Friday 22 August 2014

தம்பியும் நானும்....


சின்ன வயசுல நான் ரொம்ப வாலு. ஒரு இடத்துல இருக்கவே மாட்டேன். எப்பப் பாத்தாலும் மாட்டுதொளுவத்துல மாடுகளோட மல்லுக்கட்டிட்டு இருப்பேன், இல்லனா, கரையான் புத்துல பாம்பு இருக்கான்னு கை விட்டு தேடிட்டு இருப்பேன். இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க ஊரு காடு மாதிரி தான் இருக்கும். என்ன தான் வீடு பெருசா இருந்தாலும், வீட்டை சுத்தி கொல்லாங்காடு, வாழைத்தோப்பு, வயலுன்னு ஒரு கலவையா இருக்கும். வீட்டுக்கு பத்தடி தூரத்துலயே ஒரு மொட்டை கிணறு வேற உண்டு. அந்த கிணத்துல தண்ணி எல்லாம் கிடையாது. அதுக்கு உள்ள இருந்து வேப்பமரம், புளியமரம் அப்புறம் காடு மாதிரி புல்லு, செடிகள்ன்னு அடைஞ்சு கிடக்கும். அங்கயே தான் நிறைய கரையான் புற்றும் உண்டு.

சில நேரங்கள்ல மேய வர்ற ஆடு மாடுகள் கால் தவறி உள்ள விழுறதும் உண்டு. நான் வேற எப்பப்பாரு அங்கயே போய் இருப்பேனா, அப்பப்ப அங்க கடந்து போற பாம்புகள் எல்லாம் ரொம்ப பரிட்சயம் ஆகி போயிருந்தது. பாம்பை கண்டா அங்க இருந்து ஓட மாட்டேன். அப்படியே அசையாம உக்காந்துருப்பேன். பாம்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் ஒரு பயம் கப்புன்னு வரும் பாருங்க... ஒரே ஓட்டம் தான்... மூச்சிரைக்க நேரா ஓடி வந்து ரூம்ல மலங்க மலங்க முழிப்பேன். யாரும் பாக்கலனா ஓகே, ஆனா அம்மா பாத்துட்டா, ஹிஹின்னு ஒரு திருட்டு சிரிப்பு சிரிப்பேன் பாருங்க, அம்மா புருவம் உயர்த்தி, கொன்னுப்புடுவேன்னு ஆள்காட்டி விரலாலயே சைகை செய்வாங்க. சத்தம் போட்டு பாட்டிக்கு கேட்டுடுச்சுனா அப்புறம் பத்ரகாளி மலையேற நேரம் ஆகுமே...

தம்பி இதுக்கெல்லாம் ரொம்ப பயப்படுவான். அதனால அந்த பக்கமா விளையாட கூப்ட்டா, ம்ஹும்ன்னு சிணிங்கிக்கிட்டே அம்மா முந்தானைய புடிச்சுப்பான். ஆனா அந்த ஊமை குசும்பனுக்கு திங்க ஏதாவது முதல்ல குடுக்கலன்னு வைங்க, உடனே, நான் போய் மொட்டை கிணத்துல விழப்போறேன்னு மிரட்டுவான். அம்மாவுக்கு தெரியாதாக்கும் அவனை... சிரிச்சுகிட்டே அவனையே பாத்துட்டு இருப்பாங்க. நான் சும்மா இருப்பேனா, அப்படியாவது அவனை அந்த பக்கம் கூட்டிட்டு போய்டணும்ன்னு அவனுக்கு நிறைய அட்வைஸ் குடுப்பேன்.

டேய் தம்பி, அந்த பக்கம் எல்லாம் ஒண்ணும் பயம் இல்ல, நடந்தா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும், ஒண்ணு உன்னை பாம்பு கடிக்கும். அப்படி பாம்பு கடிச்சா, ஓடி வந்துடாத, விஷம் தலைக்கு ஏறிடும். அதனால அங்க நின்னே ஒரு சத்தம் குடு, அக்கா போய் கத்தியும் துணியும் எடுத்துட்டு வரேன். துணி வச்சு காலை இருக்க கட்டிட்டு, இந்த கத்தியால வெட்டிட்டா, அப்புறம் பயமே இல்லன்னு அட்டகாசமா க்ளாஸ் எடுப்பேன். பையன் அப்பவே மிரண்டுடுவான்.

ஆனாலும் நாம விட மாட்டோம்ல, ரெண்டாவது, நீ தவறி அந்த கிணத்துக்குள்ள விழுந்துடுவ. அப்பா வீட்ல இருந்தா உடனே கயிறு போட்டு உன்னை தூக்கிடுவாங்க, அதுவே வெளியூர் போய்ட்டா நீ கவலைப்படாத, உனக்கு பிரட், இட்லி, சோறு எல்லாம் மேல இருந்தே தூக்கிப் போடுறேன். அப்பா வர்ற வரை நீ சாப்ட்டுட்டு இருக்கலாம்ன்னு சொல்லுவேன்...

ஏங்க, நான் சரியா தானே சொல்லியிருக்கேன். ஆனா இந்த பய, அம்மாவ இன்னும் இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு, பெருவிரல எடுத்து வாய்ல வச்சு சப்ப ஆரம்பிச்சுடுவான். போடின்னு தலைய வேற வெட்டி வெட்டி இழுத்துப்பான்...

தாயம் வச்சு விளையாடிட்டு இருப்போம். இவன் விளையாட வந்தா, இவனுக்கு பிடிச்ச தாயக்காய் தான் முதல்ல எடுப்பான். வேற யாரும் அத எடுத்துடக் கூடாது. அட, அது பரவால, அவனுக்கு மட்டும் தான் தாயம் விழணும்னு அடம்புடிப்பான் பாருங்களேன். சிரிப்பு சிரிப்பா வரும். இந்த பாம்பட்டை விளையாடுரப்ப பாம்பு அவனை கொத்திடக் கூடாது... ஆட்டத்த கலைச்சு விட்ருவான்.

ஆனா ஒண்ணு, எனக்கும் தம்பிக்கும் ரொம்ப ஒற்றுமையான ஒரு விஷயம் ஒண்ணு உண்டு. அதுவும் சாப்பிடுற விசயத்துல. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்கள் என்னலாம்ன்னு பாத்தீங்கனா, வறுத்த மற்றும் ஊற வச்ச புளியங்கொட்டை, புண்ணாக்கு வகைகள், அதுவும் புண்ணாக்குல கடலை புண்ணாக்கும் எள்ளு புண்ணாக்கும் தான் டாப். ருசி பின்னிடும். ஆனா இதெல்லாம் எடுத்து தின்னா பாட்டி நைநைன்னு தொனத்தொனத்தே காது ஜவ்வு கிழிஞ்சிடும். நாங்க போய்ட்டுவோம்னு பாட்டி மாட்டு தீவன ரூம்ல லைட் அணைச்சு வச்சிருப்பாங்க... இருட்டுக்கு பயந்து தம்பி அந்த பக்கமா வரவே மாட்டான்.

நமக்கு தான் அட்வஞ்சர்னா அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே... அந்த இருட்டுலயும் மோப்பம் பிடிச்சு, கடலை புண்ணாக்கையும் எள்ளு புண்ணாக்கையும் மடி நிறைய கட்டிப்பேன். அப்புறம் என்ன, நானும் அவனும் பெட் ரூமுக்கு போய் கட்டுலுக்கு அடியில உக்காந்து வெளுத்து கட்டிருவோம்.

இதுல சில நேரம் பாட்டிகிட்ட நான் மாட்டிக்குறதும் உண்டு. அப்போ மடியில இருக்குற புண்ணாக்க தட்டி விட்ருவாங்க. அம்மா தான், ம்க்கும்... புள்ள இருட்டுல பயம் இல்லாம போறாளேன்னு சந்தொசப்படுவீங்களான்னு பாட்டிக்கிட்ட ஒரு வெட்டு வெட்டிகிட்டு, கை நிறைய புண்ணாக்கு ஒளிச்சு கொண்டு வந்து தருவாங்க... உன்னை போல ஒரு தாய் எங்களுக்கு மட்டும் தான் கிடச்சிருக்கா அம்மா....

அப்புறமா, அம்மாவுக்கே கோபம் வர வைக்குற மாதிரி நாங்க பண்ற காரியம்னா, அது கருப்பட்டி காப்பில புண்ணாக்கும் தவுடும் கலந்து விட்டுறது தான். அம்மா எப்பவும் ஒரு பெரிய பானை நிறைய கருப்பட்டி காப்பி போட்டு வச்சிருப்பாங்க. விறகடுப்புல அது எப்பவும் கதகதப்பா இருக்கும். வீட்டுக்கு வர்றவங்க, தோட்டத்துல வேலை செய்றவங்கன்னு எல்லாரும் அப்பப்ப வந்து குடிச்சுட்டு போவாங்க. சில நேரம் காப்பி பானைக்குள்ள எட்டிப்பாத்தா காப்பி குறைவா இருக்கும். உடனே நானும் தம்பியும் சேர்ந்து தவுடு எடுத்துட்டு வந்து அது உள்ள போட்டு தண்ணியும் கலந்து விட்ருவோம். யாராவது காப்பி குடிக்கலாம்னு வந்து கப்புல எடுத்து வாய்ல வச்சா..... ஹஹா... அப்புறம் என்ன, அம்மா கட்ட கம்ப எடுத்துட்டு தம்பிய தான் தொரத்துவாங்க. நாம தான் ஏதாவது மரத்து மேல ஏறி எஸ்கேப் ஆகிடுவோம்ல...

இப்படி ஏகப்பட்ட சேட்டைகள்... இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் சொல்றேன்...

ஆனா ஒண்ணு, இப்போதைய எனக்குள்ள நிறையவே மாற்றம். எடுத்துட்டு இருக்குற மெடிசின்ஸ்னால சில நேரம் ரொம்ப டென்சன் ஆகிடுவேன். காட்டுக்கத்தல் போட ஆரம்பிச்சேன்னா நானே தான் சட்டுன்னு முழிச்சுட்டு நிறுத்தணும். அப்படி தான் ஒருநாளு இங்க ஒரு பாட்டி கூட வாக்குவாதம் ஆகி, அவங்க சொன்ன வார்த்தைகள் கேட்டு பி.பி எகிறி, ஒரு கட்டைய எடுத்து வீசிட்டேன். அது நேரா போய் என்னோட மீன் தொட்டியில பட்டு, கண்ணாடி உடைஞ்சு, தண்ணி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பாவும் தம்பியும் முதல்ல பண்ணினது, மீன் தொட்டில இருந்த மீன் எல்லாத்தையும் தனியா பிடிச்சு போட்டது தான். அவங்களுக்கு தெரியும், மீனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நாலு நாளைக்கு அழுதுட்டே இருப்பேன்னு. மறுநாள் காலைல பதினோரு மணிக்கு நான் ரூம் கதவை தொரக்குரப்ப அதே மீன் தொட்டி, புது கண்ணாடியோட ரெடி ஆகிட்டு இருக்கு. தம்பி தான் உள்ள பிளாஸ்டிக் செடி எல்லாம் அடுக்கிட்டு இருக்கான்.

இவன் பொறுமைசாலியா? பொறுப்பாளியா?

8 comments:

  1. நீ தவறி அந்த கிணத்துக்குள்ள விழுந்துடுவ. அப்பா வீட்ல இருந்தா உடனே கயிறு போட்டு உன்னை தூக்கிடுவாங்க, அதுவே வெளியூர்
    போய்ட்டா நீ கவலைப்படாத, உனக்கு பிரட், இட்லி, சோறு எல்லாம் மேல இருந்தே தூக்கிப் போடுறேன். அப்பா வர்ற வரை நீ சாப்ட்டுட்டு இருக்கலாம்ன்னு சொல்லுவேன்...///

    hahaha

    aanalum ninga rompa thairiya salipola akka:-)

    ReplyDelete
    Replies
    1. ஆமா மகேஷ்..... ரொம்ப க்ரிப்பா இருப்பேன். தனியா ரூம்ல வச்சு தான் பேந்த பேந்த முளிக்குறது

      Delete
  2. வலைச்சர அறிமுகம்,,வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. ஹஹஹா.. சேட்டை சேட்டை..!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அண்ணா, சேட்டை பண்ணாம இருந்தா இப்படி எல்லாம் எழுத முடியுமா

      Delete
  4. நன்றி சகோதரி எனக்கு எனது கடந்த காலத்தை ஞாபகப்படுத்தியதர்கு

    ReplyDelete
    Replies
    1. :) எதோ என்னால முடிஞ்சது... சந்தோசமா இருந்துச்சுல அது போதும்

      Delete