பம், உறவுகள்ன்னு அது ரொம்ப ஜாலியா போகும். அதுவும் நான் காலேஜ் அடியெடுத்து வச்சதுக்கப்புறம் என்னை கவனிக்கவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நேரம் சரியா இருந்துச்சு. அவங்களுக்கு என்னை தவிர யாருமே தேவையில்லைங்குற அளவு நிலைமை மாறி போச்சு.  அது தனிக் கதை... இப்போ தேவையில்லை. 

கிட்டத்தட்ட ஏழு வருஷம் கழிச்சு, இந்த வருஷம் தான் நான் மறுபடியும் அந்த வசந்த காலத்துல அடியெடுத்து வச்சிருக்கேன். 

ஆமா நேத்து நான் போன இடம் சுவர்க்கம். அப்படி தாங்க சொல்லணும். அது தான் உண்மையும் கூட... 

அவங்க எனக்கு தூரத்து உறவு தான். ஆனா என்னோட மாமா, சித்தி குடும்பங்கள் எல்லாருமே அங்க குவிஞ்சிருந்தாங்க. எதுக்கு? சும்மா அரட்டை அடிச்சு அப்படியே ஒரு சாயங்கால பொழுதை கழிக்க தான்... 

நான் அங்க போனப்பா இருட்டிடுச்சு. கிட்டத்தட்ட ஏழு மணிக்கு போய் சேர்ந்தேன். பெரும்பாலும் எல்லாருமே அங்க கூடியிருந்தாங்க. கிட்டத்தட்ட முப்பது பேர். அதுக்கும் மேலயே இருக்கும். எண்ண முடியல... தம்பி ஏற்கனவே அங்க போய், சமையல் அறைல பிசி. அங்க அவன் தான் மாஸ்டர் குக். 

அத்தனை பேரும் ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தாங்க. நான் போன உடனே ஓ..........ஹோன்னு பெரிய குலவை வரவேற்ப்பு. பெரியவங்க எல்லாம் எழுந்து வந்து கைய புடிச்சுட்டு நல்லாயிருக்கியா?ன்னு நாடிய புடிச்சு கொஞ்சி நலம் விசாரிச்சாங்க. அப்புறமா வா, வந்து உக்காருன்னு சோபால உக்கார சொன்னாங்க. அதுக்குள்ள மாமா பசங்க எல்லாம் அண்ணி இங்க வாங்க, இங்க வாங்கன்னு தரைல அவங்க கூட கைய புடிச்சு இழுத்து உக்கார வச்சுட்டாங்க. 

சரி, டிவில அப்படி என்ன பாத்துட்டு இருந்தாங்க? 

இதுவரைக்கும் நடந்த பாமிலி கெட்-டுகதர், எல்லாரும் சேர்ந்து போன டூர், வீட்டுக்குள்ள பசங்க பண்ணின சேட்டைகள் எல்லாம் போட்டோ எடுத்து வச்சு அத தான் போட்டு பாத்துட்டு இருந்தாங்க. ஒவ்வொரு போட்டோ வரும் போதும் சம்மந்த பட்ட ஆள் பெயர சொல்லி ஒரு ஓஹோ... இதுல பெரியவங்க, சின்னவங்க வித்யாசமே இல்ல, எல்லாருமே அவங்கள மறந்து கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. எப்படியும் ஊர் முழுக்க கேட்டுருக்கும். அந்த களேபரத்தையும் ஒருத்தன் போட்டோ, வீடியோ எடுத்துட்டு இருந்தான். 

நேரம் ஆக ஆக தரைல உக்காந்து பாத்துட்டு இருந்த பசங்க, அப்படியே படுத்தாச்சு. அப்படியே கன்னத்துல கைய முட்டுக் குடுத்து, ரசிச்சுட்டு இருந்த அவங்கள நான் ரசிச்சுட்டு இருந்தேன். என் சித்தி பொண்ணு ஒருத்தி, அவ அப்பாவ தரைல உக்கார சொல்லி, அவர் மடில கட்டிபுடிச்சி படுத்துகிட்டா. எனக்கு, நான் அம்மா, அப்பா,தம்பி எல்லாரும் ஒருத்தர் மடில ஒருத்தர் படுத்துட்டு டிவி பாக்குறது தான் நியாபகம் வந்துச்சு. 

டிவி பாத்து முடிச்சுட்டு எல்லாரும் முற்றத்துக்கு நிலா பாக்க போனோம். அங்கயும் முற்றத்துல எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கால் போட்டுட்டு அவங்கவங்க அப்பா அம்மா மடியில தல வச்சி படுத்தாச்சு. இடையிடைல கிண்டல் பண்ற மாமா பசங்கள அடிக்க துரத்திட்டு ஓடுற தங்கச்சிங்க.. அடியே அத்தான அடிக்காத, கட்டிக்கப் போறவன் நான்ங்குற கிண்டல் வசனம்... அப்பா, பாருங்கப்பா, இந்த பய என்னைய கட்டிக்க போறானாம்ன்னு அப்பா கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணி சிணுங்கல்கள்... அவன் சொல்றது தானே உண்மைன்னு சீண்டுற அப்பாக்கள்... அம்மாக்கள்...  ச்சே.. சான்சே இல்ல.. இதானே வசந்தம்... 

இங்க யாருமே பெரியவங்களா இல்ல. எல்லாருமே சின்ன பசங்களா தான் இருந்தாங்க. மாமா ஒருத்தங்க, அவங்க தங்கச்சிய கைய புடிச்சு வருடி குடுத்துட்டு இருந்தாங்க. தோள் மேல கைய போட்டு அப்படியே நெஞ்சுல சாய்ச்சு வச்சிருந்தாங்க. புள்ளைங்கள கட்டிகுடுக்குற வயசாச்சு, இங்க பாருயா, சிவாஜியயும் சாவித்திரியையும்ன்னு சித்தப்பா கிண்டல் அடிச்சுட்டு இருந்தாங்க... ஹஹா... 

அப்புறம், சாப்பாட்டு நேரம். ராத்திரி மணி பத்தரை. அப்பா அப்போ தான் வந்து சேர்ந்தாங்க. தம்பியும், இன்னும் சில மாமா பசங்க, பெரியம்மா, சித்தி பசங்க எல்லாரும் சமையல் முடிச்சாச்சு. பரோட்டா, சிக்கன் குருமா, சிக்கன் பொறிப்பு, முட்டை... கூடவே வெஜிடபிள் குருமா, காலிபிளவர் பொறிப்பு வேற. இதான் மெனு. இதுல காமடி என்னன்னா தம்பி சுத்த சைவம். ஆனா அவன் கைப்பக்குவம் இருக்கே... அட அட அட... அசத்திட்டான். 

எல்லாரும் உக்காந்து சாபிட்டுட்டு இருந்தோம். அப்போ இன்னொரு விஷயம் கவனிச்சேன். என் பெரியம்மா பையன், என் அண்ணன், அவனுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாச கைக்குழந்தை இருக்கு. அண்ணி (அவன் மனைவி) சாப்பிட உக்காந்ததும் ஓடி போய் பக்கத்துல உக்காந்துகிட்டான். என்ன வேணும்ன்னு கேட்டு கேட்டு வாங்கி குடுத்தான். சில பேர் இத சாப்பிடு, அத சாப்பிடுன்னு ஓவர் பாசத்துல சாப்பிட வைப்பாங்க, ஆனா இவன் வித்யாசமா கேட்டு கேட்டு வாங்கி குடுத்தது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. குழந்தைய தூக்கி வச்சுட்டு அவங்க சாப்பிட்டு முடிக்குற வரை கூடவே இருந்து பாத்து ரசிச்சுட்டு தான் இவன் சாப்பிட ஆரம்பிச்சான். ஹஹா இத எல்லாம் நம்ம பசங்க கவனிச்சா சும்மா விடுவாங்களா.... ஓஹோ.... தான்.... அண்ணி முகத்துல வெக்கத்த பாக்கணுமே... 

அப்படியும் இப்படியுமா கிண்டலும் சந்தோசமுமா வீடு வந்து சேர்றப்போ மணி பனிரெண்டு மேல ஆகிடுச்சு. இருமலும் காய்ச்சலும் சேர்ந்துடுச்சு. ஆனாலும் இது இதோட முடிஞ்சு போற விசயமும் இல்ல... இதோ இன்னிக்கி மாமா பையன் ட்ரீட் குடுக்குறான். போயே ஆகணும்ல.... எப்படி விடுறது? கிளம்பிட்டோம்ல... 

இந்த உறவுகள் அமைய என்ன வரம் வாங்கி வந்தோம் சாமி... அவ்வ்வ்வ் கண்ணு வேர்க்க ஆரம்பிச்சுடுச்சு. நான் இன்னொரு நாள் வரேன்... 
.
.


12 comments:

  1. இந்த உறவுகள் அமைய என்ன வரம் வாங்கி வந்தோம் சாமி... அவ்வ்வ்வ் கண்ணு வேர்க்க ஆரம்பிச்சுடுச்சு. நான் இன்னொரு நாள் வரேன்.//

    அந்த சுகம் அனுபவிச்சுப்பார்த்தால்தான் தெரியும்
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்போ எல்லாம் இந்த மாதிரி வாழுறது கிராமங்கள்ல மட்டும் தான் சாத்தியம் அண்ணா. அதுவும் கூட குறைஞ்சுகிட்டே தான் வருது. எங்க குடும்பத்துல கூட பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் மறுபடி ஆரம்பிச்சு வச்சிருக்காங்க. சம்மர் வெக்கேசன் மட்டும் தான் இப்படி இருக்கும். மற்ற நாட்கள்ல அவங்கவங்க வேலைய பாக்குறதே சரியா இருக்கும்

      Delete
  2. Replies
    1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  3. இதுபோன்ற உறவுகள் அமைய நிச்சயம் வரம் வாங்கித்தான் வரவேண்டும் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணா... மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா... உன்னதமான உறவுகள்

      Delete
  4. Replies
    1. தேங்க்ஸ். ஓட்டு போட்டதுக்கு

      Delete
  5. செம்ம ஜாலி டூர், இல்லையா.. ?

    ReplyDelete
    Replies
    1. செம ஜாலி அண்ணா... ஆனா டூர் இல்ல, சொந்தக்காரங்க வீடு. ஆனா ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்னு செம

      Delete
  6. ரசிக்கத் தக்க அனுபவம் தான். குடும்பத்துடன் இப்படி குதூகலமாக இருக்கும் அனுபவங்கள் இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் இல்லை.....

    ReplyDelete