Wednesday 15 April 2015

லெட்சுமி பிரசவம்



ஏ வசு எங்க இருக்க? இங்க ஓடி வா....

சுந்தரி கத்துனத கேட்டு பதறியடிச்சு வசந்தி ஓடி வந்தா.

“என்னாச்சுமா, எதுவும் பிரச்சனையா?”

“அந்த டாக்டருக்கு ஒரு போன போட்டுப் பாரு. ஆள இன்னும் காணல”

கைல கொதிக்க கொதிக்க வென்னிப் பானைய துணி வச்சி பிடிச்சு தூக்கிகிட்டே அவசர அவசரமா பின் வாசல் வழியா இறங்கி போனா சுந்தரி.

வசந்திக்கு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. நேரே போன் வச்சிருக்குற இடத்துல போய் டாக்டர் நம்பர் எடுத்துட்டு கால் பண்ணினா.

“ஹல்லோ, டாக்டர் இருக்காரா? நான் குமாரசாமி வீட்ல இருந்து பேசுறேன்”

“அவர் அப்பவே கிளம்பி போய்ட்டாரே”

பின் கட்டுல என்ன நடக்குதுன்னு போய் பாக்க வசந்திக்கு பயம். ஏற்கனவே சுந்தரியும் குமாரசாமியும் பேசிகிட்டத கேட்டுட்டு தான் இருந்தா.

.......................................................................

“இன்னிக்கி நெறஞ்ச அமாவாச. எப்படியும் லெட்சுமி பிரசவம் நடந்துரும்”

அவங்க பேசிகிட்ட மாதிரி லெட்சுமிக்கு அப்படி ஒண்ணும் பெரிய மாத்தம் வந்துடல. பத்து மணி வரைக்கும் குடுத்தத எல்லாம் நல்லா தின்னுகிட்டு நல்லா மினுக் மினுக்ன்னு தான் இருந்தா. பதினோரு மணி வாக்குல தான் லேசா வலி வந்து முனங்க ஆரம்பிக்க, சுந்தரி வசந்திய எழுப்பி “நானும் அப்பாவும் பின்கட்டுக்கு போறோம். லெட்சுமி பிரசவம் நடக்கப் போவுது. நீ கதவ பூட்டிகிட்டு ஒரங்கு”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.

வசந்திக்கு இந்த மாதிரி பேரு காலங்கள பாக்குற திராணி இல்ல. இதுவே பகல் நேரமா இருந்தா அந்த இடத்த விட்டே எங்கயாவது ஓடிப் போயிருப்பா. அப்படியே ஆத்தங்கரைல கொஞ்ச நேரம் கல்லெடுத்து பொறுக்கிப் போட்டு, கூடவே மாந்தோப்புக்குள்ள போய் கல்லெறிஞ்சி மாங்கா பறிச்சு தின்னுட்டு மெதுவா தான் வீட்டுப் பக்கம் எட்டிப்பாத்துருப்பா.

ஆனா இன்னிக்கி பாத்து இருட்டிப் போச்சு. இனி எங்கயும் ஓட முடியாது. பேசாம அவ கட்டில்ல போய் குப்புற படுத்துட்டு தலையணைக்குள்ள மூஞ்ச பொதச்சுகிட்டா.

..........................................................

இங்க லெட்சுமியால வலிய பொறுக்க முடியல. கால கால தூக்கி தூக்கி அடிக்குறா. ரெண்டு மூணு தடவ நீரும் சொட்டு சொட்டா போவுது, வயிறு இளக்கி அது வேற கஷ்டமா இருக்கு.

சுந்தரி தான் தலைமாட்டுல ஆறுதலா தடவிக் குடுத்துட்டு இருந்தா. குமாரசாமி முதுகுல வாஞ்சையா தடவுனத பாத்து லட்சுமிக்கு கொஞ்சம் ஆசுவாசமாச்சு. கண்ணெல்லாம் நிறைஞ்சு போய் “ம்ம்ம்மா....”ன்னு முனங்க ஆரம்பிச்சுட்டா. “எப்படியும் இன்னும் அரமணி நேரத்துல பிரசவம் முடிஞ்சிரும். வலிய பொறுத்துக்கோ, புள்ளைய பாத்தா உன் கஷ்டம் எல்லாம் பறந்துரும்”னு ஆறுதலா குமாரசாமி லெட்சுமிக்கி சொல்லிட்டு இருக்கார்.

நேரம் ஆக ஆக இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு லெட்சுமி வாய்விட்டு கதற ஆரம்பிச்சா “அம்மாஆஆஆஆஆஆ”

லெட்சுமி கதறல கேட்டு லேசா கண்ணசந்து போன வசந்தி விருட்டுன்னு எழுந்து உக்காந்தா. “சீக்கிரமா பிரசவம் நடந்துரனும் சாமி, எங்க லெட்சுமிய கஷ்டப்படுத்தாத”

சுந்தரிக்கும் குமாரசாமிக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. “கொஞ்சம் படுத்து முக்கிப் பாரு. இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?”. சுந்தரி பேச்சுக்கு கட்டுப்பட்டத போல லட்சுமி படுத்து முக்க ஆரம்பிச்சா.

இல்ல, முடியல, மறுபடியும் எந்திரிச்சிட்டா. எப்படியாவது புது உயிர பத்திரமா இந்த ஒலகத்துக்கு கொண்டு வரணுமே, லெட்சுமி படுக்குறா, முக்குறா, கதறுறா, எழும்புறா... ஒருக்கட்டத்துல எழும்பவே முடியாம மாறி மாறி முக்கும் போது தான் மெல்ல கன்னிப்பை எட்டிப் பாக்க ஆரம்பிச்சுது.

“அவ்வளவு தாண்டா, இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இந்தா வந்துட்டு, முக்கு முக்கு...” குமாரசாமி லெட்சுமிகிட்ட ஆறுதல் சொல்லிகிட்டே, “அந்த சாமி வீட்டு திருநீர எடுத்துட்டு வா”ன்னு சுந்தரிக்கு கட்டள போடுறாரு.

சுந்தரி அவ தலைய ஒரு தடவ மார்ல புதைச்சு அணைச்சுக்கிட்டு “இந்தா வந்துடுறேன், சீக்கிரம் முடிஞ்சிரும்”னு ஓடிப் போய் திருநீர எடுத்துட்டு வந்து நெத்தியில பூசி விட்டா.

அப்படியே முதுகு, பின் பக்கம்ன்னு எல்லா இடத்துலயும் திருநீர தடவ, படீர்ன்னு கன்னிக்குடம் வெடிச்சு அந்த இடம் முழுக்க ஈரம்.

இந்தா இப்ப வந்துரும் இப்ப வந்துரும்னு குமாரசாமி வாய் முணுமுணுத்தாலும் படக்குன்னு உள்ள போய்ட்ட கால்கள பாத்து கொஞ்சம் பீதியாக தான் செய்துட்டார்.

“சுந்தரி, டாக்டர கூப்டுவோமா, எதுக்கும் வந்து பாத்துடட்டும்”

“எனக்கும் அப்படி தாங்க தோணுது. ராத்திரி பனிரெண்டு மணி. ஆனாலும் கூப்ட்டு தான் ஆவணும்”

இப்ப லெட்சுமி எழுந்து நின்னுருந்தா. கன்னி வாய்ல எந்த அடையாளத்தையும் காணோம். உள்ள போய்டுச்சு.

டாக்டர கூப்ட்டுட்டு வந்தவகிட்ட கொஞ்சம் வென்னி ஒத்தடம் குடுப்பமான்னு கேட்டவர பாத்து, அதுவும் சரிதான்னு சாணி அடுப்புல வென்னிப் போட்டுட்டு வந்து கவலையோட உக்காந்தா சுந்தரி.

“ஏங்க, இவ ஏன் இன்னும் படுத்து முக்கல. காலோ தலையோ எதுவும் வெளில தெரியலயே”

“பொறு எல்லாம் சரியாகிடும்” குமாரசாமி லெட்சுமி முதுக விடாம தடவிட்டு இருந்தார்.

...........................................................................

ரெண்டாவது தடவையா டாக்டர கூப்ட்டு பாத்துட்டு வசந்திக்கு இனிமேலயும் படுத்துக் கிடக்க முடியல. எழும்பி மெதுவா கொல்லப்பக்கமா வந்தா.

“ஏம்மா, லெட்சுமிக்கி பிரசவம் ஆச்சா இல்லியா? சத்தத்த காணோம்”

“இன்னும் இல்லடி. வயித்துல அசைவையும் காணோம். எனக்கென்னமோ பயமா இருக்கு”

“ஒண்ணும் ஆவாதுமா” வாய் சொன்னாலும் வசந்திக்கும் இப்ப பதற்றம் தொத்திகிச்சு.

அந்நேரம் பாத்து லெட்சுமி கொஞ்சம் படுத்து முக்க, வெள்ளையா ரெண்டு காலு வெளில தெரியுற மாதிரி இருக்க, “வசு, நாம பிரசவம் பாத்துருவோமா” குமாரசாமி கேட்டதுக்கு சட்டுன்னு “சரிப்பா”ன்னு பதில் சொல்லிட்டா வசந்தி.

சுந்தரி லெட்சுமிய எழும்ப விடாம கழுத்த கட்டிக்கிட்டு கிடக்க, குமாரசாமி மெதுவா கைய உள்ள விட்டார். அவர் தயக்கத்த பாத்த வசந்தி, இருங்கப்பான்னு அவர தள்ள சொல்லிட்டு லாவகமா கைய உள்ள விட்டு கால பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சா.

“அம்மாஆஆஆஆ.......”

“பொறுடா பொறுடா... இந்தா இப்ப வந்துரும்” வசந்தி இழுத்த இழுப்புல ரெண்டு காலும் கொஞ்சம் வெளில வர, இப்ப குமாரசாமியும் சேந்துகிட்டார்.

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“என்னப்பா, தலையக் காணோம்”

பொறுக்க மாட்டாம லெட்சுமி மறுபடியும் எந்திரிச்சு நின்ன நேரத்துல தான் டாக்டர் மெல்ல வெடலிக்கு அந்தப்பக்கமா நின்னு குரல் குடுக்குறார்.

“வர்ற வழில வண்டி மக்கர் பண்ணிடுச்சு. நட்டநடு ராத்திரியில நம்ம முத்த எழுப்பி அத சரி பண்ணிகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிட்டு”

இந்த நேரம் கம்பவுண்டரயும் சேத்து எதிர்ப்பாக்குறது தப்பு. இவர் வந்ததே பெரிய விஷயம்.

வந்தவரு நேரா வென்னிய எடுத்து கைய நல்லா அலம்பிட்டு கூடவே டெட்டால் சோப்பும் போட்டு கைய கழுவுனார். சட்டைய களத்தி அங்க நின்ன மாமரத்து கிளை ஒண்ணுல தொங்க விட்டுட்டு மெல்ல லெட்சுமி பின்பக்கமா தடவிகிட்டே கைய உள்ள விட்டு பதம் பாத்து முடிச்சவர் நின்னு யோசிச்சுட்டு “கயிறு போடணும் போல”

இன்னும் ரெண்டு பேர் இருந்தா லெட்சுமிய பிடிச்சுக்க வசதியா இருக்கும். ஆனாலும் என்னப் பண்றது, நாமளே சமாளிப்போம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ண, டாக்டர் கொண்டு வந்த நைலான் கயித்த லாவகமா முடிச்சுப் போட்டு ஈத்துவாய்ல கைய உட்டு கால சேர்த்து கட்டுனார்.

நல்லா இழுங்க.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்சம்.... இன்னும் கொஞ்சம்....

லெட்சுமிய பாக்க முடியல. அவளால இப்ப கதறக் கூட முடியல. ஏதாவது செய்து என் புள்ளைய காப்பாத்திருங்கன்னு அவ கெஞ்சுற மாதிரி இருக்கு. இந்த வலிய என்னால பொறுக்க முடியலயேன்னு அழுற மாதிரியும் இருக்கு. குமாரசாமியும் டாக்டரும் இழுத்துப் பாத்துட்டு ரொம்பவே சோர்ந்து போய் இருந்தாங்க. லேசா ரெத்தமும் மாசியும் கலந்து ஒழுக்கி விளுந்தத பாத்து வசந்திக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்க, “எம்மா, நான் வேணா லெட்சுமி தலைமாட்டுல நிக்கேன், நீ வந்து இழுக்குறியா”ன்னு சுந்தரிகிட்ட கேட்டா.

“எனக்கென்னமோ முடியும்னு தோணல, கம்பி போட்ருவோமா”

டாக்டர் என்ன சொல்றார்ன்னு புரியாம வசந்தி திருப்பிக் கேட்டா

“அப்படினா என்ன டாக்டர்”

“இந்த மாதிரி ரொம்ப முடியாம போனா புள்ளையோட ரெண்டு கண்ணுக்கும் இடையில இருக்குற மூக்கு தண்டு பகுதில ஒரு கொக்கிய போட்டு இழுப்போம். புள்ள வழுக்கிகிட்டு வசமா வெளில வந்துரும்”

“ஐய்யய்யோ, அப்படினா புள்ளயோட கண்ணு போய்டுமே, மூக்கு உடைஞ்சுப் போனா புள்ள செத்துருமே... அத உயிரோட எடுக்க முடியாதா” வசந்தி அழ ஆரம்பிச்சுட்டா. பாவம் லெட்சுமி, எதுவுமே புரியாம ஏக்கமா பாத்துட்டு நிக்கா..

“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. ரெண்டு கண்ணுக்கும் இடப்பட்ட அந்த பகுதி ரொம்ப உறுதியானது. கால புடிச்சு இழுத்தா கூட பயப்படணும்... இது பயம் இல்ல... புள்ள ஜம்முன்னு வந்து விழும் பாரேன்”

டாக்டர் சொன்னதுல நம்பிக்க இல்லனாலும் இப்ப நம்பி தான் ஆகவேண்டியிருக்கு. வேற வழியில்ல. எல்லார் முகத்துலயும் சோகம். ஆனாலும் நடக்குறது நடந்து தான ஆவணும்.

இங்க நடந்த களேபரத்துல அப்ப தான் பக்கத்து வீட்டு நடேசன் கண்ண முழிச்சி லைட்ட போட்டுட்டே எட்டிப் பாக்குறான்.

“லே... நடேசா, கொஞ்சம் வந்து உதவி பண்ணுடே... லெட்சுமி பிரசவம் சிக்கலாய்டுச்சு”

வெளிச்சத்த பாத்து சுந்தரி குரல் குடுத்ததும் உடனே அங்க வந்துட்டான்.

டாக்டர் அந்த வளஞ்ச கொக்கிய எடுத்து மறுபடியும் ஈத்து வாய்க்குள்ள கைய உட்டு தலைய தேடுறார். கொஞ்ச நேர போராட்டத்துக்கு பொறவு “மாட்டிட்டேன், இழுங்க”ங்குறார்.

இப்ப டாக்டர் முதல் ஆளா இழுக்க, பின்னால குமாரசாமியும் நடேசனும் தம் கட்டி இழுக்க ஆரம்பிச்சாங்க. சுந்தரி கடைசி ஆளா கைகுடுக்க, அம்மா....ஆஆஆ.....ன்னு அலறுன லெட்சுமிய வசந்தி அணைச்சுகிட்டா...

“இந்தா வந்துடுச்சு, இந்தா வந்துடுச்சுன்னு ஒரு மூணு நிமிஷம் போராடினதுக்கு பொறவு லெட்சுமியோட மூணாவது கதறலோட விருட்டுன்னு வெளில வந்து விழுந்துது புது உசுரு.

புள்ள கண்ணுல மாட்டியிருந்த கொக்கிய உருவிகிட்டு இருந்தவர் கிட்ட “என்ன டாக்டர் இது? அசைவே இல்ல” வசந்தி கலவரத்தோட பாக்குறா.

பிரசவிச்ச அடுத்த நிமிஷம் லெட்சுமி திரும்பி புள்ளைய பாக்கலாம்னா கழுத்துல கட்டியிருந்த கயிறு தடுக்குது. இவங்க மூணு பேரையும் பாத்து வயித்த எக்கி “ம்ம்மா.....”ன்னு கூப்டுறா.

குமாரசாமி புள்ள மூஞ்சில ஒட்டி இருந்த மாசியயும் ரெத்தத்தயும் துணி வச்சு தொடச்சுட்டு இருக்கும் போது டாக்டர் குட்டி நெஞ்சுல கை வச்சு பரபரன்னு தேய்ச்சு பட் பட்ன்னு அடிச்ச அடில புள்ள லேசா அசஞ்சு குடுத்துது. தலைய தூக்க முயற்சி பண்ணி முடியாம தலைய கீழ போட்டுடுச்சு.

எப்பா, உயிரு இருக்கு” அஞ்சு பேர் மூஞ்சிலயும் இப்ப சந்தோசம்.

டாக்டர், குமாரமாமி, நடேசன்ன்னு மூணு பேருமா சேந்து குட்டிய தூக்கி லெட்சுமிகிட்ட போட்டப்ப லெட்சுமி மூஞ்சிய பாக்கணுமே. புள்ளைய அப்படியே நக்கி நக்கி எடுக்குறா.

புள்ள நல்ல கலருன்னு சொல்லிகிட்டே சுந்தரி வாலத் தூக்கிப் பாத்து, பொட்டப் புள்ளைங்கன்னு கலகலன்னு எல்லாரும் சிரிச்சுட்டு இருக்குறப்ப தான் போன உசிரு திரும்ப வந்துச்சு குமாரசாமிக்கு.

அப்புறம் என்ன, தள்ளைக்கும் புள்ளைக்கும் ஆளுக்கொரு ஊசிய போட்டுட்டு விடிஞ்சி வந்து பாக்குறேன்னு லெட்சுமிய ஒரு தடவ தடவிக் குடுத்துட்டு நூறு ரூவா தாளையும் வாங்கிட்டு டாக்டர் கிளம்பிப் போய்ட்டார். நடேசனும் அவன் வீட்ல போய் படுத்துட்டான்.

இங்க ஒரே பரபரப்பு....

“எப்பா, புள்ளைக்கு நான் குளம்பு வெட்டுறேன்”

“நீ வெட்டத் தெரியாம வெட்டிருவ, கத்திய இங்க கொண்டா நான் வெட்டுறேன்”

“எது, எங்களுக்கு வெட்டத் தெரியாதாக்கும். புள்ளைக்கு கண்ணுல மருந்து போட்டு இனி கவனிக்கப் போறதே நான் தான் தெரியும்ல”

“ஆமாமா, பயந்தாங்கொள்ளி, போ போ, போய் தலையணைய கட்டிபுடிச்சு ஒரங்கு. இனி லெட்சுமி கொடி போடுற வரைக்கும் எங்களுக்கு ஒறக்கமில்ல” புள்ளய வாக்கா புடிச்சு பால் குடிக்க வச்சுகிட்டே குமாரசாமி மகள விரட்டிட்டு இருக்கார்....

8 comments:

  1. வணக்கம்
    தங்களின் பாச உணர்வை அறிந்தேன் நலமாக வாழட்டும்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... இத ஒரு கதையா தான் எழுதினேன், ஆனா கதை மாதிரி தெரியலன்னு தோணுது இப்ப.... கதை எழுத கத்துக்கணும்

      Delete
  2. அன்பு தங்கைக்கு....அற்புதம்.பெண்னின் பிரசவமும் இது போலத்தான்...! எனக்கு திருமணம் முடிந்து மறுவீடு சென்று இருந்தேன்...அந்த நேரம் ஆடு ஒன்று வீட்டில் பிரசவத்துக்கு ரெடியாக.வீட்டிலோ பெரியவர்கள் யாரும் இல்லை!எனக்கு பயம் !ஆனால் என் மனைவி துணிந்து அன்று பிரசவம் பார்த்து இரண்டு குட்டிகளை எடுத்தாள்!
    தாய்மை என்றும் போற்றப்படவேண்டியது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆடு, மாடு பிரசவம் எல்லாம் எங்க வீட்ல சாதாரணம் அண்ணா. ஆனா ஒவ்வொரு பிரசவமும் அத்தனை எதிர்பார்ப்போட இருக்கும். சில நேரம் கோழி குஞ்சுங்க முட்டைய விட்டு வெளில வர முடியாம தவிக்குறப்ப தோட்டை பதமா உடச்சு, குஞ்சை வெளில எடுக்குறதும் உண்டு

      Delete
  3. ரொம்பவே படபடத்துப் போய் விட்டேன்... அப்பாடா...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அண்ணா, நிஜமா தான் சொல்றீங்களா? நான் கூட எழுதின விதத்துல என்னவோ குறையுதேன்னு யோசிச்சுட்டே இருக்கேன்

      Delete
  4. பதற வைத்த பாசப் போராட்டம்.
    த ம +1

    ReplyDelete