Tuesday 26 June 2012

நினைவெல்லாம் நீ...!


உனக்கென மடல் வரைய
ஆவலாய் வந்தமர்ந்தேன்...
மனம் முழுக்க உன் நினைவு
சுகமான அவஸ்தையாய்
உயிர் வருடி சென்றது...!

உதட்டோர புன்னகை
உன் பெயரை பலமுறை
உச்சரித்து புளகாங்கிதம் கொண்டு
அதரத்தில் பூ மலர செய்தது...!

என் ஆணவமும் அதிகாரமும்
இன்றென்னை அலட்சியம் செய்து
உன்னை நினைத்து
பனிக்கூழ் சுவைக் கூட்ட
மெல்ல மெல்ல உருக துவங்கின...!

யார் அழைத்தாலும்
நீயே அழைத்து போல்
பிரம்மை வந்து இம்சித்து
கொல்கிறது...!

சின்னத்திரையில் அலைபேசி
அழைத்தாலும் நீ எனை
அழைப்பதாய் எண்ணி
எடுத்து விட கை நீட்டுகிறேன்...!

உன் ஒற்றை குருஞ்செய்தி
வருமென காத்திருந்து
கண்கள் இன்னும்
வெறித்த வண்ணம் தவமிருக்கின்றன...!

ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
நியாபக அலைக்குள்
உன்னை சுருட்டி
என்னை வெளித் தள்ளியது...!


கரைந்து கொண்டே இருக்கிறது
உனக்காக நான் சேமித்து வைத்த
பொன்னான தருணங்கள்...!

மனமோ கோபத்தில் உன்னை
கடிந்துக் கொள்கிறது...
தவிக்க விட்ட உன்னை
பரிதவிக்க செய்ய
வீரியம் கொண்டு விட்டொழிந்தேன்
உனக்கும் எனக்குமான
காற்று வழி தூதை...!

இம்முறை நீ
அழைத்தே விட்டாய்...
தனிச்சை செயலாய்
கைபேசி பாய்ந்தெடுத்து
சொல்லுடா... என்கிறேன்
எதுவுமே நடவாதது போல்...!


3 comments:

  1. உதயாவின் கவிதைகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒரு தனித்துவம் தென்படும். அது இக் கவிதையிலும் வெளிப்படுகிறது. ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
    என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
    நியாபக அலைக்குள்
    உன்னை சுருட்டி
    என்னை வெளித் தள்ளியது...!

    இதில் ஒரு புதுவித அழகு தெரிகிறது. கவிதை வடிவம் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... உங்கள் விமர்சனமும் தனி அழகு

      Delete