Tuesday, 31 January 2017

தற்கொலைக் கடிதம்- Review



என்னோட புத்தகத்துக்கு வந்த ஒரு review இது.....
......................................

வணக்கம் மேடம்.

உங்களின் தற்கொலைக்கடிதம் புத்தகம் படித்த ஒரு சாதாரண மனிதன் நான்.

எனக்கு review எல்லாம் எழுதத்தெரியாது.

தமிழ் தட்டச்சும் தகராறுதான்.

புத்தகம் படிக்கப்படிக்க மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

Thursday, 26 January 2017

புத்தக வெளியீட்டு விழா - தற்கொலைக் கடிதம்




நாள்: 22/01/2017 (ஞாயிறு)

இடம்: தமிழ் அரங்கம்

நேரம்: மாலை 4.30
…………………………………………………………..

இந்த நாளையும் இடத்தையும் நேரத்தையும் என்னால எப்பவுமே மறக்க முடியாது. காரணம், அன்னிக்கி தான் என்னோட முதல் சிறுகதை தொகுப்பு “தற்கொலைக் கடிதம்” வெளியாகின நாள்.

அதென்னமோ தெரியல, உடம்பு சரியில்லாததாலோ என்னவோ ரொம்ப லேட்டா தான் கிளம்பினேன். ஏற்கனவே பொன்னீலன் சார் என்னை காணோம்னு போன் வேற பண்ணிட்டார். அவசர அவசரமா கிளம்பி அவர கூட்டிட்டு விழா நடக்குற இடத்துக்கு போனப்ப மணி அஞ்சு. அதிகமான பேர் வரலைனாலும் சொந்த பந்தங்கள், நட்புகள், அப்பா, மாமான்னு எல்லாரும் முன்கூட்டியே அங்க உக்காந்துட்டு இருக்காங்க.


விழா நாயகி நீ, இப்படி லேட்டா வரலாமான்னு கேட்டுகிட்டே படபடன்னு மேடைல கூப்ட்டு உக்கார வச்சுட்டாங்க. எனக்கு ஒரே பயம். என்னடா இது, வந்த உடனே மேடைல ஏத்திட்டாங்களேன்னு. அப்பாவும் மேடைக்கு வருவார்ன்னு பாத்தா, அவர் கீழே உக்காந்துட்டு இருந்தார். சரிதான், ஆள் மேல வர மாட்டேன்னு அடம்பிடிச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.

.....................................................................

புத்தகம் ரெடி ஆனதுமே உடனே வெளியீட்டு விழா வச்சுடணும்ன்னு ரொம்ப துடிச்சேன். ஆனா பதிப்பாளர் ஜெபா தான் ஜனவரி இருபத்தி ரெண்டை தேர்வு செய்தார். அந்த நாள்ல தான் பொன்னீலன் சார் ப்ரீயா இருப்பார்ன்னு சொன்னார். நமக்கு நாள் கிழமை எல்லாம் முக்கியம் இல்ல, ஆனா பொன்னீலன் சார் வந்தே ஆகணும்ன்னு அடம். அதனால சரின்னு சொல்லிட்டேன். நூல் ஆய்வுரை சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் அவார்ட் வாங்கின மலர்வதி பண்ணினா நல்லா இருக்கும்னு ஜெபா விருப்பபட்டார்.


திடீர்னு ஒருநாள் ஜெபா, நம்ம program கூடவே இன்னொருத்தர் புக்கும் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். எனக்கு திடீர்னு என்ன சொல்லன்னு தெரியல. அன்னிக்கி சாயங்காலமே ஜெபாவும் ராமும் வீட்டுக்கு வந்து, இப்படி வைக்குறதால நமக்கு நல்லது தான். முத்தலக்குறிச்சி காமராசு சார் நிறைய புத்தகங்கள் எழுதினவர். அவர் கூட நம்மோட புத்தகத்த வெளியிடுறது ரொம்ப நல்லதுன்னு புரிய வச்சாங்க. வேலைகள் மளமளன்னு நடக்க ஆரம்பிச்சுது.

........................................................

இரண்டு புத்தகங்களோட வெளியீட்டு விழா இது.

முதல் புத்தகம் “தற்கொலைக் கடிதம்” நான் எழுதினது. இன்னொன்னு முத்தலக்குறிச்சி காமராசு சார் எழுதின “எனது பயணங்கள்” நூல்.

இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டது எழுத்தாளர் பொன்னீலன். தற்கொலைக் கடிதத்த பெற்றுக் கொண்டது சாட்சாத் என்னோட அப்பா, ஸ்ரீதரன் குமாரபெருமாள். நூல் ஆய்வுரை செய்தது எழுத்தாளர் மலர்வதி. எனது பயணங்கள பெற்றுக் கொண்டது டாக்டர். ச. மனக்காவல பெருமாள். அவரோட நூலை ஆய்வு செய்தவர் எழுத்தாளர் குமரி எழிலன்.

தலைமை: யுத்தப்பிரசங்கி ஜாண்முறே

வரவேற்புரை: கடிகை ஆன்றனி

முன்னிலை: வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன்

வாழ்த்துரை: ஜே.இ. ஜெபா

நன்றியுரை: கார்த்திக் புகழேந்தி

விழா ஏற்பாடு: திரிவேணி இலக்கிய சங்கமம்


நிகழ்ச்சி சரியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு எட்டே காலுக்கு முடிஞ்சுது. நானெல்லாம் புத்தகம் எழுதுவேனா அப்படிங்குற சந்தேகம் இருந்ததால கடிகை ஆன்றனி என்னை பத்தி என்ன சொல்லன்னு தெரியாம பாவம் நிறைய சமாளிச்சார். புத்தகத்தோட தலைப்பு பத்தி தான் அதிகமா கேட்டாங்க, எப்படி ஒரு எதிர்மறை தலைப்பை வைக்க முடிஞ்சுதுன்னு.

ராம் பேசுறப்ப, இந்த புத்தகத்த நான் தான் எடிட் பண்ணினேன். அதுக்கு என்ன தலைப்பு வைக்கன்னு தெரியாம இருந்தப்ப மனசுல தோணினது தான் இந்த தலைப்புன்னு சொன்னார்.

முத்தலக்குறிச்சி காமராசு சார் ஏற்கனவே மேடைல இருந்தவங்களுக்கு அறிமுகம் ஆனவர்ங்குறதால அவர பத்தின நிறைய விஷயங்கள் பேசினாங்க. அவர் எழுதின புத்தகங்கள், சாதனைகள்ன்னு நிறைய சொன்னாங்க. அதனால என்னோட புத்தகத்த பத்தியும் விழாவ பத்தியும் நான் இங்க சொல்லிக்குறேனே. முத்தலக்குறிச்சி காமராசு சார் என்னை மன்னிக்கணும்.

.............................................

பொன்னீலன் சார் பேச ஆரம்பிச்சப்ப தான் நான் கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்தேன். மேடைல இருந்தவங்கள்ல நமக்கு அவர மட்டும் தான தெரியும். என்னோட புத்தகத்த கைல வச்சுட்டு பக்கத்துக்கு பக்கம் அவர் குறிப்பு எழுதி வச்சிருந்தார். மெல்ல எட்டிப் பாத்தேன், என்ன எழுதி இருக்கார்ன்னு. ஆனா எதுவுமே தெரியல. மேடைல பேசுறப்ப, இந்த புத்தகத்த பத்தி பேச நிறைய விஷயம் இருக்குன்னு ஆரம்பிச்சு, முதல் கதை கன்னி பூஜை பத்தி பேச ஆரம்பிச்சார். பேச ஆரம்பிச்சார்ன்னு சொல்றத விட வரிவரியா வாசிக்க ஆரம்பிச்சார். இது தான் உன் மொழி. யாராலயும் சொல்ல முடியாத மொழின்னு பாராட்டினார். அதோட “இறந்து போன கன்னி பெண்களுக்கு பூஜை செய்வாங்க, ஆனா கன்னியா இறந்த ஒரு ஆணுக்கு நடக்குற பூஜையை நீ தான் முதல் முதல்ல பதிவு பண்ணியிருக்க”ன்னு சொன்னப்ப நான் என்னோட சித்திகள், மாமாக்கள் முகத்த கவனிச்சேன். அவங்க முகத்துல ஒரு பெருமிதம். பின்ன, எங்க வீட்ல நடக்குற கன்னி பூஜைய தான நான் எழுதி இருந்தேன். அப்புறமா, “இருப்புக் குழி” சிறுகதை பத்தி பேசினார். “அன்புள்ள ராமையாவுக்கு” எழுதின கடிதத்த பாராட்டித் தள்ளினார். நான் வாயடைச்சு போய் எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்தேன்.



அடுத்ததா என்னோட நூலை ஆய்வு செய்த எழுத்தாளர் மலர்வதி என்ன சொல்லுவாங்களோன்னு பதட்டத்தோட இருந்தேன். ஆனா எடுத்ததுமே “தற்கொலைக் கடிதம்” பத்தி பேச ஆரம்பிச்சு என் பதட்டத்த தணிச்சுட்டாங்க. “எனக்கு வாழணும். மனசுல இருக்குற வெறி அடங்க அடங்க வாழணும்”ன்னு நான் எழுதி இருந்தத குறிப்பிட்டு அவ்வளவு தான், இது தான் மொத்த சாராம்சமும்ன்னு சொன்னாங்க. அப்பா பத்தி எழுதி இருந்தத குறிப்பிட்டு, தன்னோட பூனை குட்டி நியாபகம் வந்ததாகவும், தீனிப் பண்டாரங்கள் படிச்சுட்டு கருவாட்டுக் குழம்ப பத்தி பேசினாங்க. மொத்தத்துல நிறைய பாராட்டினாங்க. ஒரு மாதிரி நான் காத்துல மிதந்துட்டு இருந்ததால அதெல்லாம் இங்க என்னால எழுத்துல குடுக்க முடியல.

ஜெபா பேசுறப்ப, என்னோட மனைவி தலைவலிக்குதுன்னு இப்ப சொன்னா எனக்கு பதறுது. அது தான் இந்த புத்தகத்தோட வெற்றின்னு சொன்னார். ஜெபா, அடுத்த முறை உங்க மனைவி தலைவலிக்குதுன்னு சொன்னா கண்டிப்பா நீங்க அவங்க பக்கத்துல இருப்பீங்க. எனக்கு தெரியும்.

........................................

நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாரும் வந்து கைக்குடுத்தாங்க. என்னோட மாமா, மாமி, சித்தின்னு ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமா கிளம்பி போனாங்க. எனக்கு அது தான் வெற்றியா தோணிச்சு.

சொக்கலிங்கம் சார் நான் ரொம்ப நல்லா பேசினேன், மனசுல இருக்குறத யதார்த்தமா பேசினேன்னு சொன்னார். இந்த இடத்துல என்னையும் அவங்கள்ல ஒருத்தியா மதிக்குற “கலை இலக்கிய பெருமன்ற”த்துக்கு என்னோட நன்றிய கண்டிப்பா நான் சொல்லியாகனும்.

.......................................

இந்த பதிவ எழுதிட்டு இருக்கும் போது இந்தா இப்ப தான் பொன்னீலன் சார்கிட்ட இருந்து போன்....

கால் அட்டென்ட் பண்ணி "ஹலோ"ன்னு சொன்னதுமே "எம்மா உன் புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு"ன்னு சொன்னார். குரல்ல அவ்வளவு உற்சாகம்...

"மனக்காவல பெருமாளே உன்னோட புத்தகத்துல அஞ்சு காப்பி வேணும்னு சொன்னாராம். இப்படியே உன் புக் வித்து தீர்க்குது. உன்கிட்ட இருக்குற மொழி அப்படிப்பட்டது"ன்னு பாராட்டினார்.

"எழுத்துலகத்தில் நீ அங்கீகரிக்கப்பட்டு விட்டாய்"ன்னு அவர் சொல்றது எல்லாம் சாதாரணமான விசயமா என்ன?

"இனி நீ படிபடியா உன்னை முன்னேற்றி உன் மொழிய உன் ஊருக்குள்ள இழுத்துட்டு வா. வேற எவனும் சொல்ல முடியாத மொழிக்கு போயிரு. அந்த மொழில நீ நின்னுட்டா ஒருத்தராலயும் நிக்க முடியாதுல"ன்னு சொன்னப்ப நன்றி சொன்னேன்.

"நன்றி எல்லாம் வேணாம் மா. நீ ஆரம்பி"ன்னு சொல்லிட்டு அடுத்த கூட்டங்களுக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மான்னு சொல்லி போன வச்சார்.

இதுக்கு மேல வேறென்ன வேணும்?

................................................................


கொசுறு தகவல்: அன்னிக்கி மொத்தமா வித்த என்னோட புத்தகத்து எண்ணிக்கை அறுபது

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.marinabooks.com/detailed?id=5%200280

http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html


 

Friday, 13 January 2017

சென்னை புக் ஃபேர்: - தற்கொலைக் கடிதம் review



நான் blog எழுதுறது, பேஸ்புக்ல page வச்சிருக்குறது எதுவும் என் நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியவே தெரியாது...

சொந்தக்காரங்க யார் ஐடி கண்ணுல பட்டாலும் block பண்ணிட்டு, facebook-கா அப்படினா என்னதுன்னு அவங்ககிட்டயே திருப்பி கேப்பேன்...

ஆனா முதல் தடவையா துணிச்சலோட என்னோட எழுத்துக்கள ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகமா போடலாம்ன்னு முடிவெடுத்து, நானாவே தான் எழுத்தாளர் பொன்னீலன்Bhaktavatsalan Ponneelan சார்கிட்ட போய் காமிச்சேன்.

படிச்சு பாத்துட்டு நிறைய பாராட்டினார். அவரே அதுக்கான அணிந்துரையும் எழுதி குடுத்து, அத எப்படி புத்தகமாக்குறதுன்னு வழி முறையும் காட்டித் தந்தார்.

அவரோட வழிகாட்டுதல்ல என்னோட புத்தகம் வெளிவந்து இப்ப சென்னை புக் ஃபேர்ல விற்பனைக்கும் வந்துடுச்சு.

என்னதான் துணிச்சலோட நான் இத எல்லாம் செய்தாலும் சொந்தக்காரங்க மத்தியில எனக்கு எந்த விதமான ரியாக்சன் இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்...

அதனால தான் யார் கண்ணுலயும் என்னோட புத்தகத்த காட்டாம எல்லாத்தையும் அல்மாராவுல வச்சு பூட்டி வச்சேன்...

அப்படி இருக்குறப்ப தான் என் மாமா பொண்ணு என்கிட்ட என் புத்தகத்த படிக்க கேட்டா. பயம் தான், என் எழுத்த படிச்சுட்டு என்ன சொல்லுவாங்களோன்னு. ஆனாலும் ஏதோ ஒரு துணிச்சல்ல எடுத்து குடுத்தேன்...

புத்தகத்த முழுசா படிச்சுட்டு அவ குடுத்த review இனி....
______________________________

ஒரு வித்யாசமான உணர்ச்சிகள புரிஞ்சுக்குற மாதிரி ஒரு புக் அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல படிக்குறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.

சிரிப்பு, அழுகை ரெண்டையும் ஒரே புத்தகத்துல கொண்டு வந்துட்டீங்க. நம்ம ஊருல இருக்குற specialities-சும் வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கீங்க. என்னோட generation-கே இதெல்லாம் தெரியல...

Food items- ச சாப்பிடுறது மட்டும் இல்லாம அதையும் தாண்டி.... ரொம்ப சுவாரஸ்யம்.

உங்கள சின்ன வயசுல இருந்து தெரிஞ்சதால உங்களோட பார்வை & எண்ணங்கள், மாமா, அத்தை எல்லாரையும் உங்க எழுத்துக்கள்ல புதுசா உணர முடிஞ்சுது...

உங்க மேல இன்னும் பெரிய மரியாதை வந்துருக்கு.

கதைகள்ல என்னோட favorites by order.... 2,5,1,13,20,10,14,17

மத்த எல்லா கதைகளும் பிடிச்சிருந்துச்சு. ஆனா இதெல்லாம் என்னோட உணர்ச்சிய வெளிப்பட வச்சது...

12-ல நீங்க சொல்லியிருக்குற திமிரான உணர்ச்சி பூர்வமான காதல் கலக்கல்...

இந்த review -லாம் சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்குதானு எனக்கு தெரியாது. but சொல்லலனா என் மனசு கேக்காது.

உங்கள் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்....
______________________________

இத படிச்சதும் நிஜமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... அப்படியும் என்னால நம்ப முடியாம "அப்போ துணிஞ்சு அடுத்த புக் ரெடி பண்ணலாம்ல. பயந்துட்டே இருந்தேன்"ன்னு கேட்டேன்...

"கண்டிப்பா அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல்ல எங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தெரியாத விசயத்த வித்யாசமான கண்ணோட்டத்துல சுவாரஸ்யமா சொல்ல ரொம்ப கஷ்டம். அத எதார்த்தமா படிக்கவும் உணரவும் முடியுது. இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா ரெடி பண்ணுங்க, நாங்க இருக்கோம்"ன்னு சொன்னா.
_______________________

அவ குடுத்த review தைரியத்துல நான் இன்னும் சத்தமா உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குறேன்....

சென்னை புக் ஃபேர்ல என்னோட புத்தகம் கிடைக்குற அரங்குகள்

புதினம் புக்ஸ் : ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536

___________________________

என்னை பத்தி எதுவுமே தெரியாத போதும் துணிச்சலா இந்த புத்தகத்த அழகா வடிவமைச்சு, அச்சிலேற்றி குடுத்துருக்குற J.e. Jebha-வுக்கும் உறுதுணையா இருந்த Ram Thangam- அவர்களுக்கும் என்னோட நன்றி.

Thursday, 5 January 2017

தலைகால் புரியாத தருணம் - தற்கொலைக் கடிதம்



நாலு பேரு நாலு வார்த்த நல்லதா சொன்னா நம்ம மனசுக்குள்ள வர்ற சந்தோசமே தனி. என்னதான் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாதுன்னு சொன்னாலும் நம்மள தூக்கி கொண்டாடவும் சில உறவுகள் வேணும் கண்டிப்பா... சோர்ந்து போற நேரத்துல எல்லாம் அவங்க வார்த்தைகள் தான் நமக்கு உற்சாக டானிக்...

நம்மோட நலன் விரும்பிகள நாம தேர்வு செய்ற விதம் ரொம்ப அவசியம். நாம எது செய்தாலும் சரின்னு சொல்றவங்க சில பேரு இருப்பாங்க. கிட்டதட்ட கண்மூடித்தனமா நம்மள நம்புறவங்க அவங்க. அவங்களோட அன்பு மெய்சிலிர்க்க வைக்கும், அதே நேரம் நிறைய கூச்சத்தையும் தயக்கத்தையும் குடுக்கும். என்ன இவங்க இப்படி பாராட்டுறாங்க, இதுக்கெல்லாம் நாம வொர்த் இல்லையே அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பயம் எட்டிப் பாக்கும். இவங்கள எல்லாம் நான் தள்ளி நின்னே அன்பு செய்வேன். நிறைய அன்பு செய்வேன், அவங்க பாராட்டினா கூச்சத்தோட ஒரு ஓரமா ஒதுங்கிடுவேன்...

இன்னொரு வகை உண்டு. நாம செய்ற செயல் அவங்கள ஈர்க்கலன்னா அப்படியே கடந்து போய்டுவாங்க. அதே நேரம், அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை பாராட்டாம போக மாட்டாங்க. அப்படி ஒருத்தர் வெற்றி விடியல் சீனிவாசன் சார். மனுஷன் நச்சுன்னு ஒரு கமன்ட் தான் போடுவார், அத பாத்தாலே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோசம் எட்டிப்பாக்கும் பாருங்க... அத எல்லாம் எழுத்துல விவரிக்கவே முடியாது.

அடுத்தது, நாம செய்ற நல்ல விசயங்கள பாராட்டவும், தப்பு செய்தா நச்சுன்னு குட்டவும் செய்ற தோழமைகள். Academic side –ல எனக்கு அப்படி ரெண்டு பேர் வாய்ச்சிருக்காங்க. ஆள் பெரிய ஆள், multitalented- ன்னு பாராட்டவும் செய்வாங்க, லூசாப்பா நீயி, உனக்கு அறிவே கிடையாதான்னு பளிச்சுன்னு கேட்டுறவும் செய்வாங்க.

ஒரு விஞ்ஞானியாகணும்ன்னு கண்ட கனவெல்லாம் சாத்தியமேயில்லன்னு ஆனதுக்கப்புறம், எழுத்துப் பக்கம் என் கவனம் திரும்பிய போது, பாராட்டவும் குட்டவும் சரியான ஒரு ஆள் இல்லாம நிறைய திணறியிருக்கேன். இங்க இருக்குற நட்புக்கள் எல்லாம் எனக்கு உற்சாகத்த மட்டுமே குடுக்குறவங்களா அமைஞ்சு போய்ட்டாங்க. யார்கிட்ட போய் என் நிறை குறைகள கேக்குறதுன்னு புரியவும் இல்ல.

ஏன்னா, குறைகள் சொல்லணும்னே நிறைய பேர் இருப்பாங்க. அவங்க வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்தோம்னா நம்மோட வீழ்ச்சி ஆரம்பிச்சிடுச்சுன்னு அர்த்தம். அதே நேரம், நாம நல்லா இருக்கணும்ன்னு நம்மோட குறைகள சுட்டிக் காட்டுறவங்க இருப்பாங்க. அவங்க தான் நம்மோட வரம். அவங்கள விட்டுடவே கூடாது. ஏதோ ஒரு தருணத்துல மனசு வலிச்சாலும் எதார்த்தத்த புரிஞ்சுக்குற பக்குவத்த நாம வளத்துக்க இவங்க பக்கபலமா இருப்பாங்க.

வட்டார வழக்குல தான் எழுதுறேன் அப்படின்னு நான் நம்பிட்டு இருந்த நேரத்துல, “எம்மா, நேத்து ரொம்ப நேரம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப நேரம்... நல்லா எழுதுற, ஆனா உன்கிட்ட ஒரு கொற இருக்கு. உன் ஊரு மொழி இருக்கே, அது ஒலகத்துல எந்த இடத்துலயும் இல்லாதது, நீ அத தவற விட்டுருக்க. வட்டார மொழிய படி, அத பிடி, அத எழுது” அப்படின்னு பொன்னீலன் ஐயா சொன்னதுக்கப்புறம் தான் ஆஹா இப்படி தான ஒரு மனுசன தேடிட்டு இருந்தேன்-ன்னு ஒரே சந்தோசமாகிடுச்சு.

“என்னைப் பத்தி அப்படி என்ன பேசுனீங்க”ன்னு கேக்க ஆச தான். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. எல்லாமே வெளியீட்டு விழா அன்னிக்கி கேக்கத் தானே போறேன்னு மனச தேத்திகிட்டேன்.

“இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கு. நான் எழுதினத மக்கள் ஏத்துக்குவாங்களாங்குற ஒரு உதறல் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு. பயத்துல கையெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. என்னோட புத்தக வெளியீட்டு விழாவுல நீங்க பேசப் போறத கேட்டு தான் என்னை பத்தி நானே ஒரு முடிவுக்கு வர முடியும்” அப்படின்னு சொல்லிட்டு வேற என்ன பேசன்னு கூட தெரியாம வார்த்தைகளற்று நின்னுட்டேன்.

“அந்த பயம் இருக்கத்தானே செய்யும். இது உன்னோட பிரசவம்ல. பிரசவ நேரத்துல ஒரு தாய்க்கு எவ்வளவு பயம் இருக்கும். அந்த பயம் தான் உனக்கும் இருக்கு. போக போக பழகிடுவ. அனுபவங்கள ஆசானா எடுத்துக்கோ”ன்னு ஆறுதலும் சொன்னார்.

புத்தகம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன, அந்த ஒவ்வொரு கதை ஆரம்பத்துலயும் வர்ற டிசைன் கருப்பா இருக்கு. அத வெள்ளையா போட்டுருக்கலாம், சரி, அடுத்த புத்தகத்துல சரி பண்ணிப்போம்” அப்படினார்.

நீ எழுதணும்ன்னு வந்துட்ட. இனி நீ நிறைய புத்தகங்கள படிக்கணும், அப்ப தான் ஒவ்வொருத்தரும் என்னென்ன கண்ணோட்டத்துல எழுதுறாங்கன்னு உனக்கு பிடிபடும். அத தொடர்ந்து உனக்குன்னு ஒரு பாணிய பிடிச்சுக்கோ, நீ நல்லா வருவ”ன்னார்.

நான் சொன்னேன் “எனக்கு புத்தகங்கள படிக்குறத விட மனுசங்கள படிக்கணும்னு ஆச. நேரடியா அந்த மக்களோட கலந்து இருக்கணும்னு ஆச”ன்னு சொன்னேன்.

“எம்மா, இது பெரிய விஷயம். நீ தாராளமா செய்”ன்னு சொன்ன ஆசீர்வாதத்த பிடிச்சுட்டு கொஞ்சமாவது மேல வரணும்னு ஒரு ஆச துளிக்க ஆரம்பிச்சிடுச்சு.

கடைசியா கிளம்பும் போது என் புத்தகத்த அவர் கைல குடுத்து, உங்களோட “ஆட்டோகிராப்” வேணும். எழுதி குடுங்கன்னு கேட்டேன்.

அவர் எழுதினது இது தான்....

“பொட்டல் வட்டாரத்தில் என் தொடர்ச்சியாக வளரும் இனிய படைப்பாளி Dr. ஜீவாவுக்கு

- அன்புடன் பொன்னீலன்

4-1-2017

Friday, 23 December 2016

சுயபச்சாதாபமும் பழிகளும்



நேத்து எனக்கும் என் lab assistant- க்கும் நிறைய வாக்குவாதம்.

தனக்கு பாத்து வச்ச மாப்பிளை சரியில்லன்னும் வேணும்னே சதி செய்து நாசம் பண்ணி தன்னோட குடும்பத்து ஆளுங்க தன்னை நடுத்தெருவுல விட்டுட்டாங்கன்னு புலம்பிகிட்டே இருந்தாங்க.
இடையிடைல “அவ மட்டும் சந்தோசமா இருக்கா. எப்பவும் என் அண்ணன்கிட்ட போன்ல பேசிகிட்டே இருக்கா. நானும் இப்படி மாப்பிள்ளை கூட பேசணும்னு ஆசைப்படுறேனே, ஆனா நான் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனே”னு அண்ணன் மனைவி மேல ஆவேசம் வேற.

இத்தனைக்கும் இவங்கள காத்திருந்து ஸ்கூட்டில கூப்ட்டுட்டு ரெண்டு பேரும் ஒண்ணா தான் காலேஜ் வராங்க.

" யாரும் வேணும்னே யாரையும் நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினச்சி பண்ணினது இப்படி ஆகிடுச்சு. "நடந்தது நடந்தாச்சு, முதல்ல அடுத்தவங்கள குறை சொல்றத நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கைல உருப்பட முடியும்" னு சொன்னதும் "எப்பவும் ஈஈஈ்னு இளிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு என் கஷ்டம் புரியாது"ன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.
சரிதான், இனி வாயக்குடுத்தா நமக்கு தான் அசிங்கம்னு வாய மூடிகிட்டு Bell அடிச்சு பிள்ளைங்க வரவும் class எடுக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல dehydration, low bp- னு எனக்கு படபடன்னு மயக்கமா வர "madam கொஞ்சம் கேண்ட்டீன்ல சுடு தண்ணி வாங்கிட்டு வாங்களேன்"னு கேக்க "அதெல்லாம் என்னால முடியாது"னு சொல்லிட்டாங்க. நான் நாக்கு குழறி மெதுவா சாய்றத பாத்த பிள்ளைங்க தான் ஓடி போய் சுடு தண்ணி வாங்கி குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் ஒழுங்கா படிக்குறது இல்ல, ஒரு practical உருப்படியா பண்றது இல்லன்னு அப்ப தான் திட்டி தீத்துருந்தேன்.

இன்னிக்கி lab- ல நுழைஞ்சதும் “ஹிஹி... தண்ணி வாங்கி தரலைன்னு கோபமா”ன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் முறைச்கிகிட்டே seat –ல போய் உக்காந்துகிட்டு class adjustment, official phone calls-ன்னு வேலைய பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல மனசுக்கு என்னவோ தோண, அவங்கள பாத்தேன். என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. பட்டுன்னு சிரிச்சுட்டு, “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் ஓவரா போச்சு, காலைல சாப்ட்டீங்களா இல்லையா, இல்லனா முதல்ல போய் சாப்டுங்க போங்க”ன்னு சொன்னேன். அது வரைக்கும் உம்ம்முனு இருந்த அவங்க முகம் பிரகாசமாகி, சரின்னு போய்ட்டாங்க.

Practical பண்ண வந்த பிள்ளைங்க இத கவனிச்கிட்டே இருந்தாங்க. “ஏன் மேடம் அவங்ககிட்ட பேசுனீங்க? எல்லாம் நீங்க வச்சு குடுக்குற இடம். நாங்க கவனிச்சுட்டு தான் வரோம், அவங்க உங்கள நிறைய எதிர்த்து பேசுறாங்க, மதிக்க மாட்டேங்குறாங்க, எங்ககிட்ட கூட ரொம்ப கோபப்படுறாங்க மேடம்”ன்னு சொல்லவும் “நேத்து நானும் தான் உங்கள நிறைய திட்டினேன், ஆனாலும் நீங்க எனக்கு help பண்ணுனீங்க தானே, அப்படி வச்சுக்கோங்க இதையும். நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்காக கோபப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்”ன்னு கேட்டுகிட்டே, “சரி சரி, வேலைய பாருங்க, வந்துட்டாங்க கதை கேக்க”ன்னு மறுபடியும் திட்டி தொரத்தி விட்டுட்டேன்.

என் lab assistant மாதிரியான பெண்கள் அநேகம் பேர் இங்க இருக்காங்க. வாழ்க்கைல அவங்களுக்கு வர்ற stress, அதனால தொடர்ந்து வர்ற மன அழுத்தங்கள். ஏன், நானே கூட இந்த வகையறா தான். நிறைய கோபம், நிறைய அழுகைன்னு ஏதோ ஒரு சூழல்ல சிக்கி, அதுல இருந்து வெளிவர போராடிகிட்டு இருக்குற ஒரு சராசரியான மனுஷ ஜென்மம் தான் நானும்.

ஒருத்தங்க மேல ஒரு பழிய போடுறதுக்கு முன்னாடி, அவங்க என்ன நிலைமைல இருக்காங்க, இத அவங்க செய்திருப்பாங்களா, அப்படியே செய்திருந்தாலும் எதுக்காக செய்திருப்பாங்கன்னு அவங்கள சார்ந்து அவங்க மனநிலைல இருந்து யோசிச்சோம்னாலே பல நேரம் பல misunderstanding சரியா போக வாய்ப்பு இருக்கு. எனக்கு என் lab assistant பத்தி தெரியும். அதனால அவங்கள என்னால adjust பண்ண முடியுது. என்னைப் பத்தி பசங்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், அதனால அவங்களால என்னை adjust பண்ணி போக முடியுது அவ்வளவு தான்.

ஆனா இதெல்லாம் எத்தனைபேருக்கு சரியா புரியும்னு நம்மால சொல்ல முடியாது. காரணம் இயலாமையும் ஆற்றாமையும் அதிகம் ஆகிடுச்சுனா நாம உடனே கைல எடுக்குற ஆயுதம், நம்மோட நிலைமைக்கு காரணகர்த்தாவா அடுத்தவங்கள கைக்காட்டுறது தான்.

“என் வாழ்க்கைய கெடுத்ததே அவன்/ அவள் தான்”ன்னு ரொம்ப ஈசியா அடுத்தவங்கள கைகாட்டிகிட்டு நம்மோட இந்த நிலைமைக்கு நாம காரணம் இல்லன்னு நமக்கு நாமே சமாதானம் செய்துக்குறோம். ஆக மொத்தத்துல பெரும்பாலும் நம்மோட கற்பனைப்படி நாம எப்பவும் நல்லவங்களாவே இருப்போம். ஆனா நமக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கும். அதாவது நம்மள தவிர்த்து எல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க, எப்படா நம்ம காலைவாரி விடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க. 

இப்படி அதீத கற்பனைகுள்ள சிக்கிகிட்டவங்களால அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து வெளிவர முடியாம போய்டுது.

தன்னோட கஷ்டங்களுக்கு யார் மேலயாவது பழி போடுறவங்க அடுத்து நாடுறது கோவில் பூசாரிகளையும் ஜோசியக்காரர்களையும் தான். சில பேர் ஒரு படி மேல போய் சாமி மேலயே பழி போடுவாங்க. “என் வாழ்க்கைய கெடுத்தது முத்தாரம்மன் தான், அவ தான் என்னை நாசம் பண்ணிட்டா. என்னை வாழ விடாம பண்ணிட்டா”ன்னு எல்லாம் காதுல விழுறப்ப பாவம் இந்த அம்மன்மார்கள்ன்னு அவங்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியுது என்னால. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு அத குடு, இத குடுன்னு அவங்கள disturb பண்ணாம இருக்கேன். பாவம், மேல குறிப்பிட்ட என் lab assistant மாதிரியானவங்ககிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி இருக்குற முத்தரம்மன நான் வேற தொல்லை பண்ணனுமா என்ன?

பெண்கள்ல இன்னும் சில வகைகள் உண்டு. இந்த மாதிரி stress, depression –ல இருக்குறவங்கள உக்கார வச்சு நல்லா கதை கேட்டுகிட்டு, “ஐயோ பாவம், நீ எவ்வளவு நல்லவ. உன் மாமியார்/ புருஷன் இவ்வளவு மோசமானவங்களா? உன்னால தான் இதெல்லாம் சமாளிக்க முடியுது, உனக்கொரு விடிவு வராதா”ன்னு ரொம்ப பரிதாபப்படுவாங்க. சிலபேரு இன்னும் ஒரு படி மேல போய் “அந்த கோவிலுக்கு போனா பரிகாரம் பண்ணலாம், இந்த சோசியர்கிட்ட போனா நல்ல பலன் உண்டு”ன்னு ஏத்தி விடுவாங்க. அவங்க அந்தப் பக்கம் போனதும், அவங்கள பத்தின கேலிகளும் கிண்டல்களுக்கும் அவங்களுக்கு நல்ல time pass –சா இருக்கும்.

இந்த விசயத்துல தான் நான் ரொம்ப முரண்படுவேன். அவங்களா என்கிட்ட ஏதாவது சொல்ல வந்தா காது குடுத்து கேக்காம இருக்க மாட்டேன். கேப்பேன். ஆனா நிறைய குறுக்கு விசாரணை பண்ணுவேன். தப்பு பெரும்பாலும் இவங்க பெயர்லயே இருக்கும். “நீங்க செய்றது தப்பு”ன்னு முகத்துக்கு நேரா காரண காரியங்களோட விளக்கிடுவேன். ரொம்பவே argue பண்ணிட்டு இருந்தா, “போங்க, போய் வேலைய பாருங்க”ன்னு தொரத்தி விடுவேன். பெரும்பாலும் நான் அவங்ககிட்ட முகத்துல கடுமை தான் காட்டியிருக்கேன். அப்படியும் ரெண்டு பேரும் மறுபடியும் புன்னகையோட வலம்வர முடியுதுனா அவங்களுக்கு என் மேல ஏதோ ஈர்ப்பு, இவங்க என்னவோ சொல்ல வராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.

ஒரு தடவ வாய்விட்டே கேட்டேன், “இவ்வளவு திட்டியும் எப்படி என் பின்னாலயே வரீங்க”ன்னு. “நான் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைக்குறீங்க. அது எனக்கு நல்லா புரியுது”ன்னு சொன்னாங்க.

அவ்வளவு தான் வாழ்க்கை. அவ்வளவு தான் புரிதல். 

என்ன கஷ்டம் வந்தாலும் “ஐயோ என் நிலைமை இப்படி ஆகிபோச்சே”னு சுய இரக்கமோ அனுதாபமோ நம்ம மேலே நமக்கு வந்துடவே கூடாது. அதுல மட்டும் சரியா இருந்துடணும். அந்த விசயத்துல நான் வரம் வாங்கி வந்துருக்கேன்.

Tuesday, 13 December 2016

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நானும்



போன வாரத்துல திடீர்னு ஒரு போன் கால்.

“எம்மா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பா பத்தாம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போய்ட்டு வாயேன்”ன்னு சொன்னது சாட்சாத் எழுத்தாளர் பொன்னீலன் தான்.

“ஏதாவது மீட்டிங் போனா என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன்”ன்னு நான் தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.

“சரி, நான் போறேன், அது எங்க நடக்குது”ன்னு நான் கேட்டதும், “நீ போறியனா என்னெயும் கூட்டிட்டு போய்டேன், நானும் உன்கூட வந்துடுறேன்”ன்னார்.

“ஹப்பாடா, நல்லவேளை, வழி தெரியாம நாகர்கோவில்ல திணற வேணாம், தப்பிச்சோம்”ன்னு மனசுல நினச்சுட்டே, “ஐயோ கண்டிப்பா கூட்டிட்டு போறேன், எத்தன மணிக்கு உங்கள கூப்ட வரணும்”ன்னு விவரம் எல்லாம் கேட்டுகிட்டேன்.

அவர்கிட்ட சொன்ன மாதிரியே அஞ்சு மணிக்கு அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க, அவர் கூட அவர் மனைவியும் வந்தார். ஏற்கனவே ரெண்டு மூணு நாள் அவர் வீட்டுக்கு போயிருக்குறதால அவங்க கூடவும் நல்ல அறிமுகம். அதுவும் பத்து நாள் முன்னால வீட்டுக்கு போனப்ப அவங்க போட்டு தந்த டீ பிரமாதம். பொன்னீலன் சாருக்கு குடுக்காம நாங்க மட்டும் குடிச்சுட்டு வந்துருந்தோம்.

“சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு போறா, அவள செட்டிகுளத்துல இறக்கி விடணும்மா”ன்னு இவர் சொன்னதும் பரஸ்பரம் சிரிச்சுகிட்டே சரின்னு தலையாட்டிகிட்டேன். கார்ல வர்றப்ப ரோடும், அத உடச்சி போட்டுருக்குற விதத்தையும் பத்தி தான் பேசிகிட்டே வந்தோம். அவங்கள இறக்கி விட்டுட்டு நாங்க அப்படியே டதி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஓய்வு பெற்றோர் சங்கம் இருந்த இடத்துக்கு போனோம்.

அது சா. தேவதாஸ் அவர்களோட இரண்டு நூல்கள் பத்தின கருத்தரங்கம்.

தலைமை கவிஞர் நட. சிவக்குமார்.

சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த விவரிச்சு ஹச். முஜீப் ரஹ்மானும், “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே அவர்களும் பேசினாங்க. கடைசியா உரை சா. தேவதாஸ்.

கவிஞர் நட. சிவகுமார் பேசினப்ப கால்வினோ கால்வினோனு நிறைய பேசினார். கால்வினோவோட ரெண்டு குட்டி கதைகளையும் சொன்னார். கால்வினோவோட காதலன்னும், அவர படிச்சி வாழ்ந்தவன்னு பெருமையா பேசினார். ஹச். முஜீப் ரஹ்மானுக்கும் அவருக்கும் உள்ள நட்பை பத்தி பேசினார். கால்வினோ இல்லனா தன்னோட மூளை செத்துப் போயிருக்கும்னு சொன்னார். நிஜமாவே எனக்கு அவர் சொன்ன ரெண்டு கதைகளோட முடிவுல என்ன சொல்ல வந்தாங்கன்னு புரியவே இல்ல. என்னை மாதிரி ஆட்களுக்கு அவங்க இவ்வளவு பரவசப்பட்டு சிலாகிச்ச கால்வினோவோட அருமைகள கொஞ்சம் புரிய வச்சிருக்கலாம்.

ஹச். முஜீப் ரஹ்மான் பேசினப்ப, எவ்வளவு தான் நாம இதிகாசங்கள படிச்சிருந்தாலும் உலக இலக்கியம் படிச்சா தான் ஒரு விரிவான பார்வை கிடைக்கும்னு சொன்னார். கால்வினோவ தெரிஞ்சுக்கணும்னா க்யூபாவ அறிஞ்சிருக்கணும், லத்தீன் மொழிய அறிஞ்சிருக்கணும், லத்தீன் பாரம்பரியத்த அறிஞ்சிருக்கணும், இத்தாலிய அறிஞ்சிருக்கணும், இத்தாலிய எழுத்தாளர்களை அறிஞ்சிருக்கணும், அப்ப தான் கால்வினோ பத்தி அறிஞ்சிக்க முடியும்னு சொன்னார்.

ரியலிசம் என்னும் எதார்த்தவாதம் சமூகத்தில் உள்ளதை உள்ளப்படி காட்டுற விதம். ரியோ-ரியலிசம் விளிம்பு நிலை மக்களை காட்டுகின்ற முறை. இதுல இலத்தீன் அமெரிக்க பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒரு புதிய மாய யதார்த்தம்ங்குற முறையை பயன்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் கால்வினோ. அதனாலேயே இத்தாலிய வரலாற்றில் கால்வினோ ரொம்ப முக்கியமானவர்னு ஹச். முஜீப் ரஹ்மான் சொன்னார்.

கால்வினோ கதைகள, புத்தகங்கள நாலு பக்கத்துக்கு மேல யாராலும் படிக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏன்னா அந்த முறையே ஒரு அதிர்ச்சிகரமான முறையாம். இப்படியான முறைல கதை சொன்னா அத எப்படி வாசகர்கள் ஏத்துக்குவாங்கங்குற கேள்வி ஆசிரியருக்கு இருந்துருக்கணும், ஆனா அந்த காலகட்டத்துல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவோட ஏகாதிபத்தியத்தால நிறைய பாதிக்கப்பட்டதுனும், அப்படி பாதிச்சதால தான் வித்யாசமான கதைகள் எல்லாம் அமைஞ்சதுனும், மேற்கத்திய நாடுகள் இலக்கிய தரங்கள்ல சிறந்து விளங்கினதால அவங்களால அத புரிஞ்சுக்க முடிஞ்சுதுனும் சொன்னார்.

அரசுக்கு எதிரான, ஸ்தாபனங்களுக்கு எதிரான கதைகள கால்வினோ நேரடியா சொல்லாம மாற்று விஞ்ஞான முறை மூலமாகவும் விர்சுவல் பிக்சன் மூலமாகவும் வேற முறைகள்ல சொல்ல ஆரம்பிக்குறார். இத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய குரலா பதிவு செய்றார். அவர் எந்த மாதிரியான எழுத்தாளர், அவருடைய தேடல்கள் என்னவா இருந்துச்சுங்குற விவரங்கள் எல்லாமே சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சதுனும், கால்வினோவோட இன்னும் நெருக்கமாக இந்த புத்தகம் உதவிச்சுன்னும் ஹச். முஜீப் ரஹ்மான் தெரிவிச்சார்.

அடுத்து “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே பேச வந்தார். மனுசர் நிஜமாவே நிறைய சுவாரஸ்யங்களோட பேசினார். பாக்தாத் அழகி ஒருத்தியை காதலிக்குற மூணு பேர் பத்தின கதை சொன்னார். காதலனோட வேலை காதலிச்சுட்டே இருக்குறது தான். அத தவிர்த்து மாயாஜாலங்களை செய்பவன் காதலனாக முடியாதுன்னு சொன்னார். ஒரு மரண தண்டனை கைதி எப்படி தப்பிக்குறார், எப்படி வீட்டுக்கு போறார், கடைசி காட்சியில தூக்குல போடப்படுறார் அப்படிங்குற ஒரு குறும்படம் பத்தி சொல்லிட்டு, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி பேச ஆரம்பிக்குறார்.

அந்த புத்தகத்துல பதினோரு கட்டுரைகள் இருக்குறதாவும் மரணத்தண்டனைக்கான சட்டத் திருத்தத்துக்கான அவசியம் பத்தியும் பேசினார். பேரறிவாளன், யாகூப் மேனன் பற்றி பேசி, மரணத் தண்டனையை எதிர்த்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அவசியத்த எடுத்து சொன்னார்.

பிறப்பும், இறப்பும் யாராலயும் முன்பதிவு செய்யவே முடியாது. ஆனா தனியறைல அடைக்கப்பட்ட, மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை என்னவாயிருக்கும்?. சிவசங்கர், ஒரு பத்து நிமிஷம் தனித்துவிடப்பட்ட தன்னோட சொந்த அனுபவத்த சொல்லி, அது எத்தனை கொடுமையானதுன்னு உணர வச்சார். மனிதன் ஒரு சமூக பிராணி, இந்த விலங்குக்குள்ள பல விலங்குகள் இருக்கும். இப்படியான மனுசன மறுபடியும் ஒரு விலங்கு நிலைக்கு கொண்டு போறது தான் மரணத்தண்டனை, ஆயுள் தண்டனைய விட மிக கொடுமையானது மரணத் தண்டனைனு விவரிச்சார்.

இன்னிக்கி இந்தியாவுல ஜாதி அடிப்படையான தண்டனைகள் தான் அதிகம்னும், கொடுக்கப்படுற தண்டனைகள்ல 94 சதவிதத்த தலித் மக்களும், பாட்டாளி மக்களும் தான் அனுபவிக்குறாங்கன்னு புள்ளி விவரங்கள் சொன்னார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான விசயங்கள், பயங்கரவாத தாக்குதல், கூட்டு மனசாட்சின்னு மரண தண்டனைக்கு ஆதரவா பேசுறவங்க சொல்லலாம், ஆனா தண்டனைகள் குடுத்துட்டா மட்டும் குற்றங்கள் குறைஞ்சிடுமா? அப்படின்னு கேள்விகள் கேட்டுட்டு, இங்கிலாந்துல நூற்று அம்பது திருடர்கள பொதுவெளில தூக்குல போடுறப்ப, வேடிக்கை பாக்க வந்த மக்கள்கிட்டயே திருடின திருடர்கள் பத்தி சொல்லி, அதனால குற்றங்கள் தண்டனைகளால ஒரு போதும் குறைக்க முடியாதுன்னு சொன்னார்.

சா. தேவதாஸ் கடைசியா பேசினப்ப, கால்வினோவோட பள்ளி நாட்கள்ல முசோலினி சர்வாதிகாரியா இருந்ததாகவும் அவர கிண்டல் பண்ணி கால்வினோ ஒரு கவிதை எழுதினதாகவும், இளமை காலத்துல பாசிசத்துக்கு எதிரா தன் நண்பனோட சேர்ந்து இயங்கினதாவும் சொன்னார். மக்கள் மேல தனக்கிருந்த அக்கறையையும் நலனையும் வேறு கலைவடிவங்கள்ல சொல்ல முடியாத நிலைல எழுத்து மூலமா, புனைவுகள் மூலமா, இலக்கியம் மூலமா குடுத்ததால கால்வினோவ தனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார்.

அடுத்ததா, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பத்தி பேசுறப்ப, ஒரு சட்டவாதி எடுக்க வேண்டிய ஒரு விசயத்த ஒரு இலக்கியவாதி ஏன் எடுக்கணும்னா ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனைய ஒரு இலக்கியவாதி கைல எடுக்குறப்ப அவங்களால அத வேற கோணத்துல அணுக முடியும்னு சொன்னார்.

தீவிரவாத செயல்கள எடுத்துகிட்டா கூட, பலம் உள்ளவங்க தப்பிச்சிடுவாங்க, அப்பாவிகளும், நேரடி சம்மந்தம் இல்லாதவங்களும் தான் பாதிக்கப்படுறாங்க. மனித உரிமை அடிப்படைல மரணத்தண்டனை என்பது இருக்க கூடாது. ஏன்னா, அது குற்றவாளிக்கு எந்த வித சந்தர்ப்பமும் தர்றது இல்ல. அவன ஒரு நல்ல மனுசனா மாறுறதுக்கு வாய்ப்பு குடுக்காம அரசு கொலை செய்து விடுது. மனித உரிமையை ஆதரிக்குற எல்லா நாடுகளும் மரண தண்டனைய எதிர்க்குது. இந்த நேரத்துல மரணதண்டனைய ஆதரிக்குறது சரியில்லங்குறது தான் ஒரு இலக்கியவாதியோட பார்வைன்னு சொல்லி உக்காந்தார்.

கூட்டம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தருகொருத்தர் அறிமுகம் பண்ணிகிட்டாங்க. பொன்னீலன் சார் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா முதல் சந்திப்புங்குறதால தலையசைச்சு சிரிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சுது.

இந்த கூட்டத்துல வந்தவங்கள்ல மொத்தமே ரெண்டு பெண்கள் தான். ஒண்ணு நான். இப்ப தான் எட்டிப்பாக்கவே செய்துருக்கேன். இன்னொருத்தங்க உஷா தேவி. அவங்களும் இந்த கூட்டத்துக்கு இப்ப தான் முதல் தடவையா வந்துருக்காங்களாம். மலையாளத்துல மூணு புத்தகம், தமிழ்ல ரெண்டு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. அதுவும் அவரோட “பள்ளத்தில் இருக்கும் வீடு” சிறுகதை தொகுப்புக்கு கலை இலக்கிய பெருமன்றம், புதுகோட்டை சார்பா விருது கிடைச்சிருக்கு.

மொத்தத்துல கூட்டம் கலைஞ்சு, கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப நிறைய பிரமிப்பு. இறை நம்பிக்கை, கூட்டம் பத்தின அலசல்ன்னு பேசி களைச்சு, பொன்னீலன் சார அவர் வீட்ல இறக்கி விட்டப்ப, “உனக்கு ஒரு புது உலகத்த அறிமுகப்படுத்தி இருக்கேன். அத நீ கூர்ந்து கவனிச்சுக்கோ. இதுல உனக்கு தேவையானத மட்டும் கிரகிச்சுட்டு, மத்தத சேமிப்புல வை”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனார்.

அடுத்தடுத்து இன்னும் என்னோட பயணத்த தொடரணும்ன்னு முடிவு எடுத்துட்டு நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.





Tuesday, 20 September 2016

அடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது

நான் யூ.ஜி பண்ணினப்ப தான் அவங்கள பாத்தேன். கருப்பா, ஒல்லியா இருப்பாங்க. அவங்க நடை உடை பாவனைல ஒரு மிடுக்கு இருக்கும். அவங்க சேலை கட்டுற விதமே அத்தனை பிரமிப்பா இருக்கும். ஆங்கிலம் அவங்க நுனி நாக்குல விளையாடும்.

அவங்கள பொருத்தவரைக்கும் பொண்ணுங்க நல்லா படிச்சா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அவங்களுக்கு இன்னும் நிறைய திறமைகள் இருந்தா சொல்லவே வேணாம், அவ்வளவு இஷ்டம். செமினார் க்ளாஸ் எடுக்குறதுல எனக்கு ரொம்ப இஷ்டம்ங்குறதால நான் எப்பவும் அவங்களுக்கு செல்லம். அடிக்கடி என்னை க்ளாஸ் எடுக்க சொல்லி அவங்க கவனிச்சுட்டு இருப்பாங்க. என் கூட இன்னொருத்தியும் உண்டு. நான், அவ, அவங்க மூணு பேரும் தான் மாத்தி மாத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருப்போம்.

இப்படி இருக்குறப்ப ஒரு நாள் காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டு போனாங்க. போன இடத்துல நாங்க மூணு பேரும் தான் ஒரு ரூம்ல தங்க வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ராத்திரி மூணு பேருமே தூங்கல. விடிய விடிய மேடம் அவங்க கதைய சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பிரமிப்போட அத கவனிச்சுகிட்டே இருந்தோம். இது நாள் வரைக்கும் வெறும் ஆசிரியையா இருந்த அவங்கள நாங்க தோழி ஆக்கிகிட்டது அன்னிக்கி தான்.

அவங்க அப்பா ஒரு கவர்மென்ட் வெட்னரி டாக்டர். வேலைக்கு போன இடத்துல இவங்கள விட ரெண்டே வயசு பெரிய பெண் (பதினாறு வயசு)கிட்ட தப்பா நடந்து, அந்த பொண்ணு கர்ப்பம் ஆகி, ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கே அந்த பொண்ணை கட்டி வச்சுட்டாங்க. இவங்க அம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லி ரெண்டு வருஷம் ரூமுக்குள்ள அடச்சு வச்சு, ஒரு நாள் அவங்களும் செத்துப் போய்ட்டாங்க.

மிரட்சியோட கேட்டுகிட்டு இருந்த எங்கள பாத்து அவங்க சொன்னாங்க, “ஊர்ல எல்லோருக்கும் எங்க அம்மாவ விச ஊசி போட்டு கொன்னது எங்க அப்பான்னு தெரியும். என்னையும் சாட்சி சொல்ல கூப்பிட்டாங்க. அம்மா செத்தப்ப எனக்கு பதினாறு வயசு. என் தங்கச்சிக்கு பத்து வயசு. அந்த நிலைமைல என் அப்பாவ நான் காட்டி குடுத்தா அவர் ஜெயிலுக்கு போய்டுவார், நாங்க ரெண்டுபேரும் யாருமே இல்லாத அநாதை ஆகியிருப்போம். ஊர்ல யாருமே உதவிக்கு வந்துருக்க மாட்டாங்க. அதனால எங்க அம்மா பைத்தியம் முத்தி தான் செத்து போனாங்கன்னு சாட்சி சொல்லிட்டேன்”னு அவங்க சொன்னதும் மனசு கனத்து போச்சு.

அப்பாவ ஜெயிலுக்கு போகாம காப்பாத்தி விட்டாலும் அப்புறம் அவர் மேல இருந்த வன்மம் அவங்களுக்கு கூடி போச்சு. அப்பாவோட அத்தனை சொத்தையும் ஊர்காரங்க, சொந்தக்காரங்க சாட்சியா வச்சு தன்னோட பெயர்ல எழுதி வாங்கிகிட்டாங்க. இதனாலயே அவங்க ஒவ்வொரு பரீட்சை நேரத்துலயும் அவங்க அப்பா புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு, சொத்தை எழுதி குடு, அப்போ தான் புக்ஸ் தருவேன்னு மிரட்டுவாராம். நல்லா படிக்குறவங்க, அதனாலயே படிக்காமலே பரீட்சை எழுத பழகிட்டாங்களாம்.

விரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்குறேன்னு பொண்ணு கேட்டு வந்தப்ப அவங்க எம்.எஸ்.சி படிச்சுட்டு இருந்துருக்காங்க. அவங்க படிப்புக்கு எந்த தடையும் வரக்கூடாதுன்னு கட்டளை போட்டுக்கிட்டு தான் கல்யாணமே பண்ணிகிட்டாங்களாம். கல்யாணத்துக்கு அடுத்த நாள் யூனிவர்சிட்டி எக்ஸாம். அதையும் போய் எழுதி இருக்காங்க. தங்கச்சிக்கு பதினெட்டு வயசு வந்ததும் அவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சு குடுத்து கல்யாணமும் முடிச்சு வச்சிட்டு அப்புறம் ஒரு பங்கை அப்போவோட ரெண்டாவது மனைவி மூலமா பிறந்த தம்பிக்கே திருப்பி குடுத்துட்டாங்க.

“அன்னிக்கி நான் இப்படி ஒரு முடிவை எடுக்கலைனா நானும் என் தங்கச்சியும் சின்னாபின்னமாகி இருப்போம்”னு சொல்ற அவங்கள பாத்தா எங்களுக்கு நிஜமாவே மலைப்பா இருக்கும். ஒவ்வொரு மாசம் பீரியட்ஸ் நேரத்துல மரண அவஸ்த்தைப்படுவாங்க. பொண்ணுங்கனா இத விட எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு. இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட மனோ தைரியத்த அதிகமா நான் கத்துகிட்டது அவங்க கிட்ட தான்.

திடீர்னு ஒரு நாள் வேற வேலைக்கு போறேன்னு சொன்னாங்க. அழுதுகிட்டே பிரியாவிடை குடுத்தோம்.

அப்புறம் அவங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டோம். திடீர்னு அவங்க மால்தீவ்ஸ்ல இருக்காங்கன்னு செய்தி வரும். அடுத்து இந்தோனேசியான்னு சொல்லுவாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. என்னால அத ஜீரணிக்கவே முடியல. ஆனா செய்தி உண்மை தான்னு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண் ஒருத்தி சொன்னப்ப நொறுங்கி போனேன்.

எப்படி பட்ட பெண் அவங்க. கிட்டத்தட்ட அவங்க பாடம் எடுத்த எல்லோருக்குமே அவங்க தான் ரோல் மாடல். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி, குடும்பத்து பிரச்சனை அவங்கள எப்படி எல்லாம் புரட்டி போட்டுருக்கு.

எனக்கு அவங்க கணவரையும் தெரியும். கிட்டத்தட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான ரசனை. நான் வீட்ல மீன் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் எதேச்சையா வீட்டுக்கு வந்த அவர் நான் மீன்கள பராமரிக்குற விதத்த பாத்துட்டு நானும் மீன் வளர்க்க போறேன்னு கிளம்பிட்டார். உனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வேலையே இல்ல. மீன் வளர்க்குறேன்னு என் உயிரை வாங்குறார்னு என்கிட்ட சிரிச்சுகிட்டே சலிச்சுப்பாங்க மேடம். எப்பவும் வீட்டுக்காரர விட்டுக்குடுத்தது இல்ல, அவரும் அப்படியே தான்.

நம்ம சமுதாயத்துல தான் ஒரு ஆணும் பெண்ணும் நிம்மதியா இருக்க, காதலோட இருக்க அவங்க ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டா போதாதே, குடும்பம், உற்றார், உறவினர்னு ஆளாளுக்கு சொல்ற மாதிரி தானே குடும்பம் நடத்த வேண்டியது இருக்கு. காதலிக்கவும் வேண்டியிருக்கு.

ஆக, ஒரு காதல் முடிவுக்கு வந்துடுச்சு. அவங்களுக்கும் பைத்தியம் முத்தி போய்டுச்சு. ஒன்னரை வருஷம் முன்னாடி வரைக்கும் அவங்கள பத்தி அரைகுறையா கேள்விபட்டுட்டு இருந்தோம். அப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு எங்களுக்கு தெரியவே இல்ல.
.............

இன்னிக்கி எங்க காலேஜ் பிரின்சிபால்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க அவங்க வீட்டுக்கு நானும் என்னோட சூப்பர் ஜூனியர் பொண்ணும் போயிருந்தோம். போயிட்டு திரும்பி வர்றப்ப தான் அவர பாத்தோம். மேடத்தோட அப்பா. கார விட்டு இறங்கி போய் பேசலாம்னு சொன்னா அவ. எனக்கோ அவர் மேல இருந்த வெறுப்பு துளியும் குறையல. வேண்டா வெறுப்பா காரை விட்டு இறங்கி முகத்தை வேற பக்கமா திருப்பிகிட்டு நின்னேன்.

அவ போய் பேசிட்டு இருந்தப்பவே அவர் என்கிட்ட வந்துட்டார். நீ இன்னாரோட பொண்ணு தானே, உங்க வீட்டு மாட்டுக்கு ஊசி எல்லாம் போட உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்னு சொன்னார். வலிய வந்து பேசுறவர்கிட்ட பேசாம எப்படி போக? ஒப்புக்கு மேடம் நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். உடனே மளமளன்னு ஆரம்பிச்சுட்டார்.

அவ கத உனக்கு தெரியுமாமா, அவளால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு அவர் கண்ணு கலங்கி போச்சு. அத்தன வயசான மனுஷன், என்ன தான் அவர பத்தி தப்பா கேள்விப்பட்டுருந்தாலும் அவர் கண்கலங்கினத பாத்து மனசு பதறி போச்சு. மேடம் இப்ப எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்கன்னு கேட்டேன்.

“She is perfectly alright”னு தான் முதல் வார்த்தையே சொன்னார். மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு நட்டநடு ராத்திரியில ஊர்ல ஒரு கோடில இருந்து மறுகோடிக்கு அலறிகிட்டே ஓடுவாங்களாம். பாக்குற சுவர்ல எல்லாம் அவங்க பெயர் எழுதி முன்னால Dr னு போட்டு வைப்பாங்களாம். எத்தனையோ நாள் பக்கத்து போலிஸ் ஸ்டேசன்ல ராத்திரி நேரம் போய் கலாட்டா பண்ணி, நிறைய தடவ அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம்.

“நான் ஒரு ஆத்தீகன்மா. எனக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் சுத்தமா கிடையாது. மனசாட்சிய மட்டும் நம்புறவன். ஆனா வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு ஏதோ ஒரு வழி பிறந்துடாதான்னு ஏக்கத்துல இருந்தப்ப, பக்கத்து ஊரு பூசாரி என்னை வலுக்கட்டாயமா அவரோட கோவிலுக்கு இழுத்துட்டு போனார். உங்க பொண்ணு புத்திக்கு எதுவுமே இல்ல, செய்வினை கோளாறு தான். நான் சரி பண்றேன்னு சொல்லி கொஞ்சமா திருநீறு, குங்குமம் வச்சு சின்னதா பூஜை பண்ணினார். அன்னிக்கே அவ சென்னை போய்ட்டா. மறுபடி அவ திரும்பி வந்தப்ப அப்படியே மாறி இருந்தா. இன்னிக்கி அவ ஒரு காலேஜ்ல வேலை பாக்குறா. டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ. காலேஜ் வைஸ்-ப்ரின்சிபால் கூட”ன்னு அவர் சொன்னதும் என் முகம் எல்லாம் மலர்ந்துடுச்சு. கூட இருந்தவள பாத்தேன், அவளும் அப்படியே ஒரு பரவச நிலைல தான் இருந்தா.

எனக்கு இந்த செய்வினை, பூசாரி எதுவுமே காதுல விழல. எத்தனையோ வைத்தியங்கள் மத்தியில ஏதோ ஒரு வகைல அவங்க சரி ஆகிட்டாங்க. என்னோட மேடம் நல்லா இருக்காங்க. அது போதும்.

அவங்க பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு இழுத்தேன். இதோ, பொண்ணு என் கிட்ட தான் சின்னதுல இருந்தே வளருறா. அப்படியே அவ அம்மா மாதிரி. புக் எடுத்து படிக்கவே மாட்டா, ஆனா மார்க் தொன்னுத்து எட்டுக்கு கீழ குறையாதுன்னு சொன்னப்ப அவர் முகத்துல அத்தன பெருமை. இதோ, இதான்மா எங்க வீடுன்னு சொல்லி, அந்த பொண்ணையும் கூப்பிட்டு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாத்தா இடுப்பை கட்டிக்கிட்டு அந்த சின்னப் பொண்ணு சிரிச்ச சிரிப்புல ஒரு நிறைவு இருந்துச்சு. அவ தலைய அவர் வருடி விட்டதுல ஒரு ஆன்ம நெருக்கம் இருந்துச்சு. என்னோட அத்தனை தவறுகளுக்கும் பிராயசித்தமா இவள நான் வளர்த்துட்டு இருக்கேன்னு அவரே சொன்னார்.

அடியே செல்லமே, உனக்கு ஒரு லவ், உன் அம்மாவுக்கும் ஒரு லவ்.

மேடத்தோட நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அவ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கா. நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார் அவர்.

வீட்ல வந்து உக்காந்து யோசிச்சுகிட்டே இருக்கேன். அவங்களுக்கு கால் பண்ணலாமா வேணாமான்னு. இல்ல வேணாம். வாழ்க்கைல நானும் ஒரு நாள் ஜெய்ச்சுட்டு பெருமிதமா தான் அவங்க கிட்ட பேசணும். அப்ப தான் நான் அவங்க மாணவிங்குறது சரியா இருக்கும்.

........................