Thursday 21 January 2016

உன்னைத் தேடித் தேடி...




செவ்வானம் சிவந்துக் கொண்டிருக்கிறது...

தூரக் கிழக்கில்
உன் சாயலொத்த மேகம் நகர்வது
எனக்குள் ஆற்றொண்ணா நினைவுகளை
உள்ளக்கிடக்கையில் சேமித்து விடுகிறது...

அந்திம நேரத்தில் தான்
உன் வரவிருக்கும் எப்பொழுதும்...

ஒரு தேவனைப் போல் நீ
என் முன் தோன்றுவாயென
வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கிடப்பேன்...

உன்னைத் தேடித் தேடி
களைத்துப் போன கண்களை பின்னாலிருந்து
பொத்திக் கொள்வதில் அப்படி
என்ன பேரானந்தமோ உனக்கு...

அடப்போடா, என்று தான் உன்
நேரடி தரிசனம் கிட்டுமெனக்கென
சலிக்கவிட்டு பெரிதாய் சிரித்துக் கொள்வாய்...

ஆனாலும் கோர்த்துக்கொள்ளும்
கைகளில் மெய்மறக்கச் செய்துவிடும்
வித்தையை ஒளித்தே வைத்துள்ளாய்...

அதனால் தானோ என்னவோ
உன்னையன்றி வேறெதுவும்
நினைவுகளில் படிவதாயில்லை...

உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ,
அன்றைய பொழுதின்
சரணாகதி இன்னமும்
மிச்சமிருக்கிறது எனக்குள்...

நின்னை சரணடைந்தேனென்ற உன்
வார்த்தைகள் மட்டுமே
நினைவுச் சுழலின் அடுக்ககங்களை
ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது...

ஆதியும் அந்தமுமாய்
என்னைத் தொலைத்து விட்டு
முடிவிலா ஒளிப்பேழைக்குள் உனக்காகவே
காத்திருப்பது இப்பொழுதெல்லாமெனக்கு
வாடிக்கையாகி விட்டது...

அதோஅங்கேப்பார்
மீண்டும் செவ்வானம்
சிவக்கத் துவங்கி விட்டது...

2 comments: