Monday 3 September 2012

அவன் பெயர் மூர்த்தி...!

சுறுசுறுப்பாய் ஓடி விட்ட வாரத்தின் கடைசி எச்சமான சனிக்கிழமை ஏனோ எனக்கு சற்று ஆயாசத்தை கொடுத்தது. கல்லூரி நாட்களில் கழற்றி எறியப்பட்ட புடவைகள், அவை சார்ந்த இத்யாதிகள் என அனைத்தையும் வியர்வை படிய கறை நீக்கி, உடைந்து சற்றே ஊறிக் கொண்டிருக்கும் அப்பாவின் கால்களை சுற்றியுள்ள பேன்டெய்ட் துணிகளை அகற்றி, புத்தம் புதிதாய் ஒன்றை அணிவித்து, கூடவே அருகி வரும் மூலிகைகளால் அற்புதமாய் தயாரான தைலத்தால் அழுக்காகி நிமிர்ந்த போது முதுகு சற்றே வலித்தது.

அடுத்தடுத்து வர இருக்கும் திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் நினைவில் வந்து மிரட்ட, சற்றே இளைப்பாறலாம் என்ற எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு வார நாட்களின் தேவைகளை சமாளிக்க அந்த மார்ஜின்-ப்ரீ-சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன்.

ஒரு வாரமாய் யோசித்து யோசித்து தயாரித்த தேவைப்பட்டியல் தேவைப்பட்ட நேரத்தில் காணாமல் போயிருக்க, “அடக்கடவுளே” நெற்றியில் கைவைத்தவாறே அமர ஏதும் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு கண்களை அலைபாய விட கண்களுக்குள் விழுந்தாள் அவள்.

இப்படி தான் இருந்தாள் அவள் என்று வர்ணிப்பதற்கு தேவையில்லை என்றாலும் சட்டென மவுனராகம் ரேவதியை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள். தன் மேல் ஒரு பார்வை படுவதை உள்ளுணர்வு உணர்த்த, சட்டென திரும்பியவளின் கண்களில் ஒரு மின்னல்.

“ப்ரார்த்தனா”

மெல்லிய புன்னகையோடு அழைத்தவளை நெற்றி சுருக்கி நினைவில் நிறுத்த முயன்று தோற்றேன்.

“நீங்க”

“நான் ப்ரியம்வதனா. மூர்த்தியின் மனைவி”

“மூர்த்தி” இந்த பெயர் என் உடலில் உடனடி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.

மூர்த்தி... சினிமாத்தனம் இல்லாத சேரனின் லட்சிய ஹீரோ. “பாபா ப்ளாக்ஷீப்” சொல்ல ஆரம்பித்த நாட்களோடு என்னோடு கைகோர்த்து நடக்க ஆரம்பித்தவன். இவனோடு நான் கழித்த நாட்கள் என்றென்றும் பசுமரத்தாணியாய் நினைவில் மட்டுமே பதிந்து விட நேர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

சிட்டுக்குருவியாய் சுதந்திர வானில் பறந்த எங்கள் வாழ்வில் செல்போன் டவராய் குறுக்கிட்டது பள்ளி இறுதியாண்டு. கடைசி பரிட்சை எழுதி முடித்த அன்று கைகோர்த்து திரிந்த நாங்கள் கைகுலுக்கி பிரிந்து கொண்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில். மற்றவர்கள் கூட அவ்வபோது நலம் விசாரித்துக்கொள்ள காணாமலே போயிருந்தான் மூர்த்தி.

உடல்நல பாதிப்பு, அம்மாவின் பிரிவு என நாட்காட்டியில் நாட்கள் இரக்கமேயில்லாமல் இறந்து போயிருந்தன. வருடங்கள் பத்து உருண்டோடி விட்ட நிலையில் மீண்டும் மூர்த்தி. இம்முறை பரபரப்பு நிறைந்த திருநெல்வேலி “போத்தீஸ்” முன்பு. பரவசம் மேலிட ஓடிச்சென்று அவன் கைகளை பற்றியதும் வழக்கம் போல் அவன் என் தலையில் குட்ட எத்தனித்ததும்.... மெலிதாய் சிரித்துக்கொண்டேன்.

“அவனாக இருக்குமோ” மனதில் எழுந்த கேள்வியை கேட்க நினைப்பதற்குள் அவளே முந்திக்கொண்டாள்.

“என்ன ஆச்சர்யமா இருக்கா? யாருன்னு யோசிக்காத, மூர்த்தியே தான்” என் முகபாவம் பார்த்து அவளுக்கு புரிந்திருக்க வேண்டும்.

“இதோ நான் அவன் மனைவிங்குறதுக்கு சாட்சி” அவள் நீட்டிய விரலில் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு மிகப் பரிட்சயமான அந்த மோதிரம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைசி விடைகொடுக்கும் முன் அவன் கரம் பற்றி, விட்டுவிடவே மனம் வராமல் விரல்களை வருடி கொண்டிருந்த போது நான் கண்ட அதே மோதிரம். “எம்.பி” என்ற அடையாளக்குறியோடு. இவன் அரசியல் கனவு இன்னமும் மிச்சமிருக்கிறது என்று நான் அன்று எண்ணியது தவறா? “எம்.பி”யின் அர்த்தம் மூர்த்தி, ப்ரியம்வதனாவா?

“நீங்க, சாரி, நீ நல்லா சமைப்பியாமே, உன் கையால் சாப்பிட கொடுத்து வச்சிருக்கணுமாமே” மீண்டும் ப்ரியா...

“ஊட்டி விடுடி, அதென்ன கையில உருட்டி குடுக்குற பழக்கம்?”

வழக்கமாய் அம்மா ஊட்டி விடும் அந்த நிலா சோறு உறவினர் ஒருவரின் வருகையால் என்னிடம் இடமாற நான் உருட்டி கையளித்த உருண்டையை வாங்க மறுத்து அடம்பிடித்தான் மூர்த்தி. மற்றவர்களும் அதை ஆமோதிக்க, மறுத்து விட இயலாமல் அன்று அனைவருக்கும் நானே ஊட்டி விட விமலாவும், சதீசும் கண்கலங்கி விட்டனர். “நீயும் எங்களுக்கு அம்மா ஆகிட்டடி” அவர்கள் கண்ணீர் அன்று எல்லோர் கண்களையும் குளமாக்கியிருந்தது. பின்னின்று கவனித்துக்கொண்டிருந்த அம்மாவும் அனைவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டாள்.

 “ஹே வா, அப்படி உக்காந்து பேசுவோம். என்னை அடிக்கடி நீ ப்ளாஸ்பேக் போக வைக்குற. சொல்லு, இன்னும் என்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கான்?”

அந்த சூப்பர் மார்கெட் வெளியே காலியாய் இருந்த திண்டின் மேல் அவளுக்கு இடம் விட்டு ஏறி அமர்ந்து கொண்டேன்.

“நீ ரொம்ப அழகுன்னு சொல்லுவான்” சட்டென கண்கள் பனித்தது.

“ஏன் அவன் மட்டும் தான் சொல்லுவானா? நீ சொல்ல மாட்டியா?”

பட்டென என் கரம் பற்றி அணைத்துக்கொண்டாள். என் நெற்றியில் முத்தமிட்ட அவளுள் மூர்த்தி தெரிந்தான். இவளால் எப்படி இதுவரை அறிமுகமே இல்லாத பெண்ணிடம் இவ்வளவு நெருங்க முடிகிறது? கொஞ்சமும் சந்தேகமில்லை, இவள் மூர்த்தியின் ப்ரியசகியே தான்.

பற்றியிருந்த அவள் கையில் புன்னகைத்த மோதிரத்தை பார்த்து “மூர்த்தி, ப்ரியம்வதனா” என்றேன். “இல்லை, மெம்பர் ஆப் பார்லிமென்ட்” என்றாள் அவள்.

“நீ பெரிய வக்கீலா வரணும் சந்தியா, அநீதி இழைக்கப்படும் ஏழைகளுக்கு நீ தான் போராடி நியாயம் வாங்கி குடுக்கணும்”

“நானும் உன்கூட அரசியல்ல குதிச்சுடுறேண்டா மூர்த்தி”

சந்தியாவை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து முறைத்தான்.

“நீ ஒரு டாக்டர் ஆகணும் அம்மு. வெறும் எம்.பி.பி.எஸ் என்று இல்லாமல் ஒரு சிறந்த நியூரோ சர்ஜனா வரணும். உன்னால முடிஞ்ச அளவு மக்களுக்கு சேவை செய்யணும். நன்றாக படி, அதுவும் லட்சியத்துக்காக படி.”

மற்ற மாணவர்களை போலல்லாமல் இவன் மிகவும் வித்தியாசமானவனாய் இருந்தான். சுதேசி கொள்கை அவன் இரத்தத்தில் ஊறி இருந்தது. ஸ்கூல் பேக் கூட அவன் அம்மா தைத்து கொடுக்கும் துணி பை தான். இரத்ததானம், கண்தானம் முகாம்களில் தவறாமல் இவனை காணலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு எங்களையும் அழைத்துச் செல்வான்.

ஓட்டு போடும் வயது வந்ததும் முழுதாய் அரசியலில் இறங்கி விட வேண்டுமென்பான். ஒரேயடியாய் ஆசைப்பட கூடாது, முதலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி ஆக வேண்டுமென்பான். கக்கனும், காமராஜரும் அவனது லட்சிய ஹீரோக்கள்.

நண்பர்கள் யாரையும் அவன் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் தனித்திறமை கண்டு உற்சாகப்படுத்துவான். அவனின் உற்சாகமான வார்த்தைகள் பின்னாளில் பலன் தருமா என்பதை கூட பொருட்படுத்தாமல் அவனின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

“இங்க என்ன இல்லன்னு நாம அடுத்த நாட்டுக்கு ஓடுறோம்?” அவனின் கேள்விகளில் அனல் இருக்கும்.

“ஏண்டா, உனக்கு வேற வேலையே இல்லையா? நீ சொல்ற மாதிரி இவங்கெல்லாம் படிச்சு, நம்ம நாட்டுலயே இருப்பாங்கன்னு நீயுமாடா நம்புற?”

“நான் மற்றவர்களை நம்புறேனோ இல்லையோ என்னை நம்புறேன், உன்னை நம்புறேன்”

“கண்டிப்பா நான் பெரிய டாக்டரா வருவேண்டா” நெகிழ்ச்சியோடு அவன் தலையை கலைத்து விட்டது நேற்று போல் இருக்கிறது.

“ஆறு மாசம் முன்னாடி மூர்த்தியை சந்தித்தப்போ நீ சரியா பேச முடியலயாமே?”

“ஆமாடா, அன்று போத்தீசில் அத்தை கூட துணி எடுக்க போனேன். அவனை பார்த்து சரியா பேச முடியல, போன் நம்பர் கூட வாங்கிக்க முடியல, அதான் உன்னை பற்றி தெரிஞ்சுக்க முடியாமலே போய் விட்டது”

“ஆனா உன்னை பற்றி அடிக்கடி பேசுவான் அம்மு. ப்ளஸ் டூ முடிந்ததும் நீ அப்பா அம்மாவோடு ஊர் விட்டு போனதையும், அவனும் பீகாரில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்கு போனதையும் அடிக்கடி நினைவு படுத்துவான். காலம் எப்படியோ எங்களை பிரித்து விட்டாலும் கண்டிப்பா அவள் ஒரு டாக்டர் ஆகி இருப்பாள் என்று மட்டும் உறுதியோடு சொல்லிக் கொண்டிருப்பான்”.

சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவர் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. ப்ளஸ் டுவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் கட் ஆப் மார்க்கில் லட்சங்கள் என் லட்சியங்களை தகர்த்து விட துடித்தது. கடன் வாங்கி அப்பா கரன்சி நோட்டுக்களை வாரியிறைக்க ஒருவழியாய் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறியது. அப்பாவின் குடும்ப பாரம் குறைக்க வேண்டி போராட தயாராகையில் பகுதி நேர விரிவுரையாளராக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அரவணைத்துக் கொண்டது.

அன்று, மாணவர்கள் பத்து பேரை அழைத்துக் கொண்டு ரெத்த தானம் கொடுக்க மெடிக்கல் ஹாஸ்பிடல் போயிருந்தேன். தூரத்தில் நரைத்த தலையோடு சோகமாய் சுவரை வெறித்திருந்த பெரியவரை எங்கோ பார்த்த நியாபகம். அருகில் சென்று பார்த்தால் விஸ்வநாதன் அங்கிள். மூர்த்தியின் அப்பா.

“அங்கிள்”

என்னைப்பார்த்து கண் சுருக்கியவரை யோசிக்க விடாமல் “நான் ப்ரார்த்தனா, உங்கள் அம்மு”

அவர் உதடு ஒரு மெல்லிய புன்னகையை விரக்தியாய் சிந்தியது.

“என்ன அங்கிள் இந்த பக்கம், யாருக்கு உடம்புக்கு முடியல?”

“மூர்த்தி போய்ட்டான்மா” அவர் கைகாட்டிய திசையில் ஐ.சி.யூ.

“என்ன சொல்றீங்க அங்கிள், அவனுக்கு என்னாச்சு?” பதற்றம் என்னை களையெடுக்க ஆரம்பித்தது.

“ஆக்சிடென்ட். தலைல பலமா அடி, போயிட்டான்.”

“மூர்த்தீ...................” கேவலுடன் ஓடி சென்று அவன் கரம் பற்றினேன் பதறி தடுத்த நர்ஸ்சையும் மீறி.

மூர்த்தி ஜில்லிட்டு போயிருந்தான். வலிகள் நிறைந்த கண்களை அமைதியாய் மூடி, ஒரு வித மவுன புன்னகையை படர விட்டிருந்தான்.

“சரிமா, நீ சொன்னவாறே பண்ணிடுறேன்”. யாரிடமோ மொபைலில் பேசி கொண்டிருந்தவர் என்னிடம் குனிந்தார்.

“ப்ரார்த்தனா, அவனுக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு. ஏற்கனவே கண்களை எடுத்தாச்சு. அவன் உடலையும் தானமா கொடுக்க சொல்லி விட்டாள் என் மகள், அவன் மனைவி. மெடிக்கல் காலேஜ் டீனோடு பேசணும்”

“ஹெல்லோ” விஸ்வநாதன் அங்கிள் மொபைல் போனை உயிர்பிக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவை இழக்க ஆரம்பித்திருந்தேன்.

“அன்று உன்னை நான் பார்க்கவில்லையே ப்ரியா?”

நான் கேட்ட கேள்வி அவளுக்கு சட்டென புரிந்திருக்குமென்றாலும் கேள்விக்கான விடை வர கண்டிப்பாக தாமதமாகும்.

“அப்பொழுது நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக நடந்த கிராமசபா கூட்டத்துக்காக ராஞ்சி போய் விட்டேன். உடனே திரும்ப முடியவில்லை. அதான் அங்கிருந்தே போன் பண்ணி சொல்லி விட்டேன்.

அப்போ நான் அவன் கூட இல்லனா என்ன அம்மு, என் மனசு முழுக்க அவன் நிறைஞ்சு இருக்கானே”

என் நண்பன், என்னோடு சகலமுமாய் இருந்தவன், நான் மிகப்பெரிய நியூரோ சர்ஜனாக வேண்டுமென்று கனவு கண்டவன். அவனை பற்றிய கனவை நினைவாக இதோ ப்ரியம்வதனா இருக்கிறாள், என்னை பற்றிய கனவை நான் தான் நினைவாக்க வேண்டும். என் இயலாமை என் இயக்கத்தை நிறுத்தி விட துடித்தது. இரண்டு மாதங்களாக வர மறுத்த அழுகை இன்று நெஞ்சு வெடித்து விஸ்வரூபமெடுத்தது. “ஒஒஒ....” வென்ற பெருங்குரலோடு மக்கள் கூட்டம் மறந்து கதறியழ ஆரம்பித்தேன்....

5 comments:

  1. நல்லா இருக்கு கதை அக்கா....

    பட் ஃபினிஷிங் இதே மாதிரி நிரைய கதைகல்ல படிச்சுஇருக்கேன்!

    ம்ம்ம்ம் ஆணாளும் பரவால நல்லாதாண் இருக்கு!
    தொடர்ந்து எழுதுங்க்அ!


    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ்... பினிஷிங் நீ கதைகள்ல படிச்சிருக்கலாம், ஆனா இது ஐம்பது சதம் நிஜம், மூர்த்தியின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டது... அதன் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டான்.. அவன் என் நண்பன்...

      Delete
  2. ரொம்ப மனம் வலித்தது.!!

    ReplyDelete