Sunday 29 July 2012

சிதைக்கப்பட்ட தாய்மை...!

மனமென்னும் கண்ணாடியை
ஊடுருவி பார்க்க இயலா
இரும்பு நெஞ்சத்தவளே...!
கிள்ளையென நீ கையெடுத்து
கொஞ்ச வேண்டிய தங்க மேனியை
இதோ உனக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறேன்...
நன்றாக ஊடுருவிப் பார்...!

கட்டாயப் பிடியில் அறுத்தெறிந்த
உறவாய் உன்முன் உறைந்திருக்கும்
என்னை சற்றே கண்திறந்து
நீயும் பார்...!

உணர்வுகள் பிடுங்கி என் துடிப்பொழித்து
நீ செய்த ஒரு இரக்கமில்லா கொலை
என் கண்ணாடி மேனியை
ஊருக்கு இன்று அடையாளம் காட்டுகிறது...
ஒரு நிமிடம் விழியசைக்காமல்
வேடிக்கைப் பார்...!

உன் ஆலிங்கன ஆசைக்கு
மவுன சாட்சியாய் உதித்து விட்ட
என்னை மரத்துப் போய் நீயும்
மரிக்கச் செய்த நியாயமென்ன?

சிறு கத்தி கீறிய சுட்டுவிரல் கண்டு
துடிதுடிக்கும் நீ...
தாயென சுட்டிய இதயத்துடிப்படக்கி
மொத்தமாய் அறுத்தெறிந்தது ஏன்?

ஆசையோடு ஒருமுறை நீ
என்னை கையிலெடுத்து தான் பாரேன்...
என்ன... அருவருக்கிறதா? அருவருக்கிறதா?

மகவென ஆசையோடு
கொஞ்ச வேண்டிய என்னை
குருதிக் கூழ் என முகம் சுளித்து
வெறுக்கும் நிலைக்கு தள்ளியவளே...!

கருவறைக்கும் பாத்திக்கட்டி
பயிராய் வளர்ந்த என்னை
களைப்பறிக்கத் துணிந்து
ரெத்தமும் சதையுமாய்
களையென அறுத்தெறிந்தாயே
உன் உயிர் விதை நானென்பதை
மறந்து விட்டு...!

பார்...! உனக்கும் எனக்குமான
ஒரே சாட்சியான தொப்புள் கொடி கூட
உன்னோடான தன்னுறவை அறுத்தெறிந்து
என்னோடு தஞ்சமடைந்து விட்டது...!

என்னை பாரமென எண்ணி
மரணக்குழிக்குள் தள்ளியவளே...
மரணக்குழிக்குள் சென்றது நான் மட்டுமல்ல...
உன் தாய்மையும் தான்...!

1 comment:

  1. அடப்பாவி பக்கி ,ஏன் இந்த ருத்திர தாண்டவம் ?

    ReplyDelete