Saturday 7 July 2012

நீ உணர்த்தும் நான்...


இப்பொழுதெல்லாம் “ஏந்த்ரிமா” என்ற
மழலை மிழற்றலோடு உன்னைக்
கொஞ்சியே என்
விடியல் விழிக்கிறது...!

நீ மட்டும் போதுமென்ற
உன் கெஞ்சல் வார்த்தை
என் பிராண வாயு நிறுத்தி
இதய இயக்கத்தை
கைப்பற்றி சிரிக்கிறது...!

உன்னோடு மவுனித்திருக்கும் வேளையில்
உன் முதுகோர வியர்வையாய்
கூடவே ஒட்டி விட துடிக்கிறேன்...!

உன்னிடத்தில் பயணிக்கும் போதெல்லாம்
என் தூரங்கள் ஒரு சாகசப் பட்சியாய்
விருட்டென கடந்து செல்கிறது...!

காத்திருந்து காத்திருந்தே
“கைப்பிடித்து பயணிப்பாயா” என
நீ கேட்ட நொடி பொழுது
நின்று விட்ட கடிகாரமாய்
இன்னும் என் மனத்துடிப்பில்...!

என் இதய துடிப்பு ஒவ்வொன்றும்
உன் உதடு உச்சரிக்கும்
என் பெயர் கேட்டே துடிக்க துவங்கி
உன் பெயரை பிரசவித்து
சுவாசம் நெருங்கி மூச்சிரைக்க வைக்கிறது...!

காதலை வார்த்தைகளால் வடிக்காமல்
காதலால் வடித்து, இம்சித்து
தூங்கும் என்னை அருகிலிருந்து
நீ ரசிப்பதற்காகவே மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் காதல் செய்கிறேன்...!









2 comments: