Thursday 26 September 2013

அப்பா ப்ளீஸ்ப்பா.....

அப்பா, இன்னிக்கி தந்தையர் தினமாம்...
ப்ரெண்ட்ஸ் எல்லாரும் பேசிக்குறாங்க...
இவ்வளவு நேரம் உனக்காக சாப்டாம காத்துருந்தேன்.
பசில மயக்கம் வருது, அதான்
உனக்கு ஒரு லெட்டர் எழுதிரலாம்னு
முடிவு பண்ணிட்டேன்...


நீயெல்லாம் ஏன்ப்பா குடிக்குற?
குடிச்சுட்டு வந்து அம்மாவ போட்டு அடிக்குற...
அம்மா பாவம்லப்பா, நமக்காக தானே
அடுத்த வீட்ல போய் பத்து பாத்திரம் தேச்சுட்டு வருது.

அடுத்தவங்க கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு
அவங்களுக்கு மாடா ஒழச்சுட்டு
அவங்க குடுக்குற காச பாத்து பாத்து
வீட்டுக்கு கொண்டு வந்தா
நீ அத புடிங்கிட்டு போய் குடிச்சுட்டு வர...

நான் ஏன்ப்பா உனக்கு பொண்ணா பொறந்தேன்?
பொட்ட புள்ளைய பெத்து போட்டுருக்கா
சிறுக்கினு அப்பவும் அம்மாவ தான் திட்டுற...

என்கிட்ட நீ பாசமா தான் இருக்க,
ஆனா குடிச்சுட்டு வந்தா
புள்ளனு கூட பாக்காம
பொட்டச்சிக்கி எதுக்கு படிப்புன்னு
எட்டில ஒதைக்குற...

போன பரிட்சையிலயாவது அந்த கோபிய முந்திட்டு
நான் முதலாவதா வரணும்னு நினைச்சேன்.
என் புத்தகத்த எல்லாம் கிழிச்சு போட்டுருந்தா கூட
ஒட்டி வச்சி படிச்சிருப்பேன்,
நீ தீயில போட்டு கருக்கிட்ட.

பள்ளி கூடத்துல நான் தான் நல்லா பாடுறேனாம்
பெரிய பாட்டுக்காரியா வருவன்னு சார்மார்
எல்லாம் சொல்றாங்க...
இப்போ நடந்த பாட்டு போட்டியில
நான் தான் பஸ்ட்...
கலக்டர் முன்னால பாட சொன்னாங்க...
ஆனா பாக்க நீ வரலயேப்பா...

நம்ம சங்கீதா அப்பா
அவள சந்தைக்கு கூட்டிட்டு போய்
கேட்டதெல்லாம் வாங்கி குடுப்பாராம்...
கத கதயா சொல்றா...

போன மாசம் திருவிழாவுக்கு
பெரியப்பா கூட எனக்கு பலூன் வாங்கி தந்தாரு,
நடேசன் மாமா தேன்குழல் வாங்கி தந்தாரு...
நீ என்ன எங்கயுமே கூட்டிட்டு போனது இல்ல,
ஆசையா என்ன தூக்கி தட்டாமால சுத்தினதில்ல...

ஆனாலும் அப்பா, நீ அப்பப்போ வாங்கிட்டு வருவியே
அந்த முட்ட போண்டா, வாழக்கா பஜ்ஜி, பரோட்டா...
அதெல்லாம் நீ பக்கத்துல உக்காந்து
தின்னுடி ராசாத்தி னு சொல்லுறப்போ
எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

கண்ணுல இருந்து தண்ணி வருதுப்பா,
எனக்கு எங்கப்பா தான் ஒலகமேனு
கூட்டாளிங்க கிட்ட எல்லாம் ஓடி போய்
சொல்லணும் போல இருக்கும்.

நீ ஏன்ப்பா அப்படியே இருந்துர கூடாது. உன்ன நான்
படிச்சு பெரிய ஆபீசர் ஆகி
ராஜா மாதிரி வச்சுப்பேன்ப்பா...

உன் மடியில படுத்து தூங்கணும்,
உன் கழுத்த கட்டிக்கிட்டு
அந்த ராமாயியக்கா பசங்க
என்ன கிண்டல் பண்ணின கதை சொல்லணும்.
நீ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினா
நான் விழுந்து விழுந்து சிரிப்பேனே...

அப்பா, குடிக்க மட்டும் செய்யாதப்பா.
நீ குடிச்சுட்டு வந்துபுட்டா
உங்கண்ணுக்கு புள்ளையா தெரிய மாட்டேங்குறேன்...
கழுத கழுதனு என்னைய கழுதைய விட கேவலமா நினைக்குற...

உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம்
சுவர பாத்தும் வானத்த பாத்தும் தான்
சொல்ல வேண்டியதா இருக்கு...
அப்பா, ப்ளீஸ்ப்பா......



.............................................................................................................................................................
மூணு மாசம் முன்னாடி நான் எழுதினது. இப்போ தானே blog மறுபடியும் வந்துருக்கேன், அதான் இப்போ போட்டேன் 

10 comments:

  1. மிக மிக அருமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா உங்க கருத்துக்கு

      Delete
  2. போதைக்கு அடிமையாகிவிட்ட வாழ்க்கைத்துறந்து குடும்பத்தை மறந்த ஆயிரக்கனக்கான தந்தைகளின் பார்க்கு வைக்கப்படவேணடிய கவிதை....

    குழந்தையின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது...

    திருந்துவார்களா...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... எழுத்து.காம்-மிலும், என்னுடைய பேஸ் புக் உணர்வுகள் பக்கத்திலும் மிக பெரிய வரவேற்பை பெற்றது இது

      Delete
  3. என்ன சொலுரதுனு தெரியல அக்கா.
    ஆணா கவிதை அருமை..

    தொடற்ந்து இது போல எழுதவும்...
    (அப்போத்தானே எணக்கு புரியும்) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. உனக்காக தான் இப்படி பட்டத போடுறேன் மகேஷ்... அண்ணா எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காதே ஹஹா

      Delete
  4. மனதைத் தொட்ட கவிதை..மறக்க முடியாக்கவிதை..தந்தையர் தினம் அப்புறம் கொண்டாடுங்கள் முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று நெற்றிப்பொட்டில் அடித்த கவிதை...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்... இப்படியும் குழந்தைகளின் ஏக்கம் இருக்கும்னு அவங்க மனநிலைல இருந்து யோசிச்சேன்... ரொம்பவே வலிச்சுது

      Delete
  5. அருமையான உணர்வு. அதுவும் சிறு குழந்தையின் ஏக்கம் நியாயமானது

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் மேடம், ஆமா... தாய் பாசத்துக்கும், தந்தை பாசத்துக்கும் ஏங்குற குழந்தைங்க எவ்வளவோ பேர் இருக்காங்க

      Delete