Thursday 27 August 2015

பறவைகள் காதல்



அம்மா எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவா. பறவைகளும் சரி விலங்குகளும் சரி, அவங்களுக்கான இருப்பிடம் எப்பவுமே இயற்கை தான், அத கட்டுக்குள்ள அடக்க நினைக்குறது தப்புன்னு.

ஆனாலும் வீட்ல நிறைய விலங்குகள் உண்டு. ஆடு, மாடு, முயல், நாய், பூனைன்னு ஒரு சரணாலயமா தான் எங்க வீடு இருக்கும். இதுல மாடுகள ரொம்ப பெருசானா கட்டிப் போடுவாங்க. மத்தப்படி ஆடுகள என்னிக்கும் கட்டிப் போட்டது இல்ல. எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஏக்கர்களுக்குள்ள சுதந்திரமா சுத்திட்டு இருக்கும். அதே மாதிரி தான் முயல்களும். திறந்து விட்டுட்டா தானா போய் புல் மேஞ்சுக்கணும், அப்புறம் அதுகளே கூட்டுக்கு வந்துடும். சில முயல்கள் தோப்புக்குள்ள குட்டிப் போடுறதும் உண்டு. அத நாய்ங்க பிடிச்சுடக் கூடாதுன்னு அம்மாவுக்கு பதற்றமாவே இருக்கும். அதனால தான் ஒரே ஒரு நாய், அதுவும் இத எல்லாம் பாத்துக்காக்குற நாய வளர்த்தோம். பூனைங்க எப்பவுமே சோம்பேறிங்க, வீட்டு பால், மீன்ன்னு சாப்பிட்டு வேட்டைக்கு போகணும்னா அலுத்துக்கும்.

இத்தன விலங்குகள் இருந்தாலும், பறவைகள்ன்னு பாத்தா கோழி, வாத்து உண்டு. அதுவும் நிறைய வகைகள்ல இருக்கும். அது போக புறாக்களும் உண்டு. காலைல தொறந்து விட்டா, சாயங்காலம் அரிசி, நெல், தினை, கம்பு, பருப்பு, உளுந்துன்னு எதையாவது போடுறப்ப தான் திரும்பி வரும்ங்க. இவ்வளவும் போதாதுன்னு கூண்டுக்குள்ள வளர்க்குற பறவைகளும் அப்பா வாங்க ஆரம்பிச்சாங்க.

அப்ப தான் நான் அம்மா கிட்ட போய் கேட்டேன், பறவைகள் எல்லாம் அடைச்சி வைக்க கூடாதுல அம்மா, அப்போ இது மட்டும் சரியான்னு. அம்மா சொல்லுவா சரியில்ல தான். ஆனா இந்த பறவைகள வெளில தொறந்து விட்டா இதுகளால தனிச்சி வாழ முடியாது, ஒண்ணு, இத நாம வளர்க்க நினைக்க கூடாது, இல்லனா நிறைய வசதி செய்து குடுத்து பாத்துக்கணும்ன்னு. அத எல்லாம் நல்லா பாத்துக்க அப்பா எப்பவுமே சளைச்சதே இல்ல.

லவ் பேர்ட்ஸ்குன்னு தனியா ஒரு பெரிய கூண்டு உண்டு. அது ஒரு ரூம் சைசுக்கு, மழையும் பனியும் அடிச்சா தண்ணி உள்ள போகாத மாதிரி இருக்கும். ஒரு ஆள் உள்ள போய் தாராளமா கூண்டை சுத்தப் படுத்தலாம். உள்ளயே தொட்டியில செடி, கொடி வகைகள் எல்லாம் வச்சிருப்பாங்க. அதெல்லாம் முட்டை போட்டு குஞ்சு பொறிக்க அங்கங்க பானை வச்சு, ஒரு இயற்கை வீடு மாதிரியே தான் இருக்கும்.

லவ் பேர்ட்ஸ் போக, இன்னும் நிறைய வகைகள், ஒவ்வொண்ணுக்கும் தனித் தனியா கூண்டுகள். ரொம்ப சின்ன வயசுல அத எல்லாம் பாத்ததால எனக்கு அதுகளோட பெயர்கள் எல்லாம் நியாபகம் இல்ல. ஆனா என் மனசுல ஆழமா பதிஞ்சு போன ஒரு பறவை ஜோடி உண்டு. அது ஒரு டயமன்ட் டவ் ஜோடி.

டயமன்ட் டவ் பாக்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அழகா இருக்கும். புறாவோட மினியேச்சர் வகை தான் இந்த டயமன்ட் டவ். பெரிய பெரிய புறாக்கள பாத்துட்டு இத முதல் தடவையா பாத்தப்ப எனக்கு ஒரே ஆச்சர்யம். அதனால தானோ என்னவோ அது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.

இந்த டயமன்ட் டவ் ஜோடிய ஒரு தனி கம்பி வலை உள்ள கூண்டுக்குள்ள போட்டுருந்தாங்க. அதுல ரெண்டும் ரெஸ்ட் எடுக்க ஒருபக்கமா ஒரு மரப்பலகை வச்சிருந்தாங்க அப்பா. அதுங்க ரெண்டுமே ரொம்ப சாதுவா இருக்கும். ஒண்ணுகொண்ணு அனுசரணையா எப்பவும் பக்கத்து பக்கத்துலயே உக்காந்துட்டு இருக்கும். ஒரு நாள் கூண்டு பக்கத்துல நான் போய் பாக்குறப்ப, பெண் டயமன்ட் டவ் அந்த மரப்பலகைல ஒரு முட்டை விட்டுருந்துச்சு. முட்டை உருண்டு கீழ விழுந்துடாதான்னு ஒரு பயம் எனக்கு. ஆனா அதுவோ கம்பி வலையை ஒட்டி படுத்துகிட்டு முட்டைய அடைகாக்கத் தொடங்கிச்சு.

ஒரு பத்து நாள் போயிருக்கும். திடீர்னு அந்த பக்கமா ஒரு வல்லூறு வந்திருக்கு. எங்க அப்பம்மா தூரத்துல இருந்து இது ஏன் இப்படி நம்ம காம்பவுண்ட் மேல உக்காந்துருக்குன்னு யோசிக்குறதுக்குள்ள அந்த வல்லூறு அந்த பெண் டயமன்ட் டவ் தலைய கொத்தி தனியா பிச்சுகிட்டு போய்டுச்சு. அப்படியே துடிச்சு, அடைகாத்துகிட்டு இருந்த முட்டைய கீழ விழ விடாம அணைச்சுட்டே செத்துப் போச்சு அந்த பெண் டயமன்ட் டவ்.

இனி மேல என்ன பண்ண முடியும்? கம்பியை ஒட்டி அது படுத்துருந்ததால ஈசியா அது வல்லூறுக்கு இரையா போச்சு. அந்த பெண் டயமன்ட் டவ்வ எடுத்து அடக்கம் பண்றப்ப, முட்டைய என்னப் பண்ணணு யோசிச்சு, எதுவுமே பண்ணாம அப்படியே வச்சிட்டாங்க அப்பா. கொஞ்ச நேரத்துல முட்டைல வந்து அந்த ஆண் டயமன்ட் டவ் படுத்துடுச்சு. அப்பா, ஒரு சாக்கு எடுத்துட்டு வந்து, அத கிழிச்சு, அந்த கூண்டுல தொங்க விட்டு டயமன்ட் டவ் வெளில தெரியாத மாதிரி மறைச்சு விட்டுட்டாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, அந்த முட்டை பொரிச்சுது. சின்ன குஞ்சு டயமன்ட் டவ் வெளில வந்துச்சு. அதுக்கு சாப்பாடு குடுத்து பத்ரமா பாத்துகிச்சு அதோட அப்பா. ரொம்ப பசிச்சா ரெண்டு குட்டி சிறகையும் படபடன்னு அடிச்சுட்டு கீங்கீங்ன்னு கத்தும், உடனே அப்பா பறவை ஓடி வந்து சாப்பாடு ஊட்டும். அப்பாவோட அரவணைப்புல அந்த சின்ன டயமன்ட் டவ் ரொம்ப வேகமா பெருசாகிடுச்சு. அது பெருசானதுக்கு அப்புறம், அந்த ஆண் டயமன்ட் டவ் சோகமாக ஆரம்பிச்சுது. அப்பப்ப அதோட குழந்தை அன்பா பக்கத்துல இருந்து தடவி குடுத்து ஆறுதலா இருந்தாலும் ஒரு நாள் எதோ ஒரு சோகத்துல அந்த ஆண் பறவையும் செத்தே போச்சு.

அந்த குஞ்சு வளர்ந்து பெருசானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது, அது பொண்ணுன்னு. பக்கத்து ஊர்ல ஒரு பையன் கிட்ட ஆண் டயமன்ட் டவ் ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டு அப்பா அத அவன் கிட்ட குடுத்துட்டாங்க. அந்த கூண்டு ரொம்ப நாள் வெறுமையாவே கிடந்துச்சு. அத பாக்குறப்ப எல்லாம் மனசுக்குள்ள ஒரு வலி இருந்துட்டே இருக்கும்.

..................................................

நேத்து, திருநெல்வேலி போயிட்டு வந்தப்ப ஒரு கடைல டயமன்ட் டவ் இருக்குறத பாத்தேன். உடனே வாங்கணும்னு கை பரபரத்துது. ஏற்கனவே ரூம்ல ரொம்ப தூசு பறக்குது, எல்லா பறவைகளையும் வெளில கொண்டு போய் வைக்கப் போறியா இல்லையான்னு மிரட்டிட்டு இருக்காங்க. இதுல டயமன்ட் டவ் வாங்கி எங்க கொண்டு போய் விடுறது?

வேணா பாருங்க, ஒருநாள் திடீர்னு கிறுக்கு புடிச்சி, ஒரு ஜோடிய வாங்கிட்டு வந்துடப் போறேன்...



.

3 comments:

  1. அட எங்களைப் போல! உங்கள் விவரணம் அருமை...ஒரே சிந்தனை ஆதலாம் மிகவும் ரசித்தோம் பதிவை...உங்க வீட்டுத் தோட்டம் அப்படியே எல்லாத்தோடயும் கண் முன் விரிந்தது....

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சதுக்கு தேங்க்ஸ். தோட்டம், பறவைகள் விலங்குகள்ன்னு வாழுறது ஒரு குடுப்பினை இல்லையா

      Delete
  2. அழகாய் காட்சிகளை கண்முன்னே விரிக்கும் பகிர்வு...
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete