Tuesday, 12 April 2016

செல்லாக்காசு



“நீயெல்லாம் ஏண்டி சனியனே பொறந்து தொலஞ்ச? இப்படி வந்து வந்து வயித்தக் கழுவுறதுக்கு பேசாம செத்துத் தொலையேன். அப்படி என்னடி சொகம் வேண்டிக் கிடக்கு” இறைந்துக்கொணடே சென்ற நர்ஸ் பின்னே மெதுவே எட்டிப் பார்த்தேன்.

மிகவும் இளவயசு. கிட்டத்தட்ட பதினைந்து வயதிருக்கலாம். பூஞ்சையாய் தேகம். வாரப்படாத தலை. வயிற்றைப் பிடித்தப்படி மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்து இரக்கம் எதுவும் தோன்றவில்லை, “இந்த வயசுல இப்படியா” என்ற கேள்வி மனதில் தோன்றியதையும் தடுக்க முடியவில்லை.

************

வர வர பாட்டியின் உடம்பு சீர் கெடத் துவங்கியிருந்தது. படிப்பறிவும் இல்லாமல் புருசனும் இல்லாமல் அண்ணனின் நிழலில் ஒதுங்கி, அதனாலேயே இந்த சமூகத்திலிருந்தும் மறைந்து வாழ்ந்தவள். பெற்றப்பிள்ளைகளை கூட சீராட்டி வளர்க்க முடியாமல் தனிமைக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் அவள்.

அப்பாவுக்கு எப்பொழுதும் பாட்டியின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததாய் தெரியவில்லை. மாசாமாசம் சொற்ப காசு அனுப்பி வைப்பார். அதற்கும் மேல் வேண்டுமென்றால் ஒவ்வொரு காசுக்கும் செலவு கணக்கு கொடுத்தாக வேண்டும். வீட்டு வாடகையும் கொடுத்து சாப்பாட்டுக்கும் என்ன செய்வாள், மருத்துவ செலவுகளுக்கு எங்கு போவாள் என்றெல்லாம் எண்ணுவதே இல்லை. அதனால் தானோ என்னவோ பாட்டி தனக்கென தேவைகளை கூட எப்பொழுதும் பூர்த்தி செய்துக்கொள்வது இல்லை. எதைக் கேட்டாலும் “எனக்கெதுக்கு” என்று ஒதுங்கி போகின்றவள்.

போன மாதம் ஊருக்கு வந்தபொழுது தான் கவனித்தேன், பாட்டியின் கால்கள் நீர் கோர்த்துக் கொண்டிருந்ததை. அதன் பின் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்து, இதோ கட்டாயமாய் அவளை இந்த மருத்துவமனை வரவேற்பறையில் அமர வைத்துள்ளேன்.

*************

“ஏண்டி, இது மூணாவது தடவ, பதினோரு மாசத்துல இத்தனவாட்டி வந்துட்ட. எவடி ஒன்ன கொண்டு வந்து விடுறா? என்ன தொழில் செய்றாளா ஒன்ன வச்சு?” – மறுபடியும் அதே நர்ஸ். இப்பொழுது அந்த சிறுமி அழ ஆரம்பித்திருந்தாள். அழுகையின் ஊடே அவள் என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“பசிக்கி. மூணு நாளாச்சு. ஏதாவது தாங்கக்கா”

தனக்கு நேர்ந்தது என்ன என்பது அறியாது, வயிற்றை பிடித்து அவள் எதற்காக அழுதுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த பொழுது உள்ளுக்குள் நொறுங்கிப் போவதைப் போன்ற உணர்வு. அதைத் தொடர்ந்து “நம்மால என்ன செய்ய முடியும்?” என்று எனக்குள் நானே சமாதானமும் செய்துக் கொண்டேன்.

“அந்த புள்ள ஒரு அனாத சிறுக்கியாம். தவுப்பன் தாயில்லாம ஒவ்வொருத்தன் திண்ணையிலா படுத்து கெடக்குமாம். வயித்துக்கு சோத்த போட்ட எவனோ அவ வயித்தையும் நெரப்பி விட்டுருக்கான். பாவம் புள்ள, வயித்துப் பாட்டுக்கு வழியில்லாம இப்படி வயித்துல சொமந்துகிட்டு நிக்குவு. அந்த வீட்டுவளுக்கு பத்து பாத்திரம் தேய்க்குரவ தான் எரக்கப்பட்டு வயித்த கழுவ இங்க கொண்டு வந்து விட்டுருக்கா. ஹ்ம்ம்ம்... இனிமேல எவன் வந்து இவள கெட்டி, இவ கூட குடும்பம் நடத்தி... புள்ள வாழ்க்கைய சீரழிச்சுப் புட்டானுவ” பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு அமர்ந்த பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.

“நம்மால என்ன செய்ய முடியும் பாட்டி”

“ஏதாவது செய்துர முடியாதான்னு மனசு கெடந்து அடிக்குது ஆத்தா. இந்த வயசுல இந்த புள்ள இப்படி திரியுவே, இத எல்லாம் மனுச சென்மமா மதிச்சு நடத்த ஒருத்தரும் இல்லையா? அந்த நர்சு ஒரு பொம்பள தான, அவளுக்கு அந்த புள்ள நெலம புரியாதா? இப்படி போட்டு கரிச்சுக்கொட்டுறா. என்னவோ போத்தா, பொட்டப்புள்ளையா பொறந்துட்டமே. ஒந்தாத்தன் விட்டுட்டு ஓடுனப்பவே அவன் கொதவளைய நெருச்சிப் போட எனக்கு துப்பில்ல. எவன் மூஞ்சியையும் நிமிர்ந்து பாக்க வக்கில்லாம செல்லாகாசா கூடப்பொறந்தவன் பிச்ச போடுற மாதிரி போட்டத துன்னுட்டு கெடந்தேன். இப்ப ஒன் அப்பன் எரியுற அஞ்சு பத்து காச பொறிக்கிகிட்டு கெடந்து அல்லாடிக்கிட்டு கெடக்கேன்”

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மெல்ல பாட்டியின் கைகளை பற்றிக் கொண்டேன்.

“பாட்டி, நாம வருத்தப்பட்டு எதுவும் ஆவப்போறது இல்ல. நம்ம பொழப்பயே நம்மளால பாக்க முடியல, இதுல அடுத்தவ எப்படிப் போறான்னு எப்படி பாக்குறது?”

“இப்படியே சொல்லிக்கிட்டு கெடந்தா எப்படித்தா. மனசுக்குள்ள என்னென்னவோ பண்ணுது ஆத்தா... பொண்ணா பொறந்துட்டாலே சாவுற வரைக்கும் அண்டி தான் பொழைக்கணுமாத்தா? எதாவது செய்யணும்த்தா, ஏதாவது செய்யணும்” வெடித்து அழும் பாட்டியை இப்பொழுது என்னோடு சேர்ந்து அவளும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கியிருந்தாள்.

Wednesday, 6 April 2016

பெண்மை தூற்றுங்கள்



தலைப்ப பாத்த உடனே “என்னடா இது, இவ இப்படி சொல்லிட்டாளே”ன்னு கோவப்படுறீங்களா? எனக்கு அதை விட கோவம் அதிகமாக இருக்கு.

“பெண் அன்பின் மறுவுருவம்”

“பெண் பொறுமையின் சிகரம்”

“பெண் தெய்வம்”

இப்படி எல்லாம் சொன்னா கேக்கவும் படிக்கவும் நல்லா தான் இருக்கும். இத எல்லாம் கேக்குற பெண்கள் கூட “அட, ஆமா. நாங்க இப்படித் தான்”னு நெஞ்ச நிமிர்த்திப்பாங்க.

அட, அதெல்லாம் விடுங்க. ரொம்ப சமீபத்துல ஒரு கவிதை பாத்தேன்.

“பெண்ணே உன் முன்னே
நான் தலை குனிந்து நிற்கின்றேன்
அன்பு கொண்ட உன்னில்
காமம் கொண்ட என் பார்வை படாதிருக்க”

படிக்குறப்பவே அப்படியே ஒரு சோக வயலின் பின்பாட்டா ஒலிக்குதுல. “அடடா, பெண்ணே, நீ எவ்வளவு அன்பானவள், பண்பானவள். உன் முன்னால எல்லாம் தலைநிமிர்ந்து நிக்க ஆண்களுக்கு தகுதியே இல்ல, மொத்த ஆண்களும் காமப்பார்வை பார்ப்பவர்கள் அப்படின்னு சொல்றப்ப, பெண்கள் எல்லாரும் “ஆமாப்பா ஆமா” அப்படின்னு அப்படியே கண்ணுல தண்ணி வச்சுட்டு பாந்தமா சாந்தமா ஸ்லோ மோசன்ல நிமிர்ந்து பாக்குற மாதிரியே ஒரு உணர்வு எனக்கு.

அப்படியே இதுக்கு பின்னால எனக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குறதா தோணுது. “இங்கப்பார், நீ அன்பானவள். அன்பா மட்டும் தான் இருக்கணும். காமம்ங்குறது ஆண்கள் சொத்து. எங்களுக்கு நீ தேவைனா உன்னை எல்லாம் நாங்க காமமா மட்டும் தான் பாப்போம், அன்பா எல்லாம் இருக்கத் தெரியாது”ன்னு அடக்குமுறைல சொல்ற மாதிரியே எனக்கு கேக்குதே.

அப்படினா, பெண்களுக்கு காமம் வரக்கூடாது, வந்தாலும் வெளில சொல்லக் கூடாது. அப்படி சொல்லிட்டா போச்சு, “ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா, இப்படி அலையுறியே”ன்னு வாய் வலிக்க வலிக்க திட்டித் தீக்கணும். கூடவே “உங்கள எல்லாம் நாங்க தான் ரசிக்கணும், நாங்க தான் பாராட்டணும், பெண்-னா அவளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே உண்டு. அப்படி இருந்தா தான் அவ பெண். அவள நாங்க கால்ல விழுந்து கும்பிடுவோம், தேவைபட்டா தூக்கிப் போட்டு மிதிப்போம், அப்படியே காமம் வந்தா இழுத்துட்டு போய்....” அடப்போங்கப்பா.... இத சொல்றது ஆண்கள் தான்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாதீங்க. பெண்களே ஒரு பெண்னா இப்படி தான் இருக்கணும், இதுதான் வரைமுறைன்னு சொல்றாங்க.

ஒவ்வொரு தடவ பெண்ணுக்கு எதிரா அசம்பாவிதம் நடக்குறப்ப எல்லாம் சில நடுநிலையாளர்கள் (இதுல ஆண் பெண்ன்னு எல்லாம் இல்ல, எல்லா பாலினரும் தான்) பொங்குறது அவ ஆடை விசயத்துல தான். அய்யோ அவ அப்படி ட்ரெஸ் போட்டு எங்கள உசுப்பெத்துறா, இப்படி ட்ரெஸ் போட்டு எங்கள கூப்டுறான்னு கூச்சல் வேற. ஏன்னா இவங்களுக்கா செல்ப் கண்ட்ரோல் கிடையாதாம். எல்லாமே எல்லாத்துக்குமே பொண்ணு தான் காரணமாம்.

இதுல இப்போன்னு இல்ல எப்பவுமே இன்னொரு ட்ரெண்ட். “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா”ன்னு. இந்த சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் அம்மாக்கள படுத்துற பாடு சொல்லி மாளாது. அம்மானா அவ ஒரு தியாக சொரூபி. பிள்ளைங்களுக்காக எல்லாத்தையும் இழக்கணும். தூக்கம் மறந்து துக்கம் மறச்சு, சாப்பாட்ட கூட பிள்ளைங்களுக்காக விட்டுக் குடுக்கணும். எத்தன காலத்துக்கு தான் இதயே சொல்லிக் குடுக்கப் போறாங்களோ தெரியல.

ஏன், அம்மான்னா மனுசி இல்லையா? அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா? அம்மா அம்மான்னு அம்மாவ தியாகி ஆக்குற கூட்டம், அம்மாவ பாத்துக்குற பொறுப்பு பிள்ளைங்களுக்கு உண்டுன்னு எப்போ சொல்லிக் குடுக்கப் போறாங்க?

காலைல எழுந்த நேரத்துல இருந்து, அம்மாவுக்கான அத்தன வேலைகள்லயும் தானும் பங்கெடுத்து செய்யணும்னு யாரு பிள்ளைங்களுக்கு கத்துக் குடுக்கப் போறாங்க? திங்குற சாப்பாட்ட தட்டிப் பறிக்காம அம்மாவுக்கும் பங்கு உண்டுன்னு பகிர்ந்து அளிக்குற எண்ணத்த என்னிக்கி பிள்ளைங்களுக்கு விதைக்கப் போறாங்க? அம்மாவ எல்லாம் நீங்க பாத்துக்க வேணாம், ஆனா அவளோட சுயமரியாதைய அடக்கி வைக்காதீங்க. நீ அம்மா, நீ தியாகம் பண்ண பொறந்தவ, தியாகம் பண்ணியே தீரணும்னு நினைக்குற மனப்போக்க முதல்ல புள்ளைங்க மனசுல இருந்து மாத்தப்பாக்கணும்.

என்கிட்ட ஒருத்தங்க சொன்னாங்க, “எந்த ஆணும் யோக்கியன் கிடையாது, பெண்கள பாத்தா அவனுக்கு தானாவே ரசிக்கத் தோணும். அவள அடைய தோணும். இத எல்லாம் தப்புன்னு சொல்லக் கூடாது”ன்னு. எனக்கும் தெரியும், பெண்களோட கூடிக் கிடப்பவங்க எல்லாம் அயோக்கியனும் கிடையாது, பெண் வாசமே வேணாம்னு போறவங்க எல்லாம் யோக்கியனும் கிடையாதுன்னு. இன்னும் சொல்லப்போனா இந்த யோக்கியன், அயோக்கியன்ங்குற வார்த்தை பிரயோகமே தப்புன்னு தான் சொல்லுவேன்.

இயற்கையாவே மனுஷ இனம்னு இல்ல, எல்லா இனத்துக்கும் இருக்குற பொதுவான குணம் இந்த ஆண் டாமினேஷன். ஆனா ஒவ்வொரு உயிர்களோட இயங்குசக்தியே பெண்ணை சுத்தி தான் நடந்துட்டு இருக்கு. ஒரு பெண்ணுக்காக சண்டைப் போட்டு அழிஞ்ச பெரும் சாம்ராஜ்யங்கள் பத்தி நாம படிச்சதில்லையா? ஒரு பெண்ணை கவர தான் ஆண் அவன் வல்லமைய கூட்டிக்குறான்.

திறமையான ஒரு ஆணை தன்னோட இணையா தேர்ந்தெடுக்குற உரிமை எல்லா உயிரினத்து பெண்களுக்கும் உண்டு. அப்படி இருக்குறப்ப ஏன் இந்த மனுஷ இனத்துல மட்டும் ஒரு பொண்ணு தன்னோட இணைய தைரியமா தேர்ந்தெடுக்க முடியுறது இல்ல?

கேட்டா, நீ பெண், நீ அடக்க ஒடுக்கமானவள், நீ அன்பானவள், நீ வீட்டுக்கு அடங்கி நடப்பவள்... இன்னும் பல வள்... வள்... வள்...

வேற ஒண்ணுமே இல்ல, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து சலிச்சுப் போய் கொஞ்சம் ஊர் சுத்திட்டு வரலாம்னு நினச்சா கூட அந்த பெண்ணுக்கு என்ன பெயர் கிடைக்கும்னு நினைக்குறீங்க?

அதெப்படி அவள அவ இஷ்டப்படி வெளில விடலாம்? இருக்கவே இருக்கு வழக்கமான ஆராதனைகளும் அர்ச்சனைகளும். மறுபடியும், நீ பெண்ல.... ஒரு பொண்ணுனா எப்படி இருக்கணும்னு தெரியுமா? இந்தா உன் அக்காவ பாரு, பக்கத்து வீட்டு பரிமளாவ பாருன்னு ஆரம்பிச்சு அறிவுரையா சொல்லி திருத்தப் பாக்குறது (ஏன்னா ஒரு பெண் ஊர் சுத்துறது மாபாதகம் பாருங்க). இந்தபுள்ளையும் அடக்க ஒடுக்கமா இருந்துட்டா “இவள மாதிரி நல்ல பெண்ணே கிடையாது”. மீறி வெளில போயிட்டாளா, “ஓடுகாலி, அடங்காப்பிடாரி”.

நம்மள சுத்தி இருக்குற பிற உயிர்கள கூர்ந்து கவனிச்சாலே போதும், ஒரு விஷயம் நல்லாவே புரியும். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இணைபிரியாம இருக்குற இணையும் இருக்கும், திருட்டுத் தனமா இன்னொரு இணையை சேர்த்துக்குற  இணையும் இருக்கும். இப்படி எல்லா குணங்களும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தான். ஆனா மத்த உயிர்கள்கிட்ட இருக்குற ஒரு நல்ல குணம் என்னன்னு பாத்தீங்கனா, யாரும் யார் விஷயத்துலயும் தலையிடுறது இல்ல. யாரும் யார் கூடவும் சேர்ந்து வாழக் கூடாதுன்னு அதிகாரம் பண்றது இல்ல, தடுக்குறது இல்ல. சேர்ந்து வாழணும்னு கட்டாயப்படுத்துறதும் இல்ல. வயசு வித்யாசம்னு எதுவும் பாக்குறது இல்ல. பிடிச்ச இணையை சேர்த்துகிட்டு கஷ்டமோ நஷ்டமோ இணைகள் அவங்க பாட்ட அவங்க தான் கவனிச்சாகணும். இதுவே மனுஷ இனமா இருந்தா?

ஆண்டாண்டு காலமா இந்த சமூகத்துல புரையோடிப் போயிருக்குற சாதீய படுகொலைகளுக்கு நாம என்ன பெயர் வச்சிருக்கோம்?

கெளரவக் கொலை. ஆணவக் கொலை.

இந்த கொலைய எல்லாம் தூண்டுறது யாரு?

இந்த சமூகம் தான் இல்லையா? சம்மந்தப்பட்ட ஆட்களை சுத்தி இருக்குற நாம எல்லாரும் தான் இல்லையா?

ஒரு ஆணும் பெண்ணும் ஓடிப் போய்ட்டா அது என்ன, ஏது, எங்க, எப்படி, யார், யாரோடன்னு தெரிஞ்சுக்கலனா தலை வெடிச்சு சிதறிடும் பாருங்க. அதுலயும் அவங்க இப்படி செய்திருக்க கூடாதுன்னு அவங்க உரிமைல தலையிடுறதுக்கு நிகர் நாமளே தான்.

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும், இந்த சமூகம் இப்படி இருக்க நாமளே தான் காரணம். நாம மாறாம சமூகம் மாறணும்னு நினச்சா?

ஆக, பெண்ணை போற்றுதும், பெண்மை போற்றுதும்னு சொல்லி சொல்லியே பெண் இனத்துக்கு ஒரு வரைமுறை வகுக்காம, எல்லாருக்கும் பொதுவான ஒரு நீதியோட எல்லாரும் இருந்தாலே போதும்.

சுருக்கமா சொன்னா...

ஆணோ பெண்ணோ....

யார் விசயத்துலயும் யாரோட வாழ்க்கை முறையிலயும் தங்களோட அதிகாரத்த செலுத்தாம இருந்தா போதும்.

நம்மோட வாழ்க்கை நம்மோட நிம்மதின்னு இருந்துட்டாலே போதும்...

யாரும் யாரையும் போற்ற அவசியம் இல்ல.

அட, தூற்றினாலாவது ஒரு பெண் அதுல இருந்து மீள வீறுக்கொண்டு எழலாம். ஆனா போற்றினா புகழ்ச்சிக்கு மயங்கியே அடங்கிப் போவாங்க....

ஆதனால் பெண்மை தூற்றுங்கள்.




Monday, 4 April 2016

ஐ லவ் யூ பார்த்தி




இந்த புகைப்படத்த பாரு பார்த்தி,

எவ்வளவு பிரகாசம் படர்ந்திருக்கு
அந்த முகங்கள்ல...

நீயே எல்லாமும்னு
சரணாகதி அடைஞ்ச
தருணங்கள் பார்த்தி அதெல்லாம்...

உன் முகத்தைக் கூட பாரேன்...

எத்தனை கம்பீரமான புன்னகை
உன்னோடது...

என்னோட கண்கள பாத்தியா?

ஒரு குறும்பு சிறுமியோட குறுகுறுப்பு
தெரியுதுல அதுல...

நீ என் கைமேல படுத்துருக்க...
நான் உன் நெஞ்சோடு
படுத்துருக்கேன்...

அதுவும் உன்னையே
விழுங்குற மாதிரி பாத்துட்டு...

இந்த தருணத்த
பொய்ன்னு சொல்றியா பார்த்தி...

இது எல்லாமே
நடிப்பும் நாடகமும் கலந்ததுன்னு சொல்றியா?

வலிக்குது பார்த்தி,
ரொம்ப வலிக்குது பார்த்தி...

எழுத எழுத
தீரவேப்போறதில்ல பார்த்தி...

ஆறாத ரணமா கெடந்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை கொல்லுது பார்த்தி...

எத்தன முறை யோசிச்சாலும்
ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்
புரியுது பார்த்தி...

ஐ லவ் யூ பார்த்தி....

Saturday, 26 March 2016

அன்பின் மிச்சமென கொள்க...




அந்த வாழ்த்தட்டையின்
உள்ளிருந்து கிளம்பிய ஒலி
இன்னமும்
ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

பார்த்தி,
எப்பொழுதேனும் உனக்கு
நினைவிற்கு வருகிறதா?

இந்த ஒலி அடங்கும் மறுநிமிடம்
உன்முன் நிற்பேன் என்றாய்...
ஒலி அடங்கி ஒரு ஏமாற்றத்தை
ஜீரணிக்க முடியாதென்பதாலோ என்னவோ
இன்னமும் அதை மாரோடு அணைத்திருக்கிறேன்...

குறுகுறுவென என் கண்களை
பார்த்தவாறே சட்டென
இழுத்தணைத்து நீயிட்ட முத்தம்
எத்தகைய நேசத்தை
வெளிப்படுத்தியது என்பதை
நீ அறிவாயா?

உலகம் மறந்து,
உற்றார் மறந்து,
சுற்றம் மறந்து,
அன்பை மட்டுமே
ப்ராதனப்படுத்திய தருணங்கள் அவை...

அந்த அன்பை உதறி
வெறுப்பை உமிழ்ந்து
அத்தனையையும் பெற்றுவிடலாமென
எந்த காலக்கோட்டில் எழுதி வைத்த விதியென 
விளக்கிடுவாயா நீ...

பார்த்தி,
எதுவும் பொய்யில்லை...
இதோ நீ பற்றிய விரல்,
நீ எழுதி முத்தமிட்ட உன் பெயர்...
எல்லாமுமாய் நீயிருக்கிறாய்...

இவளிடத்திலிருப்பது இவளில்லை...
பார்த்தி விதைத்து சென்ற அன்பின்
மிச்சமென கொள்க...


.

Monday, 7 March 2016

கர்ப்பமாயை என்ற பொய் கர்ப்பம்




அது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளோட காலம். நியூயார்க் நகரோட ஒரு பகுதியில இருக்குற மருத்துவமனைல இருந்து டாக்டர் ரேட்பாவுக்கு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலில துடிக்குறதா அழைப்பு வருது. அவர் அங்க போனப்போ அந்த பெண் இப்பவோ அப்பவோன்னு பிரசவிக்குற நிலைல இருக்குறா. அவள அவசர அவசரமா வீல் செயர்ல உக்கார வச்சு எமர்ஜென்சி ரூமுக்கு கொண்டுப் போக சொல்றார் டாக்டர். அப்படி கொண்டுப் போற நேரத்துல அவ பனிக்குடம் உடைஞ்சு நீர் வழிய ஆரம்பிக்குது.

அடுத்த நாள் அந்த பெண்ணோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்காக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்ட டாக்டருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஆமா, அந்த பெண் முந்தின நாள் ராத்திரியே டிஸ்சார்ஜ் ஆகிட்டதாவும், அவ கர்ப்பம் எல்லாம் இல்ல, மூத்திர பை நிறைஞ்சு வழிஞ்ச மூத்திரம் தான் அந்த நீர்னும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்களோட கர்ப்பக்கால மாற்றங்கள பத்தி சக தோழி என்கிட்ட விவரிச்சுட்டு இருந்தப்ப, மேல தெரிஞ்சுகிட்ட செய்தி ஆச்சர்யமா இருந்துச்சு.

“இதெப்படி சாத்தியம்? உப்பலான வயிரோட, ஒரு கர்ப்பிணிக்கு வர்ற பிரசவ வலியோட வந்த பெண் கர்ப்பமே இல்லையா? ஒரு டாக்டரால கூட அத கண்டுபிடிக்க முடியலயா?” இந்த கேள்விகள் என் மனசுக்குள்ள எழுந்த உடனே இதபத்தின விசயங்கள பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

மிகப்பெரிய ஆச்சர்யத்தோட இத பத்தி என் சக தோழிகிட்ட கேட்டப்ப அவ சொன்ன விஷயம் இன்னும் அதிர்ச்சியா இருந்துச்சு. அவளும் கூட இந்த மாதிரியான சிக்கல்ல ஒரு தடவ மாட்டினதா சொன்னா. கணக்கு தவறாம வழக்கமா வர்ற மாதவிடாய் வரலனும், வாந்தியும் தலைச்சுத்தும் வந்து ரொம்ப அவஸ்தைப்பட்டதாவும், மாமியார் வீட்ல எல்லாரும் சந்தோசப்பட்டதாவும், ஆனா ரெண்டே மாசத்துல மருத்துவமனை போய் பரிசோதிச்சு பாத்தப்ப அது பொய் கர்ப்பம் அல்லது கர்ப்பமாயைனு தெரிய வந்துச்சுன்னும் சொன்னா.

அதென்ன கர்ப்பமாயை?

எஜமான் படத்துல மீனா வயித்துல துணி வச்சு கர்ப்பம்னு ஊரை ஏமாத்துவாரே, அந்த கதை கூட ஒரு உண்மை சம்பவத்த அடிப்படையா எடுத்ததுன்னு என் பாட்டி சொல்ல கேள்விப்பட்டுருக்கேன். அப்போ அதான் கர்ப்பமாயையா? கண்டிப்பா இல்ல.

இந்த பொய் கர்ப்பங்குறது அரிதா பெண்களுக்கு வரக் கூடிய மனநிலை, உளவியல் சார்ந்த பிரச்சனைன்னு ஆரம்பத்துல டாக்டர்கள் சொல்லிட்டு இருந்தாங்க. இந்த பிரச்சனையால பாதிக்கப்படுற பெண் தான் கர்ப்பமா இருக்குறதா நினைச்சுப்பா. கிட்டத்தட்ட தன்னை ஒரு கர்ப்பிணி மாதிரியே பாவிச்சுப்பான்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இதே மாதிரியான கர்ப்பமாயை மற்ற விலங்குகளுக்கும் ஏற்படுறத கவனிச்சுட்டு தான் அது ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம்ன்னு இப்ப ஒரு முடிவுக்கு வந்துருக்காங்க.

கர்ப்பமாயை வந்த பெண்களுக்கு அப்படி என்ன தான் உடம்புல மாற்றங்கள் வரும்?

முதல்ல மாதவிடாய் சுழற்சி நிக்கும்.

அடுத்து குமட்டலும் தலைசுத்தலும் வரும்.

இந்த மாதிரியான அறிகுறிகள் பத்தோ பதினஞ்சோ நாட்கள்ல சரியா போய்டும். ஆனா சிலபேருக்கு இது கர்ப்ப காலமான ஒன்பது மாசம் வரைக்குமோ இல்ல அதுக்கு மேலயோ தொடர்ந்துகிட்டே இருக்கும்.

அந்தமாதிரி நீண்ட கர்ப்பமாயை இருக்குறவங்களுக்கு நாளடைவுல மார்பகங்கள் பெருசாகும்.

சிலபேருக்கு சீம்பால் கூட சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதாவது விசேசமான உணவ சாப்பிடணும்னு மனசுக்குள்ள தோணும்.

பொதுவா கர்ப்பிணிகளுக்கு வர்ற மாதிரி கால் தசைப்பிடிப்பு, முதுகு வலி எல்லாம் வரும்.

வயிறு உப்பத் தொடங்கும்.

உடல் பருமன் அதிகரிக்கும்.

வயித்துக்குள்ள குழந்தை உதைக்குற உணர்வு வரும்.

பிரசவ வலி வரும்.

இப்படி ஒரு கர்ப்பிணிக்கு வர்ற அத்தன அறிகுறிகளும் இவங்களுக்கும் வரும். என்ன, ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா, கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும், இவங்களுக்கு பிறக்காது.

இதெல்லாம் எப்படி நடக்குதுனா, ஒரு பெண் தன்னை கர்ப்பம் அடைஞ்சதா நினைச்சுகிட்டானா, சம்மந்தப்பட்ட பெண்ணோட பிட்யூட்டரி சுரப்பி அதிக அளவுல ஹார்மோன சுரக்க ஆரம்பிக்கும். இப்படியான மன அழுத்தமும் பதட்டமும் சேர்ந்து ஹார்மோன் சுரப்ப இன்னும் அதிகரிச்சு ஒரு மாய சூழ்நிலைல உடலை தள்ளி விட்டுரும்.

இந்த மாதிரியான அறிகுறிகள கர்ப்பம் இல்லன்னு எப்படி கண்டுப்பிடிக்குறது?

இந்த காலத்துல இந்த மாதிரியான கர்ப்பமாயைய கண்டுபிடிக்குறது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல. ஆரம்பத்துலயே கர்ப்பமா இல்லையான்னு ஒரு கார்ட் டெஸ்ட் போட்டுப் பாத்துட்டா தெரிஞ்சிடும். ஆனாலும் கர்ப்பக்காலத்துல செய்ற இந்த ஆரம்பகட்ட பரிசோதனையில கர்ப்பம்ன்னு கூட சிலநேரம் தப்பான அடையாளம் காட்டும்.

அட, அதெல்லாம் பரவால, சில பேருக்கு அல்ட்ரா சவுண்ட் எடுத்துப் பாத்தா கூட குழந்தையோட அதிர்வுகள் தெரியுற மாதிரி இருக்குமாம்.

சரி, இதெல்லாம் எதனால வருது?

ஒரு பெண் மிகப்பெரிய மன அழுத்தத்துல இருந்தாலோ, இல்ல தான் கர்ப்

பம் ஆகியே தீரணும்னு ஆவலோட இருந்தாலோ சில நேரம் இந்த கர்ப்பமாயை உருவாகுதுன்னு சொல்றாங்க.

என்னைக் கேட்டா இதுக்கெல்லாம் காரணம் இந்த சமூகம்னு தான் சொல்லுவேன். கல்யாணம் ஆகிட்டாலே அடுத்து விசேசம் எதுவும் உண்டான்னு தானே அவங்கள எங்கப் பாத்தாலும் கேக்குறோம்.

எங்க நாம கர்ப்பமாகாம போய்ட்டா எல்லாரும் தப்பா பேசுவாங்களோங்குற எண்ணமே ஒரு பெண்ணை மிகப்பெரிய மன அழுத்தத்துல தள்ளிடுது. இதனாலயே தான் கர்ப்பமா இருக்குற மாதிரியே அவ உணர ஆரம்பிக்குறா. அவ உடம்புல இருக்குற ஹார்மோன்களும் இதனால மாற்றத்துக்கு உள்ளாகுது. ஒரு கர்ப்ப சூழ்நிலைய இந்த காரணங்கள் உருவாக்கி குடுத்துடுது. அதுவும் இந்த மாதிரியான அறிகுறிகள் கடைசி கட்ட முப்பதுகள்லயும், நாற்பதுகளின் ஆரம்பத்துல இருக்குற பெண்கள் கிட்டயும் சகஜமா இருக்கு.

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள், குழந்தைகள இழந்த பெண்களுக்கும் சிலநேரம் இந்த கர்ப்பமாயை ஏற்படுது. சின்ன வயசுல பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளானவங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுது.

தான் கர்ப்பமா இருக்குறதா ஒரு பெண் நினைக்குற நிகழ்வுனால அவ அடுத்தடுத்து கர்ப்பம் தறிக்குற வாய்ப்ப இழக்குறா. சில பேருக்கு இதனால அடிக்கடி கருச்சிதைவும், உயிருக்கே ஆபத்தும் கூட நேர்ந்துருக்கு. இந்த மாதிரியான பெண்களுக்கு அவங்க கர்ப்பம் இல்லன்னு நம்ப வைக்குறது அவ்வளவு சுலபமில்ல.

அப்படினா இந்த மாதிரியான பொய் கர்ப்பசூழல் மனநிலை மாற்றத்தாலயும் உளவியல் காரணத்தாலயும் மட்டும் தான் வருதா?

கண்டிப்பா இல்ல. சூல்ப்பைல புற்றுநோய் இருந்தா கூட இந்த பொய் கர்ப்ப அறிகுறிகள் தெரியும். இதனால நாற்பதுகளின் ஆரம்ப வயசுல இருக்குற பெண்கள் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கான்னு சோதனை பண்ணிக்குறது நல்லது.

இந்த கர்ப்பமாயைல சிக்கிக்குற பெண்கள மீட்டெடுக்குற வழி தான் என்ன?

பெரும்பாலும் முதல்ல அதுக்கான காரணத்த அறிய முற்படணும். புற்றுநோய் காரணமா இந்த அறிகுறி இருந்தா, அதுக்கான மருத்துவ சிகிச்சைகள எடுத்துக்க ஆரம்பிக்கணும். அதுவே மனோரீதியான பாதிப்பா இருந்தா, அவள சார்ந்தவங்களும், சுத்தி இருக்குறவங்களும் அவளுக்கு உளவியல் ரீதியா தங்களோட முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் குடுக்கணும். ஒரேயடியா நீ கர்ப்பம் இல்லன்னு சொல்றதுக்கு பதிலா அவளுக்கு நடத்தப்பட்ட அத்தனை சோதனைகளையும் படிப்படியா விளக்கி அவளே புரிஞ்சுக்குற மாதிரி பண்ணனும்.

ஆனா இந்த மாதிரியான அறிகுறிகள் ரொம்பவே அபூர்வமா தான் பெண்களுக்கு தோன்றும். அதனால மறக்காம, பயப்படாம எல்லா கர்ப்பக்கால சோதனைகளையும் எடுத்துக்கிடுறது நல்லது. இதுல இருந்தே சில வியாதிகள் மனசோடவும் சம்மந்தப்பட்டுருக்குன்னு நிரூபணம் ஆகுது.

முதல்ல பெண்கள் குழந்தை பெறுவதுக்கு மட்டுமே படைக்கப்பட்டவங்கன்னு வலியுறுத்துற போக்கு மாறணும். கர்பத்த தாண்டி ஒரு பெண் சாதிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்குறத சமூகம் புரிஞ்சுக்குற நிலை வரணும். இனி ஒரு பெண்ணும் மன அழுத்தத்துனால இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படுறத மாத்தணும். அந்த காலம் ரொம்ப தூரத்துல இல்லன்னு மட்டும் என்னோட உள் மனசு சொல்லிகிட்டே இருக்கு.



அகம் மின்னிதழ்ல  வெளிவந்த  என்னோட  கட்டுரை.. 

Friday, 4 March 2016

காக் டெயில் கொண்டாட்டம்...




நேத்து லீவ். எப்படியும் பத்துமணி வரைக்கும் நல்லா தூங்கணும்னு செமையா முந்தின நாள் நைட்டே ப்ளான் எல்லாம் போட்டுட்டு காலைல ஒன்பது மணிக்கு அலாரம் வச்சுட்டு தூங்கினா, பத்துமணிக்கு முன்னாடியே ஒன்பது மணிக்கு அலாரம் அடிச்சி எழுப்பி விட்டுடுச்சு.

சரி, எழும்பின வேலைய கவனிப்போம்னு கால் பண்ண வேண்டியவங்களுக்கு கால் பண்ணினா, அட்டென்ட் பண்ணினாதானே. தூக்கக் கலக்கத்துலயே திரும்ப திரும்ப கால் பண்ணி கடுப்பாகி ஒரு கட்டத்துல டயல் பண்ணி பெட்ல போட்டுட்டு கண்ண மூடிட்டேன். திடீர்னு என்னவோ சத்தம் கேக்குதேன்னு பாத்தா, மொபைல்ல அந்த பக்கம் இருந்து பாட்டுச் சத்தம்.

அச்சச்சோ நாம பாட்டை மிஸ் பண்ணிட்டோமேன்னு நொந்துகிட்டே மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.

சுமார் பத்தரை மணி இருக்கும். திடீர்னு நந்து குரல். ஏய், நீ என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க, நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்க, என்னை வெளில கூட்டிட்டு போறேன்னு.

இதுக்குமேல தூங்கினா வேலைக்காகாதுன்னு போய் ப்ரஸ் பண்ணிட்டு வந்து அப்படியே அவ கொண்டு வந்த ஒரே ஒரு இட்லிய பிச்சு வாய்ல போட்டுட்டு டைப் பண்ண வேண்டியது நிறைய இருக்கு செல்லம், அப்புறமா கூப்ட்டுட்டு போகட்டான்னு கேக்க, புள்ள மூஞ்சி இஞ்சி தின்ன கொரங்கா மாறிப் போச்சு.

சரி, சரி, இப்ப உன்னை வெளில தான கூட்டிட்டு போகணும், இரு, கிளம்பிட்டு வரேன்னு நான் சொன்னதும், வெளில போக வேண்டாம், அட்லீஸ்ட் நீ உன் ரூம் விட்டு வராண்டாவுலயாவது வந்து உக்காருன்னு எனக்கு செம பல்பு குடுத்துடுச்சு கொரங்கு.

அப்புறமா, சரி, என்ன தான் பண்றதுன்னு யோசிச்சப்ப தான் காக்டெயில் நியாபகம் வந்துச்சு. ஏற்கனவே அது வாங்கிட்டு வந்த மூணாவதோ நாலாவதோ நாள்ல தான் எனக்கு கீழ விழுந்து கால் உடைஞ்சது. அதுக்கப்புறம் அத எல்லாம் திறந்து விட்டதே இல்ல.

ஹே ஐடியா, நாம காக்டெயில் எல்லாம் திறந்து விடுவோம்னு நந்து ஆரம்பிக்க, எனக்கும் குஷி ஆகிடுச்சு.

(அப்புறம் எல்லாருக்கும் பேரு வச்ச நாங்க, இதுங்க நாலுபேருக்கும் பேரே வைக்கல. ரெண்டு வெள்ளை காக் டெயில் ஜோடிக்கும் சம்யுக்தா, ப்ரதிவின்னு பெயர் வைக்கணும்னு ஏற்கனவே நினைச்சுட்டு இருந்தேன், அந்த க்ரே ஜோடிக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சுட்டு இந்த போஸ்ட் எழுத உக்கார்ந்த பிறகு தான் ஜார்ஜ் மலர்ன்னு பெயர் வைக்கலாம்னு முடிவாச்சு)

சரி, சரி வான்னு அவள கூட்டிட்டு போய் ரூம் எல்லாம் அடச்சு வச்சுட்டு ஃபேன் ஆப் பண்ணிட்டு காக்டெயில் இருந்த கூட்டை தொறந்து விட்டோம்... நான் நந்து எடுத்துட்டு வந்த கேமராவ ரெடி பண்ணி போட்டோ எடுக்க தயாரா இருந்தேன்.

இப்ப நாம கேமராவ காக்டெயில் நோக்கி திருப்புறோம். அதுங்க கூட்டுக்குள்ள இருந்துகிட்டே ஹே ஹே... நாங்களாவது, வெளில வர்றதாவது, போங்கப்பு காமடி பண்ணாதீங்க ரேஞ்சுக்கு ஓரக்கண்ணால எங்களையே பாத்துட்டு இருக்குதுங்க.

நான் மொபைல் எடுத்து நேரம் பாக்குறேன். பத்து நிமிஷம் ஆச்சு, இருபது நிமிஷம் ஆச்சு, ஒருத்தரும் வெளில வரக் காணோம். இது ஆவுறதுக்கு இல்ல, எப்படியும் இதுங்க வெளில வராதுங்க, அந்த ஃபேனை போடுன்னு நந்துகிட்ட சொல்லிட்டு ரூம் கதவையும் தொறந்து வச்சுட்டேன்.

உங்கள கொஞ்சம் பறக்க விடலாம்னு பாத்தா நீங்க என்னமா இப்படி பண்றீங்களேமான்னு நந்து அதுங்க கிட்ட போய் கலாய்க்க, என்ன நினச்சாங்களோ தெரியல சர்ருன்னு ரெண்டு பேரு கூட்டை விட்டு வெளில பறந்துட்டாங்க.

ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிடுச்சு. இதுல ப்ரித்வி விருட்டுன்னு ஹாலுக்கு பறக்க, இங்க மேல ஃபேன் ஓடிட்டு இருக்கு. ஆஹா, இன்னிக்கி என்ன கலவரம் நடக்கும்னு தெரியலயேன்னு பயந்துட்டே அடியே ஃபேனை ஆப் பண்ணுன்னு கத்துறேன். நல்லவேளை நந்து ஓடி வந்து ஃபேனை ஆப் பண்ணிட்டா.

அவ்வ்வ்வ் ஹாலுக்கு பறந்த பக்கி மேல இருக்குற வெண்டிலேட்டர் வழியா வெளில பறந்துட்டா?

நினச்சாலே மனசுக்குள்ள ஒரே திக் திக். மக்கா, ஓடிப் போய் கிட்சன் கதவ மூடுன்னு சொன்னதும் நந்து ஓடிப் போய் அந்த கதவ மூடிட்டு வந்தா. அடுத்து எந்த வழி தொறந்துருக்குன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே மலர் என் ரூமுக்குள்ள பறக்க ட்ரை பண்ண, அவ்வ்வ்வ் அங்க ஃபேன் ஓடுதுன்னு நான் அலறுறேன். ஷப்பா, ஒருவழியா நந்து அந்த கதவையும் மூடிட்டா. இப்ப ஹால்ல மலர் தேமேன்னு தரைல உக்காந்துடுச்சு.

நாம இப்ப இந்தா இந்த பிரித்விய பாப்போம். வெளில வந்த அந்த பக்கி, முதல்ல என் தலைக்கு மேலயே நாலு ரவுண்டு அடிச்சுது. அப்புறம் அப்படியே பெட்ல கிடந்த பொம்மை மேல தொப்புன்னு விழுந்துச்சு. பொம்மை தடால்ன்னு மல்லாந்து விழ, நம்மாளு அது மேல நின்னுட்டு வீரமா போஸ் குடுத்தார்.

நான் கேமரா எடுத்து அத போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். நந்து வந்து என் முன்னால வீரி (வீரனுக்கு பெண்பால் வீரி தான) மாதிரி கை ரெண்டையும் இடுப்புல ஊனிட்டு இங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேக்குறா.

அவளுக்கெல்லாம் பயப்படுற ஆளா நாம. அடியே பொறுமையா உக்காரு. அதான் வெளில வந்துடுச்சுல, கொஞ்சம் போட்டோஸ் எடுத்துப்போம், அப்புறமா என்னப் பண்ணலாம்னு யோசிப்போம்னு சொன்னேன். ம்க்கும் உனக்கு இப்ப போட்டோ ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்னு கழுத்த சுளுக்கிகிட்டா.

நான் போட்டோ எடுத்துட்டு இருக்குறப்பவே திடீர்னு அது பறந்து வந்து என் தோள்ல உக்காந்துச்சு. ஆஹா..... அந்த தருணத்த எப்படி விவரிக்குறது? செம்ம ஃபீல் அது. தோள்ல உக்காந்துட்டு காது பக்கத்துலயே கீ கீ-ன்னு கத்துது.

இது சத்தத்த கேட்ட மலர் மெதுவா ரூமுக்குள்ள தத்தி தத்தி நடந்து வந்து எட்டிப் பாத்துச்சு. ஷ்ஷ்ஷ் நானும் நந்துவும் அசையல. எங்கயும் பின் டிராப் அமைதி. மலர் தத்தி தத்தி வந்தத நான் போட்டோ எடுக்க மெல்ல கைய அசைச்சேன், அவ்வளவு தான், தோள்ல உக்காந்துட்டு இருந்த பிரித்வி பறந்துடுச்சு.

அப்புறம் கொஞ்சநேரம் ரெண்டுபேருமா சேர்ந்து ரூமுக்குள்ள வட்டம் போட்டுட்டே இருந்தாங்க. இவங்க ரெண்டு பேர் பறக்குரதையும் கூட்டுக்குள்ள இருந்துகிட்டே ஜார்ஜும் சம்யுவும் வேடிக்கை பாத்துகிட்டு இருந்தாங்க.

ஓய், நீங்களும் பறங்க, வாங்கன்னு நந்து கூப்பிட்டுப் பாத்தா. யார்கிட்ட?

அதுக்குள்ள மதியம் ஆகிடுச்சு. இவங்கள அப்படியே ரூமுக்குள்ள விட்டு கதவைப் பூட்டிட்டு வெளில வந்தோம். நந்து ஓடிப் போய் மீன் குழம்பு, சம்பா சோறு, பொரிச்ச மீனு, ஆம்லேட், அவுச்ச முட்டை எல்லாம் எடுத்துட்டு வந்தா. அப்படியே வராண்டாவுலயே உக்காந்து நல்லா சாப்பிட்டோம். முருகேஷ் வேற எங்க கூட வந்து சாப்பாட்டுல ஜாயின் ஆகிட்டான்.

ஒரு வழியா கதைபேசி சாப்பிட்டு முடிச்சு, மெதுவா ரூமுக்குள்ள போனா, மறுபடியும் ரெண்டுபேரும் பறக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படியே பறந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது, இனி இவங்கள பிடிப்போம்னு நான் சொன்னேன். ஒரு டவல் எடுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த பிரித்வி மேல போட்டு கப்புன்னு அத புடிச்சுட்டேன். மெதுவா தா வெளில எடுத்து என் கைல வச்சிருந்தேனா, நந்து ஓடி வந்து என்கிட்ட குடுன்னு சொல்லி விருட்டுன்னு அத பிடுங்கிட்டா. பாவம் அது பயந்து அவ கைய நறுக்குன்னு கடிச்சி வச்சிடுச்சு.

ஆ, ஆன்னு அலறிட்டே கைய உதறினவ அத கீழ விடலையே. பாவம் புள்ள கைல குபுக்குன்னு ரெத்தம். நான் பாவமா அவள பாக்குறேன், அவ அதே பாவமா என்னைப் பாக்குறா. கண் எல்லாம் கண்ணீர் நிரம்பிடுச்சு.

அது வேணும்னு கொத்தல மக்கா, அது பயத்துல அப்படி பண்ணிடுச்சுன்னு நான் ரெத்தம் வந்த விரல பிடிச்சுட்டே சமாதானம் பண்ணினேன். நானும் கோபப்படலயேன்னு சொல்லிகிட்டே அவ ப்ரித்விய பாக்குறா, அது பாவமா அவ பக்கத்துல உக்காந்துட்டு அவளையே பாத்துட்டு இருக்கு.

சரி, விடு, இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்லிட்டே வாஷ் பேசின்ல போய் ரெத்தத்த கழுவிட்டு வந்துட்டா. விரல பிடிச்சு பாத்தா, ரெண்டு இடத்துல பலமா கொத்தி பிச்சு வச்சிருக்கு. ஆனா இதுக்காக எல்லாம் கொண்டாட்ட மூடை ஸ்பாயில் பண்ண முடியுமா, ஒரே பேண்ட் எயிட் சுத்திட்டு மறுபடியும் அத கைல தூக்கி வச்சுட்டு போஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டா.

இப்ப தான் ஒரு ட்விஸ்ட். உள்ள உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருந்த சம்யூ வெளில வர, ஜார்ஜ் மட்டும் பெரிய வீர சூரி மாதிரி உள்ளயே உக்காந்துட்டு முறைப்பா பாத்துட்டு இருந்தான்.

ஓய், இன்னா மொறப்பு, நீ வராட்டிப் போடான்னு அவன பாத்து அளவம் காட்டிட்டு நாங்க மூணு பேரையும் வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டோம். இப்ப அவங்களும் எங்க கூட சகஜமாக ஆரம்பிச்சுட்டாங்க.


கைல ஏறி உக்காருறது என்ன, தோள்ல ஏறி உக்காருறது என்ன, விசில் அடிக்குறது என்ன, ஒரே என்ன என்ன என்ன தான்... அப்புறமா மூணு பேரும் ரூம் மேல பறந்து போய் உக்காந்துட்டாங்க. கீழ வாங்க வாங்கன்னு கூப்ட்டா வந்தா தான?


சரி, இனி மூணு பேரையும் பிடிச்சு கூட்டுக்குள்ள விட்ருவோம்னு நினச்சுட்டு இருக்குறப்பவே பெரிய ராஜ நடை போட்டுட்டு ஜார்ஜ் வெளில வந்தான். இவன பாத்தா நந்துவுக்கு ரொம்ப பயம். ஏற்கனவே என்னோட விரல வேற ரெண்டு தடவ கடிச்சு வச்சிருக்கான். அவன் வெளில வந்து கம்பீரமா ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தான்.

கர்ர்ர்ர் கர்ர்ர்ர்ன்னு புலி உறுமுன மாதிரி ஒரு சத்தம் வருது. எங்க இருந்து வருதுன்னு பாத்தா, இந்த பய தான் உருமிட்டு இருக்கான்.

நந்து அத பாத்து கண்ணு எல்லாம் பெருசாகி, பயத்துல சுவரோட சாஞ்சு உக்கார, ஃபேன் ஸ்விட்ச தட்டி விட்டுட்டா.

பதட்டம்னா பதட்டம் அப்படி ஒரு பதட்டம். சம்யூ, ப்ரித்வி, மலர் மூணு பேரும் ஃபேனுக்கு அடியில தான் உக்காந்துட்டு இருக்காங்க. கொஞ்சம் சத்தம் கேட்டு பறந்துட்டாலும் மூணு பேரும் காலி.

வெலவெலத்துப் போய் என்ன செய்றதுனே தெரியாம முழிச்சு, அப்புறம் தான் அவ்வ்வ்வ் ஃபேன் ஆப் பண்ணனும்னு அறிவு வந்து ஆப் பண்ணிட்டோம்.

நல்லவேளை எதுவும் ஆகல. எப்படியோ பொழச்சுட்டாங்க.

அப்புறமா டவல் வச்சே மூணு பேரையும் மெதுவா பிடிச்சு கூட்டுக்குள்ள அடச்சுட்டு ஜார்ஜ்ஜை பாத்தா அவன் ஸ்டைலா நடக்குறத எல்லாம் பாத்துட்டு இருக்கான்.

அந்தப்பயல நான் பிடிக்க மாட்டேன், நீ வேணா பிடின்னு நந்து சொல்ல, நான் மெதுவா டவல தூக்கி மேல போட, முரடன் மாட்டிகிட்டான்....

ஹே.... ஹே.....

அப்புறம் என்ன, வேர்த்து விறுவிறுத்து, ஒரு வழியா ரூம் விட்டு வெளில வந்தோம்...

நாளைக்கும் நேரம் கிடச்சா இப்படியே விளையாடனும்..



Friday, 26 February 2016

மிருதன் - திரைவிமர்சனம்



ராஜாஸ்மால்ல உக்காந்து செத்துப்போன பக்கெட் சிக்கனும் இத்துப்போன பர்கரும் சாப்ட்டுட்டு இருந்தோம். அடுத்து எப்படி நேரத்த போக்குறதுன்னு புரியாம திடீர்னு அங்கயே ஒரு படம் பாக்கப் போலாம்னு முடிவாச்சு. எனக்கு படம் கொஞ்சம் ஜாலியா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. ஆனா இருக்குற மூணு தியேட்டர்ல என்னென்ன படம் ஓடுதுன்னே பாக்காம டக்குன்னு மிருதன் வித்யாசமா இருக்காம், அங்கப் போவோம்னு சொல்ல, சரின்னு தலையாட்டிட்டேன்.

தியேட்டர்க்குள்ள பத்து நிமிசத்துக்கு முன்னாடியே எண்டர் ஆகி, தேமேன்னு வெள்ளை ஸ்க்ரீனையே வெறிச்சுட்டு இருந்தப்ப பின்னால இருந்து அதென்னவோ சோம்பி படமாம், ஜெயம் ரவி சோம்பியா மாறிடுவாராம் அப்படின்னு ஆச்சர்யமான குரல்கள் கேட்டுட்டு இருந்துச்சு. சரிதான், அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு சீட்ல சாஞ்சு உக்காந்தாச்சு.

படம் ஆரம்பிக்குறப்பவே பயோ ஹசார்ட் ஏத்திட்டு வந்த லாரில இருந்து ஒரு ட்ரம் உருண்டு வெளில விழுது. அதுல என்னவோ வைரஸ் இருக்கு. அத ஒரு நாய் சாப்ட்டுடுது. சாப்ட்ட அஞ்சோ பத்தோ நிமிசத்துல அது உடம்பெல்லாம் மாறி, வெறிப்புடிச்சு, ஒருத்தர கடிக்க, அவர் அடுத்த ஆள கடிக்கன்னு, மளமளன்னு வைரஸ் தாக்கின மனுசங்க பெருக ஆரம்பிக்குறாங்க.

கமலோட தசாவதாரம் வந்தப்பவே எனக்கு கொஞ்சம் நெருடல குடுத்த ஸ்கிரிப்ட் அது. எந்த வைரஸ் இவ்வளவு வேகமா பெருகும்னு தெரியல. சரி, எப்படியோ பெரிகிடுச்சு. இவங்க காமிக்குற ஸ்பீடுக்கு அந்த வைரஸ் பெருகியிருந்தா ரெண்டே நாள்ல மொத்த மக்கள் தொகையும் காலி ஆகியிருக்கணும்.

சரி, அதெல்லாத்தையும் விடுங்க, இந்த கேள்விய அங்க வச்சே கேட்டதுக்கு, லாஜிக் எல்லாம் பாத்து ஓவர் ஸ்மார்ட் ஆகப் பாக்காதன்னு திட்டு விழுந்துச்சு.

ஆனா, நிஜமாவே அந்த அஞ்சோ பத்தோ நிமிஷங்கள் கொஞ்சம் பயமாவே தான் இருந்துச்சு. அம்மாவ கடிச்ச புருசன ரூமுக்குள்ள தள்ளி பூட்டிட்டு அம்மாவுக்கு என்னாச்சோன்னு பதட்டத்தோட ஓடி வந்து அம்மாவ தூக்கினா அம்மா வெறியோட பொண்ணு மேல அம்மா பாய, எதிர்பாத்ததுதான்னாலும் குப்புன்னு அய்யய்யோன்னு மனசு பதறுறத தடுக்க முடியல.

அம்மாகிட்ட இருந்து தப்பிச்சு ரோட்டுக்கு ஓடி வரப் பொண்ண அங்க நிக்குற ஆண்கள் சில பேரு வேட்டையாட நினைக்குறாங்க. ஏண்டா, அதுவே பயந்து ஓடி வருது, ஒரு பொண்ண விட மாட்டீங்களாடான்னு மனசு கேக்காமலும் இல்ல. ஆனா நான் உக்காந்துட்டு இருந்த சீட்டுக்கு பின்னால மாட்டிகிட்டானுங்க நல்லா வேணும்னு குரல் கேட்டதும், அப்போ அவனுங்க ரேப் பண்ணி தான் மாட்டிக்கணுமானு தலைல அடிக்கணும்னு நினச்சேன், ஆனா அடிக்கல.

அப்புறம் ஜெயம் ரவி. ட்ராபிக் போலிஸ். ஒரு பொண்ண பாக்குறார், உடனே லவ்ல விழுறார். ஆனா அந்தப் பொண்ணு இன்னொருத்தருக்கு நிச்சயமானது தெரிஞ்சதும் செம கடுப்புல திரியுறார். இவர லவ் பண்ணலன்னு லெக்ஷ்மி மேனன் கிட்ட ஜெயம் ரவி நடந்துக்குற விதம் வெறுப்ப தான் குடுக்குது. அந்த முன்னாள் காதலியே பாட்டுத் தேவ தானா? அதான் அந்த பொண்ணு காதலிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி முன்னாள் காதலி ஆக முடியும்?

ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் நடந்த சண்டை கொஞ்சம் ரசிக்க வச்சுது. என்ன தான் அமைதியா இருந்தாலும் கூட வேலைப் பாக்குறவருக்கு ஒரு பிரச்சனைனா உடனே இறங்கி மந்திரி தொண்டர்கள அடிச்சது செம.

இனி அடுத்து என்னன்னு யோசிக்குறதுக்குள்ள ஊருக்குள்ள எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணிடுறாங்க. ஜெயம் ரவி கைலயும் அவர் பிரெண்ட் கைலயும் ஆளுக்கொரு துப்பாக்கி கிடைக்குது. அதுக்கப்புறமா ரெண்டு பேரும் படம் முழுக்க டொப்பு டொப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. இதுல ஜெயம் ரவி குறி பாத்துச் சுட, அவர் நண்பர் கன்னாபின்னான்னு சுட்டுட்டு “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு கேனத்தனமா சிரிக்குறார். அந்த இடத்துல எல்லாம் கைத்தட்டல் தியேட்டர்ல பறக்குது.

அதுவும் ஒரு தடவ ஒரு வைரஸ் மனுஷன் ஜெயம் ரவிய கடிக்க வர, தப்பிக்க வேற வழியே இல்லன்னு நாம எல்லாம் கண்ணு முழி பிதுங்க பாத்துட்டு இருக்குறப்பவே அந்த நோயாளிய டொப்புன்னு சுட்டு வீழ்த்திடுறாரு அவர் பிரெண்ட். அடடேன்னு நாம கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுருக்க மாட்டோம், அதுக்குள்ள அவர்கிட்டயிருந்து அவரோட பேவரைட் டயலாக் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு வரும். சரியா தானடா சுட்டன்னு ஜெயம் ரவி மாதிரியே நாமளும் கேட்டா, நான் அங்க சுட்டேன், குண்டு இங்க பட்டுடுச்சுன்னு சொல்லி நம்மள குபீர்னு சிரிக்க வச்சுடுறார்.

ஆனாலும் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்ச நேரம் முன்னாடி அவர் காலை வைரஸ் மனுஷன் ஒருத்தன் பிடிச்சு இழுக்க, எப்படியோ ஜெயம் ரவி காப்பாத்திடுவார். அவர் பேண்ட்ல உள்ள ரத்தக்கறைய பாத்துட்டு, “ஒரு வேளை என்னை அது கடிச்சிருந்தா வலிக்காம சுட்டு கொன்னுரு மாப்ள”ன்னு சொல்லிட்டே துப்பாக்கிய குடுக்குறப்பவும், காயம் எதுவும் இல்லன்னு தெரிஞ்சதும் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு சொல்றப்பவும் நம்மள கண் கலங்க வச்சிடுறார்.

எனக்கு இந்த படத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. ஊட்டி முழுக்க வைரஸ் பரவியிருக்கு, யாரும் ஊரை விட்டு வெளில போகக் கூடாது, அப்படி போக விட்டா வைரஸ் பரவிடும்னு தடை போடுது அரசாங்கம். அப்படி தடைய மீறி போறதுல ஒரு டாக்டருக்கு காயம் இருக்குன்னு தெரிஞ்சதும் அவர வண்டியில இருந்து கீழ தள்ளி விட்டுடுறாங்க. ஆனா கோவைக்கு இந்த டாக்டர் குழு போய் சேர்ந்ததும் எப்படி அத்தன பேரும் வைரஸ் மனுசங்களா மாறி போயிருந்தாங்க? அவ்வளவு வேகமாவா கடிக்குறாங்க?

ஆரம்பத்துல மீட்டிங் போட்டு போலிஸ் கைல துப்பாக்கிய குடுக்குற போலிஸ் டிபார்ட்மென்ட் அப்புறம் எங்க போச்சுனே தெரியல. அந்த வைரஸ் மனுசங்களுக்கு எல்லாம் தண்ணிய கண்டா பயம்னு லெக்ஷ்மி மேனனுக்கும் ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் ஆரம்பத்துலயே தெரியும், ஆனா அவங்க ஏன் இத போலிஸ் டிபார்ட்மென்ட்கோ இல்ல அரசாங்கத்துக்கோ சொல்லவேயில்ல?

ஊருக்குள்ள மொத்தப்பேரும் வைரசால பாதிக்கப்பட, ஹீரோவும் அவர் சகாக்களும் மட்டும் தப்பிச்சுட்டு இருக்காங்க. அதுவும் அவங்கள எல்லாரையும் தனிமனுசனா ஜெயம் ரவி மட்டும் தான் காப்பாத்துறார்.

மொத்தத்துல சொதப் சொதப்ன்னு சொதப்பியிருக்குற படத்துல க்ளைமாக்ஸ் கொஞ்சம் ஓகே.

அதெப்படி ஜெயம் ரவி அத்தன பேரையும் ஒத்த ஆளா அடிச்சுப் போட்டுட்டு லெக்ஷ்மி மேனன காப்பாத்துறார்னு மனசுக்குள்ள சந்தேகம் வராம இல்ல. அடப்போமா, இத்தன நேரமும் அவர் மட்டும் தானே போராடிட்டு இருக்கார், இதெல்லாம் லாஜிக் பாக்க கூடாதுன்னு என் மனசாட்சியே என்னை அடக்கி வச்சதால, அத தூக்கி அப்படி ஓரமா வச்சுட்டு க்ளைமாக்ஸ் சீன ரசிக்க ஆரம்பிச்சேன்.

பெத்த அப்பா, கட்டிக்கப் போறவன் முதல்கொண்டு அத்தன பேரும் கைவிட்ட நிலைல யாருடா இவன், நம்மள காப்பாத்த வர்றான்ன்னு ஆச்சர்யமா லெக்ஷ்மி மேனன் பாக்குறது ரசிக்குற மாதிரி இருந்துச்சு. இவன் தன்னை காதலிச்சிருக்கான்னு தெரிய வர்றப்ப அவங்க முகத்துல காட்டுற பாவனைகள் சூப்பர்.



மொத்தத்துல சென்னைய நோக்கி வைரஸ் தாக்கின மிருதன் வந்துட்டு இருக்கானாம். சென்னை மக்கள் மட்டுமில்ல நாமளும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்துக்கனும். அட்லீஸ்ட் பார்ட் டூ-வையாவது கொஞ்சம் லாஜிக்கோட எடுங்கயா.