Monday, 12 January 2015

பிறந்தநாள்


ஜனவரி பத்து, இரண்டாயிரத்து பதினஞ்சு:

இந்த நாள்... அப்படி எல்லாம் பெரிய விசேசம் இல்ல, ஆனாலும் ஒரு பட்டாம்பூச்சி பொறந்தநாள்.... பட்டாம்பூச்சி யார்னு எல்லாம் உங்களுக்கு சொல்லவே தேவையில்ல, நான் தான்னு டக்குன்னு தெரிஞ்சி வச்சிருப்பீங்களே....

பிறந்தநாள்னா எல்லாருக்கும் விசேசம் தான். எனக்கும் அப்படி தான் இருந்துச்சு, ஸ்கூல் படிக்குறப்போ, யூ.ஜி படிக்குரப்ப எல்லாம். ஆனாலும் கொஞ்ச வருசமா எப்.பில தான் பிறந்தநாள் கொண்டாடிட்டு இருந்தேன். எனக்கான உலகம் அவ்வளவு சுருங்கியும் போய்டுச்சு...

ஆனாலும் என்ன, ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆரம்பிச்ச அம்மாக்கள், அக்காக்கள், தோழிகள், தோழர்கள்... இருங்க இருங்க, கார்த்திக் இப்படி எல்லாரோட வாழ்த்து மழைலயும் நனஞ்சுட்டே தான் இருக்கேன். இன்பாக்ஸ், வாட்ஸ் அப், கால்ஸ்ன்னு ஹிஹி கொஞ்சம் பிசி தான்.

மதியம் சாப்பிட்டு முடிச்சதுமே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எங்கயாவது வெளில போகலாமோன்னு யோசிச்சுட்டே இருக்கேன், திடீர்னு கதவு டபடபனு தட்டுற சத்தம்...

டேய், யாரா இருந்தாலும் இருங்கடா, மெதுவா தான் வர முடியும்னு சோம்பல் முறிச்சு, மெதுவா போய் கதவ தொறந்தா, "ப்ப்ப்ப்பே....."ன்னு கத்திகிட்டே ரூமுக்குள்ள மாமா பசங்க, பொண்ணுங்க, தங்கச்சிங்க, தம்பிங்கன்னு ஒரு கும்பல் கத்திகிட்டே உள்ள வருது. ஏய் ஏய்... புள்ளைங்க பயந்துருவாங்க, பிசாசுங்களா வெளில போங்கன்னு எல்லாரையும் வெளில விரட்டினா... போனா தான....

ஹே.... குருவி, குருவி, குருவின்னு அப்படியே நளன் தமயந்தி இருந்த கூட்டை தூக்கிட்டான் ஒருத்தன். எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. கண் எல்லாம் கலங்கி, அழுதுட்டே, "ஏல, அது முட்டை போடுறதுக்காக கூடு எல்லாம் கட்டியிருக்குல, கலைச்சுராதல"ன்னு தளுதளுதுட்டேன். அப்படியே ஒரு மயான அமைதி... சரி, சரி, வெளில வாங்கடேன்னு ஒருத்தன் எல்லாரையும் கிளப்பி ரூம் விட்டு வெளில போய்ட்டாங்க.

எனக்கு, நளனும் தமயந்தியும் என்ன ஆனாங்களோன்னு பதற்றம். மெதுவா எட்டிப் பாத்தேன். அப்படியே பானை பின்னால பம்மி போய் இருந்தாங்க... சரி சரி, டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு மெதுவா பெட்ல போய் உக்காந்தேன். என் தங்கச்சிங்கள்ல ஒருத்தி வந்து, அக்கா, ஒரு சுடி எடுத்து போட்டுக்கோ, வெளில போயிட்டு வருவோம்னு சொன்னா...

சரின்னு சொல்லிட்டு நானும் கிளம்பி வெளில வந்தா, ஹே....ன்னு மறுபடியும் இரச்சல். ஒருத்தன் ஓடி வந்து என்னை அலேக்கா தூக்கிட்டு, அண்ணி, நாம இப்போ வெளில போறோம்னு சொன்னான். டேய் டேய் விடுடான்னு பதறினா, அதுக்குள்ள பாட்டி வந்து வயசு புள்ளைய தூக்குறியே, உனக்கு அறிவு இருக்கான்னு ஒரு மாதிரி டென்சன் ஆக, நீ தூக்கிட்டு போ மக்கான்னு நான் சொல்லிட்டேன். ஹஹா... எப்படியும் நாங்க வெளில போனதுக்கு அப்புறம் ஊரை கூட்டி குலவை வச்சிருக்கும். அத பத்தி நமக்கு என்ன?

என்னை எல்லாருமா சேர்ந்து குண்டு கட்டா தூக்கிட்டு போய் மாமா கார்ல போட்டு, நேரா கோவில் போனோம். அங்க அப்பா, தம்பி எல்லாரும் இருந்தாங்க. அப்படியே உள்ள போய் சாமிகிட்ட ஒரு வணக்கத்த வச்சுகிட்டு, நெத்தியில நாமத்த இழுக்க வந்தவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி, கோவில் திண்டுல உக்கார போனேன்.

என்ன, இங்க உக்காந்தா எப்படி, நாம வேற இடத்துக்கு போகப் போறோம்னு அடுத்த அதிர்ச்சி. டேய், எது செய்தாலும் சொல்லிட்டு செய்ங்கடான்னு கெஞ்சினாலும் எங்க விடுறாங்க. மறுபடியும் காருக்குள்ள ஏத்தி விட்டுட்டாங்க.

கார் சீறி பாய்ஞ்ச திசையையும், அவங்க பேசினதுலயுமே தெரிஞ்சிடுச்சு எங்க போறோம்னு. ஆமா, அம்மாவ பாக்கத் தான் போயிட்டு இருக்கோம்...

வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ள போனதுமே, சித்தப்பா சித்தி எல்லாரும் வெளில வந்தாங்க. வாமா, நல்லாயிருக்கியான்னு கேட்டதும் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ன்னு மட்டும் தலையாட்டிக்கிட்டேன். அதென்னமோ, அவங்கள பாத்தாலே ஒரு வன்மமோ குரோதமோ மனசுக்குள்ள வந்து ஒட்டிக்குது. அதுக்குள்ள பசங்க என்னை தர தரன்னு இழுத்து அம்மா கிட்ட கொண்டுட்டு போய்ட்டாங்க.

அம்மா... இவள பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. பாக்கணும்னு கூட தோணாம எல்லாம் போய்டல, எனக்கு என்னமோ, அவ என் கூட இருக்குற மாதிரி பீல். அதனால தான் அவள இங்க வந்து பாக்க தோணல. ஆனாலும் அவள தொட்டா கிடைக்குற சுகம் தனி சுகம் தான். அதிகம் எல்லாம் அங்க இருக்கல, சித்தப்பா சித்தி பாத்துட்டு நின்னது உறுத்திச்சி, போலாம்டேன்னு கிளம்பிட்டேன். எல்லாரும் அம்மாவுக்கு அத்த பை, பெரியம்மா பைன்னு சொல்லிட்டே வந்தாங்க... திரும்பி பாத்தேன், அம்மாவும் கிளை அசைச்சு டாட்டா காட்டின மாதிரி இருந்துச்சு.

வீட்ல இருந்து கிளம்பி, கோவில், அம்மா பாக்கன்னு போனது எல்லாமே வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்துல. பயங்கர ஸ்பீட். எலேய் மெதுவா மெதுவான்னு சொன்னா எவன் கேக்குறான். சரியா வீட்டு பக்கம் வரவும் டர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்..... டயர் பஞ்சர். சரி, சரி, அத எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சா, அடுத்த ஷாக்....

எல்லாருமா சேர்ந்து கேக் எல்லாம் எடுத்து வச்சு, ஹாப்பி பர்த்டே பாடி, பலூன் ஊதி, ஒண்ணு விடாம ஒடைச்சு, கேக் வெட்டினதும் மூஞ்சி முழுக்க அப்பி விட்டுட்டாங்க. டிஷ்யூ பேப்பர் எடுத்து மூஞ்சிய தொடைக்க உள்ள வரேன், பின்னாலயே இன்னொருத்தன் வந்துட்டான். குருவி எல்லாம் நல்லா இருக்கான்னு மறுபடியும் கிட்ட போக ட்ரை பண்ண, கொன்னுருவேன், ஓடிருன்னு பிடிச்சி வெளில தள்ளி கதவ பூட்டிட்டேன்.

அப்புறமாவாவது நான் கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும்ல... அது இல்லாம, குறிஞ்சியும் மந்தாகினியும் இருக்குற கூட்டை கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணனும்னு சொல்ல, சரி, சரி, நாங்க செய்து தரோம்னு ஆசை காட்டி, அந்த கூட்டை மெதுவா வெளில தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்படியே வாசல்ல நடைல கொண்டு போய் கூட்டை வச்சிட்டு உள்ள இருந்த பானைய கழட்ட ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க கொஞ்ச குரூப். இன்னும் கொஞ்ச பேர் பஞ்சர் ஆன டயர மாத்துறதுல மும்முரமா இருக்க, நானும் அவங்க கூட போய் ஒரே ஒரு செல்பி எடுக்க ட்ரை பண்ணி, அது நல்லா இல்லன்னு டெலிட் பண்ண போனா, ஒருத்தன் ஓடி வந்து மொபைல புடிங்கிட்டான். அங்க நடந்த களேபரத்த வேடிக்கை பாத்ததுல இங்க குருவி கூட்டை திறந்து வச்சிட்டான் போல... விருட்டுன்னு மந்தாகினியோட ஜோடி வெளில பறந்துடுச்சு.

ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி ஆகிடுச்சு. அது பாட்டுக்கு வெளில மாமரம் உள்ள புகுந்து காணாம போச்சு. கண்ணீர் முட்டி, கை எல்லாம் நடுங்கி அப்படியே மடிஞ்சி உக்காந்துட்டேன். எல்லாருக்குமே ஷாக் தான். நான் அழுவேன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

அண்ணி, அண்ணி ப்ளீஸ் அண்ணி, அழாத அண்ணி, வேற வாங்கி தரேன் அண்ணின்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டான். காக்கா கழுகு மாட்டி அது செத்து தான போகும்? நினைக்க நினைக்க எனக்கு இன்னும் இன்னும் அழுக வருது.

அப்ப தான் ஒருத்தன் சொன்னான், அது திரும்ப வருதுன்னு. அதால அதிக தூரம் எல்லாம் பறக்க முடியல. நேரா வந்து தரைல உக்காந்தது. எப்படியாவது அத பிடிச்சிடணும்டான்னு ஆள் ஆளுக்கு பொறி வச்சி காத்திருக்க, ஒவ்வொரு தடவையும் அது பறந்து போய் உயரமா உக்காரும், அப்புறம் கொஞ்ச நேரத்துல கூட்டுக்குள்ள இருக்குறவங்கள பாக்க கீழ வரும்.

எப்படியோ ஒரு வழியா அத வீட்டுக்குள்ள பறக்க விட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி, இருட்டுல அத ஒருத்தன் பிடிச்சு தந்துட்டான். ஹப்பாடா.... திரும்பவும் அத கூட்டுக்குள்ள விட்டதும் தான் நிம்மதி...

எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நான் ஆல்டர் பண்ணினா கூட்டையே பாத்துட்டு இருக்கேன். இப்பவே குறிஞ்சியும் அதோட ஜோடியும் கூடு கட்ட தேங்காய் நார்கள சேர்க்க ஆரம்பிச்சாச்சு. இங்க நளனும் தமயந்தியும் கூட்டை பிரிச்சு போட்டு மராமத்து வேலை பாத்துட்டு இருக்காங்க...

இப்படி ஒரு பரபரப்பான பிறந்தநாள் இப்ப தான் அனுபவிச்சேன்...

எப்படியோ, மந்தாகினிக்கி நாளைக்கு கூடு ரெடி ஆகிடும்... வாழ்க ஜோடிகள்.... 

Sunday, 11 January 2015

பறவை மனமும் பல் மரமும்...


இந்த பெட் ஷாப்ல குருவிங்கள எல்லாம் அடைச்சு வச்சிருக்குரத பாத்து நான் கூட இத எல்லாம் நாம வாங்கி பறக்க விட்ருவோமான்னு சினிமாட்டிக் தனமா யோசிச்சதுண்டு. அதாவது, தேவதை மாதிரி வெள்ளை உடுப்பு போட்டுட்டு ஒவ்வொரு புறாவா தலைக்கு மேல தூக்கி புடிச்சி ஒரு குதி குதிச்சி பறக்க விடுற மாதிரி...

நோ...நோ... பேட் வேர்ட்ஸ்...

புறாக்களாவது பரவாலன்னு நினைக்குறேன், காரணம், எங்க வீட்ல முன்னாடி நூத்துக்கணக்குல புறாக்கள் இருந்துருக்கு. எல்லாமே காலைல பறந்து போயிட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு வரும். சாயங்காலம் அதுங்க வீட்டு மொட்டை மாடியில அரிசி, கம்பு, கொண்டகட்டிக் கடலை, இன்னும் பல பல ஐட்டங்கள ஸ்வாகா பண்ணிட்டு அதது கூட்டுக்குள்ள போய் அடஞ்சுக்கும்... அந்த நேரத்துல அதுகள பாக்குறதே ஒரு பேரானந்தம். அப்பப்ப நானும் தேவதையா மாறி, புறாக்கள பறக்க விட்டதும் உண்டு. என்ன, அப்போ நான் ரொம்ப குட்டி தேவதையா இருந்தேன். அதனால தலைல ஒரு மலர் கிரீடம் நீங்க தாராளமா கற்பனை செய்துப் பாத்துக்கலாம். முன் பல்லு ஒண்ணை காணோம்னு தேடாதீங்க, முந்தின நாள் தான் அதை மண்ணுல புதைச்சு, தண்ணி ஊத்தி தடவி குடுத்துட்டு வந்துருக்கேன். அநேகமா எங்க வீட்ல பல் மரம் ஒண்ணு யார் கண்ணுக்கும்  தெரியாம  முளைச்சிருக்கலாம்....

சரி, இப்போ விசயத்துக்கு வருவோம். நிஜமாவே இந்த பறவைகள எல்லாம் வெளில விட்டுட்டா சுதந்திரமா வாழுமா? இந்த கேள்விய நாமளே கேட்டுட்டு நாமளே பதில் சொல்லிக்கவும் கூடாது தான். அது இந்த ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் மாதிரி மனுஷாதிக்கம். ஆனாலும் நேத்து, நான் அடைச்சு வச்சிருந்த குருவிகள்ல மந்தாகினியோட ஜோடி திவா, விருட்டுன்னு வெளில பறந்துடுச்சு.

அது திரும்பி வரணும்னோ, வரும்னோ நான் அப்போ யோசிக்கவே இல்ல. அது பாட்டுக்கு பறந்து போய்டுச்சே, இங்க காக்காக்கள் நிறைய உண்டே, படக்னு அத ஒரே கொத்துல சாகடிச்சிடுமேன்னு தான் பயந்தேன். கூடவே, அதுக்கு அத்தனை வலிமையான சிறகுகள் வேற உண்டான்னு ஆச்சர்யம். ஒரு அஞ்சு நிமிச அமைதி, சலனம் எல்லாத்துக்கு பிறகு, அது திரும்பி வந்துச்சு.

உங்கள விட்டா எனக்கு யாரைத் தெரியும்னு அது கேட்ட மாதிரி இருந்துச்சு. பக்கத்துல போனப்ப விருட்டுன்னு அது பறந்தத பாத்து, நான் சுதந்திரமா இருக்க விரும்புறேன்னு சொல்ற மாதிரியும் இருந்துச்சு.

கொஞ்சம் நானும் ஒரு பறவையா மாறி அதோட எண்ண ஓட்டங்கள படிக்க பாத்தேன். ஒரு சமயம் மனம் கழுகா மாறுது, உன்னை கொத்தி திங்குறேனா பார்ங்குது, காக்கா மனமோ, இன்னிக்கி நல்ல சாப்பாடுன்னு சப்பு கொட்டுது. மறுபடியும் சிட்டுக்குருவியா மாறி, என்னை எதுவும் செய்துடாதன்னு கெஞ்சுது. அப்பப்பா, பறவை மனம்னு இனி சொல்லக் கூடாது போல... காக்கா மனம், சிட்டுக் குருவி மனம்ன்னு தனி தனியா பிரிச்சுக்கணும்.

எப்படியோ ஒரு மணி நேர அதிதீவிர போராட்டத்துக்கு பிறகு, கூட்டுக்குள்ள விடப்பட்ட திவா, இப்போ அப்படி எந்த விதமான சம்பவமும் நடக்கவே இல்லங்குற ரேஞ்ச்ல மந்தாகினிய கரெக்ட் பண்ற வேலைல தீவிரமா இறங்கியாச்சு...

சுதந்திரமா எல்லாம் வேணாம், நீங்க கூட்டுக்குள்ளயே இருங்கன்னு என் தேவதை மனம், கொஞ்சம் மனுசத்தனமா அதிதீவிர முடிவெடுத்துடுச்சு...

அப்படியே வாய்ல இருந்து ரெண்டு கோரப்பல்லும் தலைல ரெண்டு எருமை மாட்டு கொம்பும் முளைக்குறதுக்கு முன்னாடி, எல்லாரும் எஸ்கேப் ஆகிடுங்க... நான் கொஞ்சம் பறவைகள் உலகை ரசிக்கப் போறேன்...

Sunday, 4 January 2015

நானென்னும் நான்



இந்த சமூகம் உனக்கு என்ன செய்ததுன்னு கேக்குறத விட, இந்த சமூகத்துக்கு நீ என்ன செய்தன்னு யோசிச்சுப் பாருன்னு சொல்லுவாங்க.

நானெல்லாம் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் அலட்டல் டைப். காசு பணத்த கண்ணால பாக்குறோமோ இல்லயோ ஏதாவது வேணும்னு முடிவு பண்ணிட்டா அத அடைஞ்சே ஆகணும்னு அடம் புடிக்குற கேரக்டர். நிஜம் சொன்னா, அதிகமா அடம்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாத்தாலே குறிப்பறிஞ்சு வாங்கித் தந்துடுவாங்க. காசு பணத்தோட அருமை தெரியாது. ஒரு பொருளோட மதிப்பு தெரியாது, வேணும்னா வேணும், அவ்வளவு தான்.

தினமும் ஒரு ட்ரெஸ், செருப்பு. அது மட்டும்னாலாவது பரவாலயே, அதுக்கு மேட்சா வளையல், பொட்டு, ஹேர் பின், ரிப்பன்னு அலட்டல் கொஞ்ச நஞ்சமில்ல. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்காதீங்க, அதெல்லாம் அப்படி தான்.

ஆனாலும் என்னோட இந்த கேரக்டருக்கு பின்னணியில ஒருத்தங்க இருந்தாங்க. என் பாட்டி. அம்மாவால என்னை அதிகம் கண்டிக்க எல்லாம் முடியாது. காரணம் பெரியவங்கள பகைச்ச மாதிரி இருக்குமே. ஆனா இதெல்லாம் எந்த வயசு வரைக்கும்னு நினைக்குறீங்க, ஆறு, ஏழு வயசு வரைக்கும் தான். அப்புறமா தான் நான் கொஞ்சம் கொஞ்சமா அம்மா கண்ட்ரோல்க்குள்ள வர ஆரம்பிச்சேன்.

அம்மானா அன்பாவே இருந்துருக்கலாம். ஆனா அவ எனக்கு ஒரு நல்ல தோழியா இருந்தா. செய்யாதேன்னு எதையும் கண்டிச்சதில்ல, செய்ன்னு கட்டயப்படுத்தினதுமில்ல. ஆனா தந்திரமா ஒண்ணு செய்வா, என் பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியும், அவ செய்தா எல்லாமே சரியா செய்வான்னு ஒரு புகழ் மாலை. தப்பா செய்து அம்மா வார்த்தைய தப்பாக்கிடக் கூடாதுங்குற ஒரு ஜாக்கிரதை உணர்வ எனக்குள்ள விதைச்சு விட ஆரம்பிச்சுட்டா. சரி, அம்மாவ கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுவோம்.

ஸ்கூல் லைப். வழக்கமா எல்லோருக்கும் இருக்குறத போல தான் எனக்கும் இருந்துச்சு. என்னதான் அன்பையும் பண்பையும் புரிஞ்சு வச்சிருந்தாலும் அலட்டல் மட்டும் குறையவே குறையாது. அதிகாரம் பண்றதுங்குறது என்னோட ரெத்தத்தோட ஊறி போன விசயமா கூட இருக்கலாம். நான் என் அப்பாவையும் பாத்து வளர்ந்தவ இல்லையா, அப்பாவுக்கு எல்லாரும் குடுக்குற மரியாத, கைகட்டி நிக்குற பண்பு, கொஞ்சம் எனக்கு தலைகனத்தை அதிகமாக்க தான் செய்திருந்தது.

ஒரு பார்வை பாத்தாலே என்னோட கட்டளைய எல்லாரும் புரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். கூட படிக்குற பிரெண்ட்ஸ் முதல் கொண்டு , ஊருல கூட சுத்துற பசங்க வரைக்கும் எல்லாரும் என்னை தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அதுக்கான காரணம் என்னன்னு எப்படி யோசிச்சாலும் தெரியாது. அம்மா கிட்ட கேட்டா, உன்னோட புன்னகையும், கண்ணும் தான்னு சொல்லுவா. என்னதான் மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சுகிட்டாலும் அதையும் மீறின ஒரு குழந்தைத்தனம் உன்கிட்ட உண்டுன்னு சொல்லுவா... உண்மையான்னு மத்தவங்க தான் சொல்லணும்.

சரி, இது எல்லாமே என்னோட செவன்த் வரைக்கும் தான். அப்புறம் எய்த் வந்தப்ப கூடவே வந்தவன் மூர்த்தி. அவன எல்லாம் பாத்தா பாத்துகிட்டே இருக்கலாம். ரொம்ப சீக்கிரமா எல்லார்கிட்டயும் ஒட்டிகிட்டான். ஸ்கூல்ல மிஸ்ல இருந்து, பசங்க பொண்ணுங்க தாண்டி, அவங்க அம்மா அப்பா வரைக்கும் பரிட்சயம் ஆகிட்டான். அவன் முதல்ல பிரெண்ட் ஆனது எனக்கு இல்ல, என் அம்மாவுக்கு. அதிகமா இழுக்க வேணாம், எப்படியோ அவனும் நானும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம். டாட்.

மூர்த்தி எங்க லைப்ல (ஒருமை இல்ல, பன்மை தான்) வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையோட அடுத்த அடி எடுத்து வைக்கப் பழகினோம். ரோட்டுல ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தா, அய்யேன்னு முகம் சுளிச்சு ஒதுங்கி போற எங்க மத்தியில ரெத்தக்கறையோட அத தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுறவன். காக்காவுக்கு இறைச்சு வீசுற சோத்துப் பருக்கைய கிண்ணத்துல வச்சி வைக்கணும்ன்னு தலைல குட்டி சொன்னவன். மாசத்துக்கு ஒரு யூனிபார்ம் தைக்குற எங்க மத்தியில அறுந்து போன பட்டன கூட தேடி திரியுறவன். அவனை பொறுத்தவரைக்கும் எதையுமே வீணாக்கக் கூடாது.

என் கிட்ட இன்னொரு குணமும் இருந்துச்சு, கொஞ்சம் அழுக்கை பாத்தாலே முகம் சுளிப்பேன். வீட்டுல ஆட்டுகுட்டியவே தினமும் மைசூர் சாண்டல் போட்டு குளிப்பாட்டி மணக்க மணக்க திரிய விடுறவ. அதுங்க மட்டும் சளைத்ததா என்ன, அப்படியே என் குணம். ஒரு அழுக்கு மேல ஒட்டிரக் கூடாது. உடனே பக்கத்துல இருக்குற யார்கிட்டயாவது கொண்டு போய் காலை தூக்கி காட்டும். உடனே கழுவி விடணும், இல்லனா அவங்க மேலயே நல்லா தேய்ச்சி துடைச்சி சுத்தமாக்கிக்கும். சரி, இவங்கள பத்தி அப்புறம் பேசலாம், என் விசயத்துக்கு வருவோம்.

அவன் கூட டென்த் வரைக்கும் படிச்சோம். அந்த மூணு வருசத்துல எங்களுக்குள்ள எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்கள்ல லீவ் நாட்கள்ல ஊர் ஊரா சுத்தி மக்களை படிக்க ஆரம்பிச்சோம். எதுவுமே புரியாது, ஆனாலும் எதோ புரியுற மாதிரி தோண ஆரம்பிச்ச காலம் அது. நட்பு புள்ளிகள்குள்ள நானும் ஒரு சின்ன புள்ளி, அவ்வளவு தான். நாங்க நாங்களா இருந்தோம். போற இடமெல்லாம் நான் உக்காரவும் படுத்து தூங்கவும் எப்பவுமே இடத்தை சுத்தப்படுத்தி தர்றது பசங்க தான். அப்புறம் அத எல்லாம் நான் பழகிகிட்டேன்னு சொல்றத விட, நான் இருக்குற இடத்த நானே சுத்தமா வச்சுக்க பழகிகிட்டேன்.

புளிச் புளிச்ன்னு துப்புர வெத்தல வாய் பாட்டிய ரசிக்க முடிஞ்சுது.
அந்த வெத்தல வாசத்த அப்படியே உள்ளிழுத்து அனுபவிக்க முடிஞ்சுது. சொந்த பாட்டியோட பழம்சீலை வாசத்துல அடிக்குற போதை மாறி, வியர்வை வாடை அடிக்குற பாட்டிகளோட சீலை வாசம் நல்லா இருந்துச்சு.

இப்போ முதல் பாராவ மறுபடியும் படிக்கலாம். இத இத செய்தோம்னு சொல்றத விட மனசுக்கு நிறைவா செய்தோம், மனசுக்கு நிறைவா வாழ்ந்தோம். பொட்ட புள்ளைய பெத்துப் போட்டுருக்கான்னு அடிக்குரவங்க கிட்ட எதுத்து பேசி அடி வாங்கியிருக்காங்க எங்க பசங்க. எதுக்கு இத்தனை புள்ளைங்கள பெத்து போட்ருக்கீங்கன்னு குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் செய்யவும் தயங்குனதில்ல. பொண்டாட்டிய காசுக்கு விக்குறியேன்னு கேட்டு மிதி வாங்கவும் தவறினதில்ல, ரெத்தம் குடுத்தா எதுவும் ஆகாதுன்னு பயத்த தெளிய வைக்க நட்ட நடு ரோட்டுலயே ரெத்தம் குடுக்கவும் தவறுனதில்ல. சின்ன பசங்கடா நீங்க, இப்பவே ரெத்தம் குடுக்க கூடாதுன்னு சொன்னவங்கள கூட, முதல்ல நாம செய்துக் காட்டணும், அப்புறம் அவங்களே வருவாங்கங்குற கொள்கை உள்ளவன் மூர்த்தி.

இன்னிக்கி வருசத்துல ஒரு ட்ரெஸ் எடுக்கணும்னாலே ரொம்ப யோசிக்குறேன். என்னோட செருப்பு வாங்கி எட்டு மாசம் ஆச்சு. இது அறுந்தா தான் அடுத்தது. என் காலேஜ் பேக் பாத்து புள்ளைங்களே சிரிப்பாங்க. ஆனா இதெல்லாம் அத்யாவசியமா மட்டும் தான் இருக்கணும், ஆடம்பரமா இருக்கக் கூடாதுன்னு தீர்மானமா என்னால இருக்க முடியுது.

பெருசா எதையுமே சாதிச்சுடல. புரட்சின்னு எதையும் செய்யணும்ன்னும் நினச்சதில்ல. ஆனா போற வழில அன்பை விதைச்சு போனோம்ன்னு ஒரு சின்ன திருப்தி. உடம்ப வித்து காசு பாத்துட்டு இருந்தவங்கள தையல் படிக்க வச்சு, அதுக்கான வருமானத்துக்கும் உதவி செய்ய முடிஞ்சிருக்கு அப்பா உதவியோட. காலேஜ்ல அடியெடுத்து வைக்க ஆரம்பிச்சதும் சொந்தமா சம்பாதிக்க முடிஞ்சுது. அத வச்சு பதிமூணு குழந்தைகள தத்தெடுக்கவும் முடிஞ்சுது.

ரெண்டு வருசமா அவங்கள நான் கைவிட்டுட்டேனோன்னு ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்துது. காலைல அப்பாகிட்ட ஹோமுக்கு போகணும்னு சொன்னேன். அப்போ பொங்கலுக்கு பிள்ளைங்களுக்கு நீயே புது ட்ரெஸ் எல்லாம் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுன்னு சொன்னாங்க. நான் கைவிட்டாலும் அப்பா கைவிடலன்னு புரிஞ்சுது. இந்த அப்பா மேல பொறாமை வருது. இவர் ஏன் இப்படி இருக்குறார்?

இந்த காயு செதுக்கப்பட்டவள். இது தான் என் குணம்ன்னு தெரியாமலே வளர்ந்த என்னை, இது தான் நீ-ன்னு செதுக்கி விட்டவங்க நிறைய பேர். காலம் எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்குமான்னு தெரியாது, அடுத்து நடக்கப் போறது என்னன்னும் தெரியாது. திரும்பி பாத்தா நேத்து என் கூட  இருந்தவங்க பலபேர் இன்னிக்கி காணாம இல்ல, இல்லாமலே போய்ட்டாங்க. ஆனாலும் நான் நானாவே இருக்கணும்னு நினைக்குறேன்... இருப்பேன்... இருக்கணும்...



Friday, 26 December 2014

தற்கொலை கதைகள்


தற்கொலை....

கனநேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம சட்டுன்னு பண்றதுல இருந்து பக்காவா ப்ளான் பண்ணி செய்ற வரைக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு.

இப்ப ஏன் திடீர்னு தற்கொலை பத்தி பேசுறேன்னு ரொம்ப யோசிக்காதீங்க, நான் எல்லாம் தற்கொலை பண்ணிக்குற அளவுக்கு அவ்வளவு பெரிய தைரியசாலி எல்லாம் கிடையாது. அப்படி பட்ட நான் கூட சட்டுன்னு எமோசனலா முடிவெடுக்க வேண்டிய நிலைமை கூட வந்துருக்கு. என்னோட மனசுக்குள்ள எப்பவுமே ஒரு ஆசை உண்டு, சாவோட விளிம்பு வரைக்கும் போய்ட்டு சட்டுன்னு திரும்பி வந்துடணும்னு எப்பவுமே நினைப்பேன். பல தடவ அத நான் அனுபவிக்கவும் செய்துருக்கேன், ஆனா இதுவரைக்கும் திருப்தியான அளவு அந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு இன்னும் கிடைக்கலன்னு தான் சொல்லுவேன்...

ஓய், என்ன நீ இப்படி எல்லாம் பேசுற, வந்தேன்னா, இந்தா பாருன்னு கம்பை எல்லாம் நீங்க எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் ஆகிடுறேன்... ஆனா கொஞ்சம் கதைகள் சொல்லிட்டு போய்டுறேனே...
............................

என்னோட தூரத்து சொந்தம், பெரியப்பா பொண்ணு. சின்ன வயசுல ஊர் ஊரா கொஞ்சம் சுத்தினதால ஊருக்கு வந்து செட்டில் ஆனப்ப அவள தான் முதல் முதல்ல சொந்தம்னு அறிமுகப்படுத்தினாங்க. ரொம்ப பாசமா இருப்பா. அன்பும் அடக்கமுமா பொண்ணு வேணும்னு கேப்பாங்களே அவங்க எல்லாருக்கும் அவள புடிக்கும். பட்டு சேலை கட்டி கொஞ்சம் நகை போட்டா அப்படியே மகாலட்சுமினு ஊர்ல சொல்லுவாங்க. என்னை விட ஆறு வயசு பெரியவ. எல்லாரையும் போல ஒரே மாதிரி படிக்க கூடாதுன்னு சென்னைல கெமிக்கல் இஞ்சினியரிங் படிச்சா. நாலு வருஷம் சென்னைல இருந்தாலும் ஊருக்கு வந்தப்போ அவளாவே தான் இருந்தா. அதே அன்பு. அதே பணிவு. பந்தானா கிலோ என்ன விலைன்னு கேக்குற பார்ட்டி. இங்க வந்ததும் சும்மா இருக்க வேணாமேன்னு ஒரு காலேஜ்ல லெக்சரரா போனா.

வேலைக்கு போன ஆறு மாசத்துல அவளுக்கு கல்யாணம் பேசினாங்க. பாத்த முதல் மாப்பிளையே ஓகே ஆக, நாங்க எல்லாம் அவளை கலாய்ச்சு தள்ளிட்டோம். அப்ப கூட புன்னகையோட தான் கடந்து போவா. சந்தோசமா கல்யாணத்துக்கு தேவையான எல்லாம் அவளே போய் பாத்து பாத்து வாங்கினா. ஆனா கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி அமைதியாகிட்டா. எல்லாரும் புள்ளை எதோ வீட்ல எல்லாரையும் பிரியணுமேன்னு வருத்தத்துல இருக்குன்னு விட்டுட்டாங்க. நான் கூட கவனிச்சேன். ஆனா விளையாடுற வயசு. அத எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டா இருக்க முடியும்?

ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சு மூணே நாள்ல மாப்பிளை வீட்ல இருந்து அவள கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க. அவளுக்கு மனோவியாதி வந்துருக்குன்னு ஒரு மூணு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்து, அப்புறம் பையன் வீட்ல வந்து கூட்டிட்டு போனாங்க. மறுபடியும் அவ நார்மல் ஆகிட்டா.

அப்புறம் ஒரு வருஷம் அதே புன்னகை, அதே அன்பு. அதே கவனிப்பு. அவ மாமியாரும் மாமனாரும் எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவ்வளவு பெருமையா பேசுவாங்க. இவ ஒரு புன்னகையோட கேட்டுட்டு இருப்பா. ரெண்டாவது வருஷம் அவளுக்கு பொம்பள புள்ள பொறந்துச்சு. அந்த நேரம் அவ ஹஸ்பன்ட் ப்ராஜெக்ட் விசயமா பிரான்ஸ் போய்ட்டார். குழந்தை பிறந்த நாலாவது மாசம், அவ ஹஸ்பண்ட் வர்றார்ன்னு அவங்க தனியா வாழ்ந்த வீட்டுக்கு மாமியார் மாமனாரோட போய், வீடு எல்லாம் நல்லா கிளீன் பண்ணி, குழந்தையை குளிப்பாட்டி, பீடிங் பாட்டில்ல பால் கலக்கி மாமியார் கைல குடுத்துட்டு ரூம்ல போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்னு போனவ ரொம்ப நேரமா வெளில வரல

என்னன்னு போய் பாத்தா ஆள் தூக்குல தொங்கிட்டு இருக்கா. நாலு மாச கைக்குழந்தை, ஊருக்கு வர்ற புருஷன், கூடவே இருந்த மாமியார் மாமனார் எல்லாரையும் விட்டுட்டு எப்படி, ஏன், எதுக்கு அவ செத்துப் போனான்னு இன்னிக்கி வரைக்கும் யாருக்குமே தெரியாது. ஒரு காலேஜ் லெக்சரர், நாலு மாச குழந்தைக்கு அம்மா.... ஏன் செத்தா? கேள்விக் குறி தான். அவளுக்கு அந்த செகண்ட் என்ன தோணிச்சுன்னு தெரியல, போய்ட்டா... ஆச்சு அஞ்சு வருஷம்.
...................................

இது என் காலேஜ் ஸ்டாப் ஒருத்தங்க சொன்னது. அந்த பொண்ணு இவங்க க்ளாஸ்மேட். ஒரு சைன்ட்டிஸ்டா வரணும்ன்குறது அவங்க கனவு. கூடவே மாமா பையன கட்டிக்கணும்னு தான். ரெண்டு பேர் வீட்லயும் பயங்கர எதிர்ப்பு. ஏதோ குடும்ப பிரச்சனை போல. இவங்க பி.ஜி பைனல் இயர் படிக்குறப்ப கடைசி செமஸ்டர் முடிஞ்ச அன்னிக்கி பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணத்த பண்ணி வச்சிட்டாங்க.

பொண்ணும் பையனும் அதே ஸ்டைல்ல யாருக்கும் தெரியாம அவங்கவங்க வீட்டுக்கு போய், பொண்ணு எம்.பில் பண்ணி முடிச்சதும் வீட்ல கல்யாணத்துக்கு பையன பாக்க, இவங்க வேற வழியில்லாம உண்மைய சொல்ல, அதே ஸ்டைல்ல வீட்ட விட்டும் தொரத்திட்டாங்க.

பையன் ஒரு ஹாஸ்பிடல்ல சீப் லேப் இன்சார்ஜ். நல்ல சம்பளம். இவங்களும் ஒரே பீல்ட்ங்குறதால அடுத்து பி.ஹச்.டி பண்ணலாம்னு சென்னைல ஒரு டாக்டர் கீழ ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. இப்படியே நாலு வருஷம் ஓடிடுச்சு. ரெண்டு வயசுல ஒரு பையன் வேற. பி.ஹச்.டி முடிய போற நேரம், வீட்ல புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை வர, மேக் அப்க்கு வாங்கி வச்சிருந்த நெயில் பாலிஸ் ரிமூவர ஹஸ்பன்ட் முன்னாடியே குடிச்சிருக்காங்க. பதறி போய் கார்ல தூக்கி போட்டுட்டு ஹாஸ்பிடல் கொண்டு ஓடினா, உள்ள போறதுக்குள்ள ஆள் அவுட்.

ஒரு நெயில் பாலிஸ் ரிமூவருக்கு இவ்வளவு எபக்ட் உண்டுன்னு கண்டிப்பா அவங்களும் நினைச்சிருக்க மாட்டாங்க, மருத்துவ உலகமும் நினச்சிருக்காது. போகுற நேரம் வந்துட்டா எப்படி வேணா போய் தான் ஆகணும் போல... இன்னிக்கி அந்த பொண்ணோட தங்கச்சியவே அவருக்கு வீட்ல கட்டி வச்சிட்டாங்க. பையன பாத்துக்கணும்ல...
......................................

இது எங்க ஊர்ல நடந்தது. பொண்ணு மதுரைல ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருந்தா. பையன் எங்க ஊர்க்கார பையன். படிப்பு வராம ஊர் சுத்திட்டு இருந்தான். ரெண்டு பேருக்கும் லவ். எந்த ஊர்ல யார் இருந்தா என்ன, மொபைல் இருக்குல. இதுல அந்த பொண்ணு கூட இருக்குற பொண்ணை இவனுக்கு இன்ட்ரோ வேற பண்ணி வச்சிட்டா. மூணு பேருமே நல்லா பேசுவாங்க, இவன் மதுரைக்கு போவான் வருவான். இப்படியே ஒரு வருஷம் ஓடிப் போச்சு.

அப்புறமா இவ பிரெண்ட் அவன் கிட்ட தனியா பேசுறத எல்லாம் கண்டுபிடிச்சு, ரெண்டு பேரையும் கண்டிச்சிருக்கா. இனி எந்த தப்பும் நடக்காதுன்னு ரெண்டு பேரும் சத்தியம் எல்லாம் செய்து குடுத்துருக்காங்க.

இவங்க விசயம் தெரிஞ்ச எல்லாருமே அந்த பொண்ணை ரொம்பவே கண்டிச்சாங்க. பையன் சரியில்ல, ரெண்டு பேருக்கும் செட்டாகாது, விலகி வந்துடுன்னு. ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் தான் வேணும்னு அவளும் பிடிவாதமா வீட்ல சண்டைப் போடுவா, அப்புறம் மதுரை கிளம்பி போய்டுவா.

ஒரு வழியா பைனல் இயர் முடிஞ்சு ஊருக்கு இவ வந்தப்ப கல்யாண பேச்சு ஆரம்பிக்க, அவன் தான் வேணும்னு வீட்ல பயங்கர சண்டை. ரெண்டு பேர் வீட்லயும் என்ன பண்ண, வேற வழி இல்ல, கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுத்து நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறிச்சுட்டாங்க. அப்போ தான் அவன பாக்க இவ போயிருக்கா. அவன் மொபைல் வாங்கி எதேச்சையா பாக்குறப்ப அவன் இன்பாக்ஸ் முழுக்க அவ பிரெண்ட் கிட்ட இருந்து வந்த மெஸ்சேஜ். பாக்கவே அருவெறுப்பான அந்த மெஸ்சேஜ் எல்லாம் பாத்துட்டு ஆக்ரோசத்தோட வீட்டுக்கு வந்தவ மண்ணெண்ணெய் கேனை எடுத்து விட்டு கொளுத்திகிட்டா. ஸ்பாட் அவுட்...

ரெண்டு வருஷம் கழிச்சு அந்த பையன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான். இவ போனவ போனவ தான்...
..............................................

உடம்புல தீய வச்சுக்குறது, மல மேல இருந்து குதிக்குறது, ட்ரைன் முன்னால பாயுறது, தூக்கு போட்டுக்குறதுன்னு இதுல எது நினைச்சாலும் நடந்துட்டா அப்புறம் தடுக்க முடியாது. விஷம் சில நேரம் பட்டுன்னு உயிர எடுத்துடும், சில நேரம் பொழச்சுக்கலாம்... அப்படி பொழச்சு வந்துட்டா, அந்த நிமிசங்கள நினச்சு பகீர்ங்குது மனசு... தற்கொலை கொடுமைடா சாமி....

Friday, 5 September 2014

ஆசிரியர் தினம்



எந்த பண்டிகை எந்த நாள்ல வந்தாலும் சரி, அதுக்கு முந்தைய வொர்கிங் டே-ல அதை கொண்டாடிறது எங்க காலேஜ் வழக்கம். அந்த வரிசைல நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல இரண்டு கொண்டாட்டங்கள்...

ஒண்ணு, திரு ஓணக் கொண்டாட்டம்

அடுத்து, டீச்சர்ஸ் டே கொண்டாட்டம்...


இத பத்தி எழுதலாம்னா ஒரே சோம்பல். சோம்பேறித்தனம் வந்து குடியேறிச்சுடுச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான் ஒரு வேலையும் ஓடாது. சோம்பல் யார விட்டது? இந்தா ஒரு மணி வரைக்கும் எழுத சோம்பல் பட்டுட்டு தான் இருந்தேன்... ஆனா திடீர்ன்னு ஒரு மைன்ட் வாய்ஸ்... ஹோய், நேத்து தான உனக்கு புள்ளைங்க எல்லாம் ஹாப்பி டீச்செர்ஸ் டே விஷ் சொன்னாங்க, நீ உன் டீச்செர்ஸ்க்கு சொல்ல வேணாமான்னு.... இந்தா கடகடன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்ல...

வாழ்க்கைல நாம எதையோ சாதிச்சுட்டோம்ன்னு பெருமை எப்போ தோணும் தெரியுமா? மனசுல இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் போதோ, இல்ல உரிமையோட நம்மள ஒருத்தங்க தூக்கி கொண்டாடும்போதோ தான்.

நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல முதல்ல ஓணம் கொண்டாட்டம் நடந்துச்சு. எல்லா ஸ்டாப் அப்புறம் ஸ்டுடென்ட்ஸ் குழுமி இருந்தாங்க. எல்லா ப்ரோக்ராமும் முடிஞ்சதும் டயர்ட்டா இருந்ததால நான் தனியா அங்கயே இருந்தேன். எப்பவுமே நான் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கொஞ்சம் இல்ல நிறையவே சிடு சிடு தான். ஆனா நிஜம் என்னன்னா ஒண்ணு கூட எனக்கு பயப்படாது. நேத்து நான் பாட்டுக்கு கத்திகிட்டே இருக்கேன், எல்லாம் என்னை சுத்தி வளைச்சுட்டாங்க. ஹாப்பி டீச்சர்ஸ் டே மேடம்ன்னு ஆளாளுக்கு ரெட் ரோஸ், அப்புறம் பைவ் ஸ்டார் சாக்லேட் குடுத்து என்னை திக்குமுக்காட வச்சுட்டாங்க. அப்புறம் எங்க மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்க? சிரிச்சுட்டேன்... ஹஹா...

சரி, நானெல்லாம் இந்த அளவுக்கு படிச்சி, என் கைலயும் சாக்பீஸ் வந்துச்சுனா அதுக்கு காரணம் என்னோட டீச்சர்ஸ் தானே....

ரொம்ப பொடியா இருந்தப்போ என்னை எல்லாம் சமாளிக்கவே முடியாது. எத பாத்தாலும் அத ரசிப்பேனாம். பட்டாம்பூச்சி, கோழி, ஆடு, இப்படி எத கண்டாலும் வழிமாறி அது பின்னால ஓடிடுவேன். என்னை சமாளிக்கவே பத்து பேர் வேணும். அப்பா எப்பவும் பிசி, அம்மா வீட்டை விட்டு அதிகம் வர்றதில்ல. அதனால என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக அங்க உள்ள மிஸ் தான் வருவாங்க. ஊருல பாதி பிள்ளைங்களும் அவங்க கூட ஒழுங்கா ஸ்கூல் போறப்ப என்னை மட்டும் சமாளிக்க ரொம்ப தான் திணறிப் போவாங்க... எனக்கு வீட்ல இருந்து சாப்பாடு தந்து விட்டுருவாங்க. நான் சத்துணவு தான் வேணும்னு அடம் பிடிப்பேன்... ஹஹா.... எனக்கு இப்பவும் அந்த கின்டர்கார்டன் நியாபகங்கள் வருது. என்னோட சாப்பாடை அந்த மிஸ் கிட்ட குடுத்துட்டு, நான் சத்துணவு முட்டைக்கு அடி போட்டுட்டு இருப்பேன். அவங்க வேற வழியில்லாம என் சாப்பாட்டை மத்த ஸ்டாப்ஸ் கிட்ட பகிர்ந்து குடுத்துட்டு அதுக்கு பதிலா எனக்கு விதம் விதமா முட்டாய், பலூன் வாங்கி தருவாங்க.

அது என்னது, அப்படினா என்ன? தெளிவா சொல்லுங்க, ஏன் அப்படி? எதனால? இப்படி தான் எப்பவும் கேள்வி கேட்டுட்டே இருப்பேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லியே பாவம் எல்லாரும் டயர்ட் ஆகிடுவாங்க... அப்புறம் பிப்த்க்கு அப்புறமா நிஜமாவே கத்துக்கணும்ங்குற ஆர்வம், சந்தேகம் வந்தா உடனுக்குடன் கேக்குறத எல்லாம் பாத்து அவங்களே எனக்கு நிறைய சொல்லித்தருவாங்க. நான் கேள்வியே கேக்க முடியாத படி கத்து குடுத்தவங்க என்னோட டீச்சர்ஸ்...

என்னோட வாழ்க்கைல முக்கியமா ஒருத்தங்க வந்தாங்க. அவங்க, தங்கம் மிஸ். அவங்க உண்மையான பெயர் எனக்கு இப்போ மறந்து போச்சு, ஆனா நாங்க தங்கம் மிஸ் தங்கம் மிஸ்ன்னே சொல்லி பழகிடுச்சு. அப்போ நாங்க காமராஜ் மெட்ரிக்குலேசன்ல டென்த் படிச்சுட்டு இருந்தோம். லீவ் நாள்ல எங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எல்லாம் உண்டு. அந்த வயசுல சேட்டை ரொம்பவே அதிகம். எப்பப் பாத்தாலும் பிரெண்ட்ஸ்க்குள்ள சண்டை போட்டுட்டு, ஜடைய புடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு, சைக்கிள் கத்துக்குறோம்ன்னு கீழ விழுந்து அடி பட்டுட்டு சுத்திகிட்டு இருந்த நேரம். அப்ப தான் தங்கம் மிஸ் எங்க ஸ்கூல் வந்தாங்க. ரெண்டே ரெண்டு நாள் எங்கள நல்லா வாட்ச் பண்ணின அவங்க எங்கள வலுகட்டாயமா புடிச்சு ஸ்கூல் என்.எஸ். எஸ்.ல தள்ளி விட்டுட்டாங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்கு என்னை சுத்தி உள்ளதையும் தாண்டி ஒரு சமூகம் இருக்குன்னே தெரிய வந்துச்சு. ஏழ்மைனா என்ன, இப்படியும் சூழல்ல மனுசங்க இருக்காங்கன்னு எனக்கு புரிய வச்சவங்க அவங்க. அவங்க முதல் முதலா எங்ககிட்ட சொன்னது ஒரு விஷயம், இங்க நீங்க சேவை செய்ய போறீங்க. அதுக்கு முன்னாடி நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும். இங்க நீங்க யார் மேலயும் அனுதாபப்படக் கூடாது, இரக்கப்படக் கூடாது, ஏன்னா, எது இருக்கோ இல்லையோ இவங்களுக்கு சுய மரியாதை நிறைய இருக்கும். அத இம்மியளவு கூட நீங்க குலைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்தா நீங்க எப்படி செயல் படுவீங்களோ, அப்படி அவங்க கூட இணைஞ்சு நீங்க செயல் படணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. அந்த வார்த்தைகள் எப்பவுமே எனக்கு பசுமரத்து ஆணி மாதிரி மனசுல பதிஞ்சுடுச்சு. இன்னிக்கும் யாரைப் பாத்தாலும் ஐயோ பாவம்னு கண்டிப்பா எனக்கு தோணாது, என்னால முடிஞ்சா ஓடி போய் அவங்க கூட இருந்து தோள் குடுக்குறேன்...

அதுக்கப்புறம் படிப்படியா ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் வந்தப்போ அங்கயும் எனக்கு தோள் குடுத்தவங்க ஏராளம். என்னோட ஆர்வத்தை பாத்துட்டு அப்பவே ப்ராஜெக்ட்ஸ் பண்றதுக்கு என்கிட்ட நம்பி குடுப்பாங்க. மத்த ஸ்டுடென்ட்ஸ் மாதிரி நான் ரொம்ப மார்க் எல்லாம் எடுக்க மாட்டேன், எப்பவுமே ஆவெரேஜ் தான். ஆனாலும் யாருமே என்னை திட்ட மாட்டாங்க. சந்தோசத்தையும் அக்கறையும் ஏராளமா அள்ளிக் குடுத்த அத்தனை பேருக்கும் என்னோட நன்றிகள்....

சொல்ல மறந்துட்டேனே, எப்பவுமே சந்தோசமாவும் செய்த காரியத்துல எல்லாம் வெற்றியும் கிடைச்சுட்டே இருக்குமா என்ன? வாழ்க்கைல தோற்றுப் போவோமோன்னு கண்ணு கலங்கி என்னோட யூனிவர்சிட்டி வாசல்ல நான் நின்னப்ப, உன்னோட பீல்ட் பத்தி எனக்கு எதுவும் தெரியாது தான், ஆனா உனக்கு என்னால முடிஞ்ச அளவு பின்புலமா இருக்கேன். நம்பிக்கை இருந்தா சொல்லு, இப்பவே கைட்ங்குற இடத்துல நான் சைன் பண்றேன்னு சொன்னவங்க என்னோட கைட் வசந்தா மேடம். தலைமுடி எல்லாம் இழந்து உருகுலைஞ்சு போன என்னோட உருவம் கொஞ்சம் கூட அவங்களுக்கு சந்தேகத்த குடுக்கல. மாறா நீ முன்னாடி போ... பக்கபலமா உன் பின்னால நான் வருவேன்னு சொன்னவங்க. இப்ப வரைக்கும் தெரியாது தெரியாதுன்னே நிறைய விசயங்கள எனக்கு கத்துக் கொடுக்குரவங்க. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம என்னை வேலை வேலைன்னு வேலை வாங்குறவங்க... ஹஹா லவ் யூ மேடம்.

இப்படி என்னோட வாழ்க்கைல நான் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்க... என்னோட வாழ்க்கைல நான் வாழ்க்கைய கத்துக்குறதுக்கு காரணமா இருக்குற எல்லாருக்கும் என்னோட இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

Friday, 22 August 2014

தம்பியும் நானும்....


சின்ன வயசுல நான் ரொம்ப வாலு. ஒரு இடத்துல இருக்கவே மாட்டேன். எப்பப் பாத்தாலும் மாட்டுதொளுவத்துல மாடுகளோட மல்லுக்கட்டிட்டு இருப்பேன், இல்லனா, கரையான் புத்துல பாம்பு இருக்கான்னு கை விட்டு தேடிட்டு இருப்பேன். இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க ஊரு காடு மாதிரி தான் இருக்கும். என்ன தான் வீடு பெருசா இருந்தாலும், வீட்டை சுத்தி கொல்லாங்காடு, வாழைத்தோப்பு, வயலுன்னு ஒரு கலவையா இருக்கும். வீட்டுக்கு பத்தடி தூரத்துலயே ஒரு மொட்டை கிணறு வேற உண்டு. அந்த கிணத்துல தண்ணி எல்லாம் கிடையாது. அதுக்கு உள்ள இருந்து வேப்பமரம், புளியமரம் அப்புறம் காடு மாதிரி புல்லு, செடிகள்ன்னு அடைஞ்சு கிடக்கும். அங்கயே தான் நிறைய கரையான் புற்றும் உண்டு.

சில நேரங்கள்ல மேய வர்ற ஆடு மாடுகள் கால் தவறி உள்ள விழுறதும் உண்டு. நான் வேற எப்பப்பாரு அங்கயே போய் இருப்பேனா, அப்பப்ப அங்க கடந்து போற பாம்புகள் எல்லாம் ரொம்ப பரிட்சயம் ஆகி போயிருந்தது. பாம்பை கண்டா அங்க இருந்து ஓட மாட்டேன். அப்படியே அசையாம உக்காந்துருப்பேன். பாம்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் ஒரு பயம் கப்புன்னு வரும் பாருங்க... ஒரே ஓட்டம் தான்... மூச்சிரைக்க நேரா ஓடி வந்து ரூம்ல மலங்க மலங்க முழிப்பேன். யாரும் பாக்கலனா ஓகே, ஆனா அம்மா பாத்துட்டா, ஹிஹின்னு ஒரு திருட்டு சிரிப்பு சிரிப்பேன் பாருங்க, அம்மா புருவம் உயர்த்தி, கொன்னுப்புடுவேன்னு ஆள்காட்டி விரலாலயே சைகை செய்வாங்க. சத்தம் போட்டு பாட்டிக்கு கேட்டுடுச்சுனா அப்புறம் பத்ரகாளி மலையேற நேரம் ஆகுமே...

தம்பி இதுக்கெல்லாம் ரொம்ப பயப்படுவான். அதனால அந்த பக்கமா விளையாட கூப்ட்டா, ம்ஹும்ன்னு சிணிங்கிக்கிட்டே அம்மா முந்தானைய புடிச்சுப்பான். ஆனா அந்த ஊமை குசும்பனுக்கு திங்க ஏதாவது முதல்ல குடுக்கலன்னு வைங்க, உடனே, நான் போய் மொட்டை கிணத்துல விழப்போறேன்னு மிரட்டுவான். அம்மாவுக்கு தெரியாதாக்கும் அவனை... சிரிச்சுகிட்டே அவனையே பாத்துட்டு இருப்பாங்க. நான் சும்மா இருப்பேனா, அப்படியாவது அவனை அந்த பக்கம் கூட்டிட்டு போய்டணும்ன்னு அவனுக்கு நிறைய அட்வைஸ் குடுப்பேன்.

டேய் தம்பி, அந்த பக்கம் எல்லாம் ஒண்ணும் பயம் இல்ல, நடந்தா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும், ஒண்ணு உன்னை பாம்பு கடிக்கும். அப்படி பாம்பு கடிச்சா, ஓடி வந்துடாத, விஷம் தலைக்கு ஏறிடும். அதனால அங்க நின்னே ஒரு சத்தம் குடு, அக்கா போய் கத்தியும் துணியும் எடுத்துட்டு வரேன். துணி வச்சு காலை இருக்க கட்டிட்டு, இந்த கத்தியால வெட்டிட்டா, அப்புறம் பயமே இல்லன்னு அட்டகாசமா க்ளாஸ் எடுப்பேன். பையன் அப்பவே மிரண்டுடுவான்.

ஆனாலும் நாம விட மாட்டோம்ல, ரெண்டாவது, நீ தவறி அந்த கிணத்துக்குள்ள விழுந்துடுவ. அப்பா வீட்ல இருந்தா உடனே கயிறு போட்டு உன்னை தூக்கிடுவாங்க, அதுவே வெளியூர் போய்ட்டா நீ கவலைப்படாத, உனக்கு பிரட், இட்லி, சோறு எல்லாம் மேல இருந்தே தூக்கிப் போடுறேன். அப்பா வர்ற வரை நீ சாப்ட்டுட்டு இருக்கலாம்ன்னு சொல்லுவேன்...

ஏங்க, நான் சரியா தானே சொல்லியிருக்கேன். ஆனா இந்த பய, அம்மாவ இன்னும் இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு, பெருவிரல எடுத்து வாய்ல வச்சு சப்ப ஆரம்பிச்சுடுவான். போடின்னு தலைய வேற வெட்டி வெட்டி இழுத்துப்பான்...

தாயம் வச்சு விளையாடிட்டு இருப்போம். இவன் விளையாட வந்தா, இவனுக்கு பிடிச்ச தாயக்காய் தான் முதல்ல எடுப்பான். வேற யாரும் அத எடுத்துடக் கூடாது. அட, அது பரவால, அவனுக்கு மட்டும் தான் தாயம் விழணும்னு அடம்புடிப்பான் பாருங்களேன். சிரிப்பு சிரிப்பா வரும். இந்த பாம்பட்டை விளையாடுரப்ப பாம்பு அவனை கொத்திடக் கூடாது... ஆட்டத்த கலைச்சு விட்ருவான்.

ஆனா ஒண்ணு, எனக்கும் தம்பிக்கும் ரொம்ப ஒற்றுமையான ஒரு விஷயம் ஒண்ணு உண்டு. அதுவும் சாப்பிடுற விசயத்துல. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்கள் என்னலாம்ன்னு பாத்தீங்கனா, வறுத்த மற்றும் ஊற வச்ச புளியங்கொட்டை, புண்ணாக்கு வகைகள், அதுவும் புண்ணாக்குல கடலை புண்ணாக்கும் எள்ளு புண்ணாக்கும் தான் டாப். ருசி பின்னிடும். ஆனா இதெல்லாம் எடுத்து தின்னா பாட்டி நைநைன்னு தொனத்தொனத்தே காது ஜவ்வு கிழிஞ்சிடும். நாங்க போய்ட்டுவோம்னு பாட்டி மாட்டு தீவன ரூம்ல லைட் அணைச்சு வச்சிருப்பாங்க... இருட்டுக்கு பயந்து தம்பி அந்த பக்கமா வரவே மாட்டான்.

நமக்கு தான் அட்வஞ்சர்னா அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே... அந்த இருட்டுலயும் மோப்பம் பிடிச்சு, கடலை புண்ணாக்கையும் எள்ளு புண்ணாக்கையும் மடி நிறைய கட்டிப்பேன். அப்புறம் என்ன, நானும் அவனும் பெட் ரூமுக்கு போய் கட்டுலுக்கு அடியில உக்காந்து வெளுத்து கட்டிருவோம்.

இதுல சில நேரம் பாட்டிகிட்ட நான் மாட்டிக்குறதும் உண்டு. அப்போ மடியில இருக்குற புண்ணாக்க தட்டி விட்ருவாங்க. அம்மா தான், ம்க்கும்... புள்ள இருட்டுல பயம் இல்லாம போறாளேன்னு சந்தொசப்படுவீங்களான்னு பாட்டிக்கிட்ட ஒரு வெட்டு வெட்டிகிட்டு, கை நிறைய புண்ணாக்கு ஒளிச்சு கொண்டு வந்து தருவாங்க... உன்னை போல ஒரு தாய் எங்களுக்கு மட்டும் தான் கிடச்சிருக்கா அம்மா....

அப்புறமா, அம்மாவுக்கே கோபம் வர வைக்குற மாதிரி நாங்க பண்ற காரியம்னா, அது கருப்பட்டி காப்பில புண்ணாக்கும் தவுடும் கலந்து விட்டுறது தான். அம்மா எப்பவும் ஒரு பெரிய பானை நிறைய கருப்பட்டி காப்பி போட்டு வச்சிருப்பாங்க. விறகடுப்புல அது எப்பவும் கதகதப்பா இருக்கும். வீட்டுக்கு வர்றவங்க, தோட்டத்துல வேலை செய்றவங்கன்னு எல்லாரும் அப்பப்ப வந்து குடிச்சுட்டு போவாங்க. சில நேரம் காப்பி பானைக்குள்ள எட்டிப்பாத்தா காப்பி குறைவா இருக்கும். உடனே நானும் தம்பியும் சேர்ந்து தவுடு எடுத்துட்டு வந்து அது உள்ள போட்டு தண்ணியும் கலந்து விட்ருவோம். யாராவது காப்பி குடிக்கலாம்னு வந்து கப்புல எடுத்து வாய்ல வச்சா..... ஹஹா... அப்புறம் என்ன, அம்மா கட்ட கம்ப எடுத்துட்டு தம்பிய தான் தொரத்துவாங்க. நாம தான் ஏதாவது மரத்து மேல ஏறி எஸ்கேப் ஆகிடுவோம்ல...

இப்படி ஏகப்பட்ட சேட்டைகள்... இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் சொல்றேன்...

ஆனா ஒண்ணு, இப்போதைய எனக்குள்ள நிறையவே மாற்றம். எடுத்துட்டு இருக்குற மெடிசின்ஸ்னால சில நேரம் ரொம்ப டென்சன் ஆகிடுவேன். காட்டுக்கத்தல் போட ஆரம்பிச்சேன்னா நானே தான் சட்டுன்னு முழிச்சுட்டு நிறுத்தணும். அப்படி தான் ஒருநாளு இங்க ஒரு பாட்டி கூட வாக்குவாதம் ஆகி, அவங்க சொன்ன வார்த்தைகள் கேட்டு பி.பி எகிறி, ஒரு கட்டைய எடுத்து வீசிட்டேன். அது நேரா போய் என்னோட மீன் தொட்டியில பட்டு, கண்ணாடி உடைஞ்சு, தண்ணி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பாவும் தம்பியும் முதல்ல பண்ணினது, மீன் தொட்டில இருந்த மீன் எல்லாத்தையும் தனியா பிடிச்சு போட்டது தான். அவங்களுக்கு தெரியும், மீனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நாலு நாளைக்கு அழுதுட்டே இருப்பேன்னு. மறுநாள் காலைல பதினோரு மணிக்கு நான் ரூம் கதவை தொரக்குரப்ப அதே மீன் தொட்டி, புது கண்ணாடியோட ரெடி ஆகிட்டு இருக்கு. தம்பி தான் உள்ள பிளாஸ்டிக் செடி எல்லாம் அடுக்கிட்டு இருக்கான்.

இவன் பொறுமைசாலியா? பொறுப்பாளியா?

Friday, 8 August 2014

ரக்க்ஷா பந்தன்... தம்பியும் நானும்


தம்பி பொறந்தது வீட்ல தான். அவன் பொறந்தப்போ அழவே இல்லையாம். எல்லாரும் புள்ள செத்து போச்சுன்னு முடிவு பண்ணிட்டு அவனை புதைக்க குழி வெட்ட கிளம்பிட்டாங்களாம். அப்போ தான் எங்க ஊரு நர்ஸ் சந்தேகம் வந்து அவனோட தொப்புள் கொடிய வெந்நீர்ல போட்டு பாத்துருக்காங்க. சூடு தாங்காம பய கொஞ்சம் நெளிஞ்சிருக்கான். அப்புறம் என்ன, அவனை புதைக்க கொண்டு வந்த கார்ல அவன ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. நெஞ்சு முழுக்க சளி அடச்சு போயிருந்த அவன அழ வைக்கவே ஒரு நாள் ஆகிடுச்சாம்...

சின்னப் புள்ளைல தம்பி குண்டு குண்டுன்னு கட்டையா உருளி மாதிரி இருப்பான். எப்பவும் கண்ண உருட்டிட்டு, வாய்ல ஒரு கூழாங்கல்ல போட்டு குதப்பிட்டே இருப்பான். அந்த பய சிரிச்சா அதிசயம் தான்... சிரிப்புனா என்னதுன்னு நம்ம கிட்ட கேப்பான். அவ்வளவு அமுக்குணி பய...

அப்புறம் ஸ்கூல் போக ஆரம்பிச்சப்போ நான் ரொம்ப சீன் போடுவேன். நம்ம பழக்க வழக்கம் எல்லாம் பசங்க கூட தானே.. அவங்க கூட மங்கட்டைல இருந்து கதை விட, இவனை பேக் தூக்கிட்டு போய் என் க்ளாஸ்ல வைக்க சொல்லிடுவேன். அப்புறம் என்ன, நான் சிக்ஸ்த் படிக்குற வரைக்கும் அவன் தான் என் பேக் சுமப்பான். நான் ஜாலியா அவன் பின்னால நடந்து போவேன்.

எப்பப்பாரு அம்மா மடியில தான் படுத்து தூங்குவான். அட, பாத்ரூம் போகணும்னா துணைக்கு அம்மா போகணும். அவ்வளவு பயந்தாங்கொள்ளி.... ராத்திரி தூங்கும் போது எனக்கும் அம்மாவுக்கும் தான் சண்டை வரும். அப்பா என்னோட முகத்த பாத்துட்டு தான் தூங்கணும்னு எப்பவும் சண்டை பிடிப்பேன். அம்மா அவங்க பக்கமா தான் தூங்கணும்னு சண்டைக்கு வருவாங்க... இதனாலயே அப்பா ரெண்டு கையையும் ஆளுக்கொண்ணா தலையணையா தந்துட்டு விட்டத்த பாத்துட்டே தூங்கிடுவாங்க... ஆனா இவனுக்கு அந்த பிரச்சனையே இல்ல. அம்மா முந்தானை மட்டும் இருந்தா போதும். அத சுருட்டி வாய்ல வச்சுட்டே தூங்கிடுவான்.

வீட்ல ஏதாவது அப்பா சாப்பிட வாங்கிட்டு வந்தா போதும். நான் தான் முதல் ஆளா பாய்ஞ்சு போய் அத பிடிங்கிப்பேன். இவன் உடனே மூஞ்சி எல்லாம் அழுவுற மாதிரி வச்சுகிட்டு சிணுங்கிகிட்டே அம்மாகிட்ட ஓடிடுவான். அப்புறம் என்ன, என் தலைல ரெண்டு கொட்டு விழும். பண்டம் பங்குக்கு போய்டும்... கிர்ர்ர்ர்....

ஆனா ஒண்ணு, சின்ன வயசுல இருந்தே அவனால தோல்விய தாங்கிக்க முடியாது. விளையாட்டுல கூட தோத்துப் போகபோறான்ன்னு தெரிஞ்சா உடனே அழுக வந்துடும். நானும் கொஞ்சம் அவன் கிட்ட போக்கு காட்டிட்டு அப்புறம் விட்டுக் குடுத்துடுவேன். அட, நம்ம தம்பி தான, அவன் கிட்ட தோத்துப் போனா தான் என்ன?

ரெண்டு பேரும் குடுமி பிடிச்சு எல்லாம் சண்டை போட்டதே இல்ல. அவனுக்கு ஏதாவது தேவைனா நான் அத விட்டுக் குடுத்துட்டு போய்டுவேன். எனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியாது. நான் அவன் கிட்ட காட்டிக்க மாட்டேன். அதனாலயே அவன் கொஞ்சம் சுயநலவாதியா வளந்துட்டான். அவன் பொருள யாரும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்துட்டா சண்டைக்கு எல்லாம் வர மாட்டான், ஆனா மூஞ்சி வாடி போயிடும்.

பத்து வயசுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அம்மாவுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு அப்பா, நான், தம்பி மூணு பேரும் சமையல் அறைக்குள்ள புகுந்துடுவோம். ஐயோ ஐயோன்னு அம்மா அலறுற வரைக்கும் சமையலறை தூள் பறக்கும். பாத்திரங்கள் உருளும். ஒரு முட்டை அவிக்க பத்து பாத்திரம் வாஷ் பேசின் போக வேண்டி வரும். அப்புறம் அப்பா கூட நாங்க சமையலறைக்குள்ள கூட்டு சேரக்கூடாதுன்னு அம்மா தடா போட்டுட்டாங்க... அப்பா ஒத்த ஆளா நின்னு எங்களுக்கு சமைச்சுப் போடுவார்.

அடுத்து ரெண்டு வருசத்துல சமையலறை எங்க ராஜ்ஜியம் தான். கேசரி, பால்பாயாசம், அல்வா, வடை ன்னு சின்ன சின்னதா ஆரம்பிச்சு அதிரசம், முறுக்கு,  முந்திரி கொத்துன்னு முன்னேறி பிரியாணில வந்து நின்னோம். எங்க ரெண்டு பேர் சமையலையும் நாங்களே சாப்ட்டுடுவோம். அம்மாவும் அப்பாவும்  டேஸ்ட் வேணா பாக்கலாம். அவ்வளவு தான். அப்புறம் ஒரு நாள் பீசா செய்றோம்னு ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லா தான் வந்துச்சு. அந்த பேஸ் செய்ய ஈஸ்ட் அதிகமா போட்டுட, வாய்லயே வைக்க முடியல, அம்மே....

தோட்டத்துக்குள்ள விளையாட போறப்பவும் சரி, மழைல நனையுறப்பவும் சரி, ரெண்டு பேரும் ஒண்ணாவே விளையாடுவோம். அப்பா கோவில் கணக்கு எழுதி வச்சிருக்குற டைரி எடுத்து ஒரு நாள் நாங்க கப்பல் விட.... அன்னிக்கி தான் அடி வெளுத்துட்டாங்க... அவ்வ்வ்வ்.... அப்பவும் நான் அய்யோ ஐய்யோன்னு அடி விழுறதுக்கு முன்னாலயே கத்தி கதறி ஊரை கூட்ட, அவன் வழக்கம் போல சத்தமே வராம கேவிட்டு தான் இருப்பான். கண்ணுல மட்டும் கண்ணீர் மாலை மாலையா கொட்டும். ஊர்ல உள்ளவங்க எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. இதுல ஒரு பாட்டி, உன் புள்ளைங்க ரெண்டும் தங்கங்க... பாரு ஒரு தடவ கூட அடிச்சுகிட்டது இல்ல... அவங்கள போய் நீ அடிச்சிட்டியேன்னு அப்பாவ பாத்து கேக்க, டொட்டடொட்டடொய்ங்... ஒரே செண்டிமெண்ட் சாங் தான்...

அப்புறமா அவன் டென்த் வந்தான். நான் லெவெந்த். புள்ள எப்பப்பாத்தாலும் படிப்பு தான். நான் வேற அவனை கிண்டல் பண்ணிட்டே இருப்பேன், படிச்சு கலக்டர் ஆக போறானாம்ன்னு... ஆனாலும் கண்டுக்கவே மாட்டான். எப்பப் பாத்தாலும் ரேடியோவ ஆன் பண்ணி கேட்டுட்டே படிப்பான். ஒரு நாள் ரொம்ப சின்சியரா படிக்குறானேன்னு பக்கத்துல போய் பாத்தா, அட, பக்கி.... உக்காந்தபடியே நல்லா உறங்கிட்டு இருக்கு... ஹஹா... இதான் அவன் அப்ப இருந்தே பண்ணிட்டு இருந்துருக்கான்.

அவனோட வசந்த காலம், அவன் பாலிடெக்னிக் போனப்ப தான். அங்க அவன் ஒரு தேவதைய பாத்தான். இவன விட வயசுல பெரியவ. அவ ப்ளஸ் டூ முடிச்சுட்டு மார்க் கம்மின்னு பாலிடெக்னிக் பஸ்ட் இயர் வந்தவ. பொண்ணுங்க கிட்ட பேசவே பேசாத என் தம்பி, சிரிச்சா வாய்ல இருந்து முத்து உதுந்துடும்னு சிரிக்காம இருந்த என் தம்பி கலகலன்னு சிரிக்க ஆரம்பிச்சது அப்போ தான். நக்கலும் நையாண்டியும் அவன் கூடப் பொறந்தது போல அவ்வளவு சரளமா வர ஆரம்பிச்சுது... இந்த ஊமை குசும்பனா இப்படி மாறிட்டான்னு நானும் அம்மாவும் வாய் பிளந்து பாத்துட்டே இருப்போம்.

அட, அம்மா கழுத்த பிடிச்சு தொங்கிட்டு, அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டு, என்னை பாத்தா அப்படியே ஒரு வெக்க புன்னகை சிந்திட்டு, ஏதாவது ஒரு டூயட் பாட்ட பாடிட்டு திரிஞ்ச என் தம்பி அழகோ அழகு.

காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தா அவ கிட்ட போன்ல பேசிட்டே இருப்பான், சனி ஞாயிறுல அவ வீட்டுக்கே வந்துடுவா. எப்பப் பாத்தாலும் அவ கூடவே சுத்திட்டு இருப்பான். ஆனா அவள லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னதே இல்ல. இப்படியே ஒரு வருஷம் ஓடி போச்சு. நான் ப்ளஸ்டூ முடிச்ச நேரம், திடீர்னு எனக்கு கல்யாணம்ன்னு பத்திரிகைய நீட்டிட்டா. இவன் எப்படி தான் அந்த ஆயிரம் இடியையும் மின்னலையும் ஒரு சேர தாங்கிகிட்டானோ என்னவோ? ஒரு வாரம் யார் கூடவும் பேசல. அப்புறம் அவ கல்யாணத்துல அவன் தான் ஓடி ஓடி எல்லா வேலையும் செய்தான். அவள ப்ளைட் ஏற்றி பறக்க விட்டுட்டு கிளி பறந்து போய்டுச்சுன்னு இங்க குட்டி பசங்க கிட்ட சொல்லிட்டு இருந்தான்.

ஒரு நாள் அம்மா கிட்ட நான் அதிகமா அன்பு வச்சா, ஏன்மா அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு கேட்ருக்கான். அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியாது, ஆனா எல்லாமே சகஜமா போயிட்டு இருந்த மாதிரி தான் இருந்துச்சு.


திடீர்னு ஒரு நாள் எனக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட். ஸ்கூட்டில போறப்ப எது மேலயோ இடிச்சு கீழ விழுந்து தலைல கொஞ்சமா அடி. அப்புறம் வந்த நாட்கள், மளமளன்னு எங்க வாழ்க்கைய புரட்டி போட்டுடுச்சு. ஐ.சி.யூல நான் துடிச்சத பாத்தவன், அப்படியே மவுனமா ஆனவன் தான். என் கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான். நான் பொழச்சு வந்தப்ப கூட ஏதோ பக்கத்து வீட்டு நோயாளிய பாக்குற மாதிரி எட்டி நின்னு பாத்துட்டு போயிடுவான்.

அம்மா எவ்வளவோ போராடி பாத்துட்டாங்க. ம்ஹும்... அவன் என் கிட்ட பேசவே இல்ல. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா அவன் அப்படி இருந்தது பழகி போயிடுச்சு. அவனும் நானும் ஒரே வீட்ல இருந்தாலும் நான் கொஞ்சம் சிரிச்சா அவன் எழுந்து போயிடுவான். நான் இருக்குற இடத்துக்கே அவன் வர மாட்டான். அவன் ரூமே கதின்னு இருக்க ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு இப்போ ஒரே பேச்சுத் துணை அம்மாவா தான் இருந்தாங்க.

காலம் யாருக்காகவும் நிக்குரதில்ல. அம்மாவையும் இழந்து எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்ப அவன் மவுனமாவே மாறிட்டான்.

அப்படியே இஞ்சினியரிங் படிக்க அவனை சென்னை அனுப்பிட்டாங்க அப்பா. அட்லீஸ்ட் அங்கயாவது அவனுக்கு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்கன்னு. வீட்டுக்கு வந்தா, வழக்கம் போலத் தான்...

ஒரு நாள் திடீர்னு அப்பா மாட்டுத்தொழுவத்துல வழுக்கி விழுந்துட்டாங்க. கால் ஸ்லிப் ஆகி, எலும்பு விரிசல் விட்டுடுச்சு. அந்த நேரம் பாத்து லீவுக்கு வந்தவன் தான்... அட, அட, அட... அப்பாவ அவன் தாங்கு தாங்குன்னு தான்குன அழகு இருக்கே....

அப்பாவுக்கு தனியா ஒரு பெரிய ரூம் ஒதுக்கி குடுத்தான். அப்பா ரெஸ்ட் எடுக்க கால் அமுக்கி விட்டான். அப்பாவுக்கு போர் அடிச்சா அங்கயே டி.வி. அப்புறம் நியூஸ் பேப்பர், நாவல்ன்னு வாங்கி குவிச்சுட்டான். ஒரு குழந்தைய போல எல்லா பணிவிடையும் அப்பாவுக்கு செய்தான். நான் பக்கத்துல போனா, நான் பாத்துக்குறேன்னு ஒரே வார்த்தைல என்னை தள்ளி வச்சிடுவான். ஆனா அப்போ வந்த அழுகை எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு.

உலகத்துலயே கால் முறிஞ்சி போச்சுன்னு சந்தோசமா எல்லாருக்கும் போன் பண்ணி சொன்னா ஒரே அப்பா என் அப்பாவா தான் இருக்கும். அட, பேப்பர் போடுற பையன்ல இருந்து பால் கறக்குற அண்ணா, பக்கத்து ஊரு நாட்டாமை வரை எல்லாரையும் கூட்டி வச்சு, சந்தோசமா அரட்டை அடிச்சு, என் பையன் என் பையன்னு பெருமை பீத்திக்கவே என் அப்பாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. விட்டா இவரு எழுந்திரிச்சு நடக்கவே மாட்டார்னு வாக்கிங் ஸ்டிக் வாங்கி குடுத்து நடக்க வச்சிட்டோம்.

மறுபடியும் ஒரு ஆறு மாசம் எனக்கு ஹாஸ்பிட்டல் வாழ்க்கை. இந்த தடவ அவன் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கி போகல. டாக்டர் ரூமுக்கு போறப்பவும் நர்ஸ் ஊசிப் போட வரப்பவும் அவன் என் கைய புடிச்சுகிட்டான். அந்த சீசன் முழுக்க அவன் வாங்கி குடுத்த தொப்பி தான் போட்டுகிட்டேன். பாத்து பாத்து எனக்காக வாங்கிட்டு வந்துருந்தான் மொட்டை மண்டை வெளில தெரியாதபடிக்கு.... ஹஹா...

சொந்த வீட்டை விட்டுட்டு வெளில வந்தப்ப அவன் அக்கறை என் மேல திரும்பியிருந்துச்சு. நான் எவ்வளவு உடைஞ்சு போயிருப்பேன்னு அவனுக்கு தெரியும். காரணம், அவனும் தானே உடைஞ்சு போயிருப்பான். சின்னதா ஒரு புன்னகை, எனக்காக அவன் வாங்கி கொண்டு தர்ற ஐஸ்க்ரீம், அக்கறையா சமைச்சு போடுற சிக்கன்...

சக்தி போனதுக்கு  அப்புறம் அவனுக்கு என் மேலான அக்கறை இன்னும் அதிகமாகிடுச்சு. எனக்காக அணில்கள் பின்னால போய் வீடியோ போட்டோ எடுத்துட்டு வந்து என் கிட்ட காட்டினான். அப்பா கூட சேர்ந்து என் உலகத்த இன்னும் அழகாக்க மீன் குளம் ஒண்ணு ரெடி பண்ணி தந்தான். நான் சமைக்கவே கூடாதுன்னு அப்பா கிட்ட சொல்லியிருக்கான். எனக்கு என்ன தேவைன்னு பாத்து பாத்து செய்றான்...

அவன் என் கூட பேசுற ஒவ்வொரு வார்த்தைலயும் தான் எவ்வளவு அன்பு இருக்கும்... "இந்தா, சரி, என்ன வேணும், பரோட்டா, ம்ம்ம்ம், சொல்றேன், சாப்டாச்சு..." ஏதாவது புரியுதா? இதெல்லாம் தான் அவன் என் கிட்ட பேசுற வார்த்தைகள்... அட, இவ்வளவாவது பேசுறானே...

இன்னிக்கி வாட்ஸ் அப்ல மாமா பசங்க கூட அவன் அடிக்குற அரட்டை குரூப் மெஸ்சேஜ்ல கேட்டுட்டே இருக்கும். இதுக்காகவே அப்பா மொபைல் நான் எடுத்து எனக்குன்னு வச்சுகிட்டேன். நான் யாருக்கும் மெசேஜ் பண்றதில்ல. அரட்டையிலயும் கலந்துக்குறதில்ல... ஆனா என் தம்பி கூட இருக்கேன், அவனோட ஒவ்வொரு சிரிப்பையும் சிரிச்சுட்டு.... ரசிச்சுட்டு....

அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் இருக்காது. ஏதோ ஒரு செண்டிமெண்ட் அவன் மனசுக்குள்ள. அவன் இப்படியே இருந்துட்டு போகட்டுமே.... அவனை அவன் போக்குல விட்ருவோம்...

அவன் பேரு என்னன்னு கேட்டா ஒரு செகண்ட் திணறி அப்புறமா தான் அவன் பேரை சொல்லுவேன். காரணம், இதுவரைக்கும் அவன நான் பேர் சொல்லி கூப்பிட்டது இல்ல, அவன் பேரை சொல்லி அடுத்தவங்க கிட்ட பேசிகிட்டதும் இல்ல. எனக்கு அவன் எப்பவுமே தம்பி தான். அப்படி தான் அவனை கூப்பிடுவேன். அவனும் அப்படியே தான்... நான் அவனுக்கு அக்கா தான்...

அவன் பெயர் உங்களுக்கு தெரியவே வேண்டாம்....